"ரூ. 2 ஆயிரம் எனக்கு வேணாம்.. அதை முதல்வர் கிட்டயே திருப்பி தந்துடுங்க".. தேனியை வியக்க வைத்த பாட்டி
கொரோனா நிவாரண நிதி 2 ஆயிரத்தை திருப்பி தந்தார் தேனி பாட்டி
தேனி: தமிழக அரசு கொடுத்த கொரோனா நிவாரண நிதி 2000 ரூபாய் வேண்டாம் என்று பாட்டி ஒருவர் திருப்பி தந்துள்ளார்.. அவருக்கு நாலாபக்கமிருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
தற்போது 2வது தொற்று வீரியமாகி கொண்டிருக்கிறது.. இதை தடுக்க மத்திய மாநில அரசுகள் பாடுபட்டு வருகின்றன.. அந்த வகையில் தமிழகத்தில் முழு ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
லாக்டவுன் போட்டால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுவிடுமே, என்று நினைத்துதான் ஊரடங்கு குறித்து நிறைய யோசனைகளில் அரசு இறங்கியது..

தமிழக அரசு
ஆனால் தொற்று எதிர்பாரா அளவுக்கு மோசமாகிவிடவும், முழு ஊரடங்கு ஒன்றே தீர்வு என்று முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடாது என்பதையும் கருத்தில் கொண்டு தேர்தல் அறிக்கையில் தெரிவித்த அரிசி ரேஷன் கார்டுகளுக்கு ரூ.4,000 கொரோனா நிவாரணம் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.

முதல்வர்
அதன்படி, கொரோனா நிவாரண நிதிக்கான டோக்கன்கள் வழங்கப்பட்டு கடந்த 15-ம் தேதி முதல் ரேஷன் கடைகளில் முதல் தவணையாக ரூ.2000 தரப்பட்டு வருகிறது. இந்த 2 ஆயிரம் ரூபாய் பொதுமக்களுக்கு தற்போதைய சூழலில் தவிர்க்க முடியாத தேவையாக உதவி வருகிறது.. ஆனால், இந்த 2 ஆயிரம் தனக்கு வேண்டாம் என்று ஒரு பாட்டி சொல்லி உள்ளார்.

நிதி
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள சுக்காங்கல்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்தவர் ரத்தினம்மாள்.. இவர், நிவாரண நிதியாக தமிழக அரசு கொடுத்த ரூ.2000 பணத்தை திரும்பவும் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கே வழங்கியுள்ளார்.

முதல்வர்
முதல்வர் பொது நிவாரணத்திற்கு, நிதி வழங்கும்படி முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே கேட்டுக் கொண்டிருந்தார்.. அதன்படியே, முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள், சினிமா கலைஞர்கள், அரசியல் கட்சியை சேர்ந்தோர், பொதுமக்கள் என அனைத்து தரப்பினருமே தங்களால் முடிந்த அளவு நிதி வழங்கி வருகிறார்கள்.. ஆனால், உதவித்தொகையாக தரப்பட்ட நிதியைக்கூட, உதவியாக தந்துள்ளார் இந்த பாட்டி.. இதையடுத்து, அந்த பாட்டிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

பாராட்டு
இந்த பாட்டிக்கு 78 வயதாகிறது.. பிள்ளைகள் இவரை கவனித்து கொண்டாலும், தனியாகத்தான் வாழ்ந்து வருகிறார்.. ரேஷன் கடைக்கு வந்து 2 ஆயிரம் வாங்க முடியாத நிலைமை இவருக்கு இருந்தது.. எனவே, கூட்டுறவு சங்க செயலாளர் முருகராஜன் நேரில் சென்றுதான் பாட்டிக்கு இந்த பணத்தை வழங்கினார்... அப்போதுதான் ரத்தினம்மாள், "முதலமைச்சர் ஐயா அவர்கள் பல உயிர்களை காப்பாற்றி வருகிறார். அதனால் அவருக்கு உதவி செய்யும் வகையில் எனக்கு கிடைத்த 2 ஆயிரம் பணத்தை கொரோன நிவாரண நிதியாக வழங்குகிறேன்" என்று தெரிவித்துள்ளார்












Click it and Unblock the Notifications