லிவிங் டூ கெதர் முறையில் வாழ்ந்து விட்டு ஏமாற்றினார்.. காரைக்கால் காவல் நிலையத்தில் இளம்பெண் தர்ணா
தஞ்சை: 4 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து விட்டு திருமணம் செய்ய மறுத்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காரைக்கால் போலீஸ் நிலையம் முன்பு பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த 35 வயது பெண் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவர்.
இரண்டாவது திருமணம் செய்வதற்காக அவரது பெற்றோர் பெண்ணுக்கு வரன் தேடிக்கொண்டு இருந்தனர்.

திருமணம் செய்யாமல்..
இதை அறிந்த மரிலூர்து ராஜ் (வயது 44) என்பவர் தொலைபேசி மூலம் 35 வயது பெண்ணுக்கு அறிமுகம் ஆகி இருக்கிறார். இவர்கள் நாளடைவில் நெருக்கமாகியுள்ளனர். மரிலூர்து ராஜும் தன்னை திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்ததால் அவருடன் திருமணம் செய்யாமல் 4 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்துள்ளார். தன்னை முறைப்படி திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று இளம் பெண் கூறும் போதெல்லாம் மரிலூர்துராஜ் தட்டிக்கழித்து வந்துள்ளார்.

காவல் நிலையத்தில் புகார்
இதனால், மனவேதனை அடைந்த பெண் திருமணம் செய்யாமல் ஏன் தட்டி கழிக்கிறார் என்பது குறித்து தனக்கு தெரிந்தவர்கள் மூலம் விசாரித்து இருக்கிறார். அப்போது மரிலூர்துராஜுக்கு ஏற்கனவே திருமணம் ஆகியிருந்த தகவல் கிடைத்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த பெண் தான் ஏமாற்றப்பட்டு இருக்கிறோம் என்பதை உணர்ந்துள்ளார். இதையடுத்து, மரிலூர்துராஜ் மீது காரைக்கால் காவல் நிலையத்தில் புகார் அளித்து இருக்கிறார்.

வீடியோ காலில் மிரட்டல்
காவல் நிலையத்தில் புகார் அளித்ததால் பயந்து போன மரிலூர்து ராஜ், போலீசில் அளித்த புகாரை வாபஸ் பெற்றால் திருமணம் செய்து கொள்வதாக கூறியதாக சொல்லப்படுகிறது. இதனை நம்பி பெண்ணும் புகாரை வாபஸ் பெற்றிருக்கிறார். ஆனால், முன்பு சொன்னபடி நடந்து கொள்ளாத மரிலூர்துராஜ், இனிமேல் மீண்டும் போலீசிடம் புகார் அளித்தால் கொலை செய்து விடுவேன் என்று வீடியோ காலில் துப்பாக்கியை காட்டி மிரட்டியிருக்கிறார்.

தர்ணாவில் ஈடுபட்ட பெண்
இதையடுத்து, காரைக்கால் காவல் நிலையத்தில் மீண்டும் புகாரளிக்க பெண் சென்றார். ஆனால், அங்கு போலீசார் புகாரை வாங்க தாமதப்படுத்தியதாக சொல்லப்படுகிறது. இதனால், போலீஸ் நிலையம் முன்பு இளம்பெண் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால், போலீஸ் நிலையம் பரபரப்பாக காணப்பட்டது. இதையடுத்து பெண்ணை சமாதானப்படுத்திய போலீசார் அவரிடம் உள்ள ஆதாரங்களை வாங்கி விசாரணையை தொடங்கினர்.

தீபாவளி துப்பாக்கி
மரிலூர்துராஜ், வீடியோ காலில் காட்டி மிரட்டியது தீபாவளி துப்பாக்கி என்பது தெரியவந்தது. போலீஸ் நிலையத்தில் இளம்பெண் நடத்திய திடீர் தர்ணா போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே மேலும் 3 மாதங்களில் திருமணம் செய்து கொள்வதாக மரிலூர்துராஜ் இளம்பெண்ணிடம் பேசும் ஆடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications