தஞ்சையில் ஆற்றில் விளையாடிய தந்தை.. வீடியோ எடுத்த மகள்கள்.. கனவில் கூட நடக்கக்கூடாத சம்பவம்
தஞ்சாவூர்: தஞ்சையில் குழந்தைகள் கண் முன்னே தந்தை ஆற்று நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளார். ஆற்றில் குதித்து குளித்த போது, நீரின் வேகம் அதிகமாக இருந்ததால், இழுத்துச் செல்லப்பட்டுள்ளார். ஆனால் குழந்தைகளோ, விளையாடுனது போதும், மேல வந்திடு டாடி என்று கூறியபடி, தந்தை நீரில் தத்தளிப்பதை வீடியோ எடுத்துள்ளனர். திருப்பூரில் இருந்து சொந்த ஊருக்கு வந்தவர்களுக்கு நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.
தஞ்சாவூர் மாவட்டம் மேல உளூர் கிராமத்தை சேர்ந்த 36 வயதாகும் சவுந்தரராஜன் திருப்பூரில் உள்ள நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சரண்யா, 33. இவர்களுக்கு நிதிஷா, 12, நிவேதா, 14, என்ற மகள்கள் உள்ளனர். குழந்தைகள் திருப்பூரில் படித்து வருகிறார்கள். சவுந்தரராஜன், தனது குடும்பத்தினருடன் பொங்கல் விழாவிற்காக நேற்று முன்தினம் மாலை திருப்பூரில் இருந்து சொந்த ஊரான தஞ்சாவூர் மாவட்டம் மேல உளூருக்கு வந்துள்ளார்.

அவரது வீட்டின் அருகே கல்லணை கால்வாய் செல்கிறது. இதில் குளிக்க விரும்பிய சவுந்தரராஜன், தனது மகள்களுடன் கல்லணை கால்வாயில் கிளை ஆறான கல்யாண ஓடை பகுதிக்கு சென்றார். அப்போது ஜாலியாக பேசி சிரித்துக் கொண்டிருந்த தந்தை, ஆற்றில் குதித்து குளித்தார். அதனை மகள்கள் வீடியோவாக எடுத்துள்ளனர். அப்போது தனது தந்தை ஆற்றில் விளையாடி குளிப்பதை கரையில் நின்று வேடிக்கை பார்த்த படி வீடியோ எடுத்துக் கொண்டிருந்த போது, திடீரென சவுந்தரராஜன் நீரின் வேகத்தில் அடித்து செல்லப்பட்டார்.
தந்தை நீரில் இருந்து வெளியே வரவில்லை. விளையாடுனது போதும் டாடி மேல வந்துரு என்று மகள்கள் குரல் எழுப்பினார்கள். என்ன டாடி அதுக்குள்ள அங்க போயிட்டாரு என்று கூறியபடி பார்த்துள்ளார்கள். அப்போதுதான் தந்தை ஆற்றில் மூழ்கியது தெரியவந்தது. இதை கண்டு மகள்களும், தாயும் கதறி அழுதனர்.

உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதேநேரம் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி,நேற்று முன்தினம் இரவு 10:30 மணிக்கு சவுந்தரராஜன் உடலை வீரர்கள் மீட்டனர். இது குறித்து, ஒரத்தநாடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். மகள்கள் கண் முன்னே ஆற்றில் குதித்த தந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சொந்த ஊருக்கு பொங்கல் பண்டிகையை கொண்டாட சென்றவரகள், ஆற்றில் குளிக்க போகிறீர்கள் என்றால், அங்கு என்ன நிலவரம் என்பதை அறியாமல் குதித்து விளையாடாதீர்கள். சுழல் அல்லது ஆற்றின் வேகம், பாறை என பல பிரச்சனைகள் உள்ளன. ஆற்றில் இறங்கும் போது கவனமாக இருக்க வேண்டும். ஆற்றின் அன்றைய சூழல் தெரியாமல் ஆபத்தை தேடிக்கொள்ள வேண்டாம்.












Click it and Unblock the Notifications