வைகை ஆற்றில் அதீத வெள்ளம்.. பொதுமக்களுக்கு ஆட்சியர் எச்சரிகை...!
மதுரை: வைகை ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி மதுரை மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ள நிலையில், காவல்துறையினர் கரையோரங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Recommended Video
தேனியில் உற்பத்தியாகும் வைகை ஆறு ஐந்து மாவட்ட மக்களின் பாசன மற்றும் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து ராமநாதபுரம் மாவட்டத்தில் வங்கக்கடலில் கலக்கிறது. இந்நிலையில் வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து நல்ல மழை பெய்து வருகிறது. மூல வைகை ஆற்று நீரோடு திண்டுக்கல், தேனி, மதுரை, உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக கிளை ஆற்று நீரும் சேர்வதால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இன்று காலை நிலவரப்படி அணையில் உள்ள பெரிய மதகுகள் வழியாக திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 10,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆர்ப்பரித்து கொட்டும் நீரானது வைகை ஆற்றின் இரு கரைகளையும் தொட்டபடி சீறிப்பாய்கிறது. ஏற்கனவே அணை நிரம்பிய நிலையில் தற்போது உபரியாக வரும் தண்ணீர் அப்படியே திறக்கப்பட்டு வருகிறது. மேலும் மாவட்டம் முழுவதும் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது..
இந்நிலையில் வைகை அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீர் மற்றும் வைகை அணையை ஒட்டியுள்ள நீர்பிடிப்பு பகுதிகளான வருசநாடு, வெள்ளிமலை, மேகமலை உள்ளிட்ட பகுதிகளில் பெய்துவரும் தொடர் மழை காரணமாகவும் வெளியேறும் உபரிநீரும் சேர்ந்து வைகை ஆற்றின் நீரின் வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதன் காரணமாக மதுரை வைகையாற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளதால் யானைக்கல் தரைப்பாலம் முழுமையாக நீரில் மூழ்கியது. இதனையடுத்து தரைப்பாலத்தில் பொதுமக்கள் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ள நிலையில் வைகை ஆற்றில் ஓரங்களில் உள்ள ஒரு சாலைகளுக்கு வெள்ள நீர் வரத்தொடங்கிய நிலையில் வாகன ஓட்டிகள் அலட்சியமாக வெள்ள நீரை கடந்துசெல்லும் நிலை உள்ளது. இதனையடுத்து மதுரை வைகையாற்று பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதோடு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்..
அதிமுக கட்சி விதிகளில் திருத்தம்: வானளாவிய அதிகாரம் பெற்ற ஓபிஎஸ்-இபிஎஸ்: தீர்மானம் 3 சொல்வது என்ன?
நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில் கால்நடைகளை பாதுகாப்பு பராமரிக்கவும், கால்நடைகளை ஆற்றில் இறக்கிவிட வேண்டாம் எனவும், நீர்நிலைகளின் அருகில் கால்நடைகளை கட்டிவைக்க வேண்டாம் எனவும், மழை பெய்யும் பகுதிகளில் கால்நடைகளை மின்கம்பங்களில் கட்ட வேண்டாம் எனவும், தொழுவங்களை பாதுகாப்பாக அமைத்துகொள்ளவும் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் காவல்துறையினர் ஒலிப்பெருக்கி மூலமாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.