மேடையிலேயே எடப்பாடி காலில் விழுந்த ஆர்.பி.உதயகுமார்! உற்று பார்த்த அதிமுக தொண்டர்கள்! தேனியில் பரபர
தேனி: ஓபிஎஸ் சொந்த ஊரான தேனியில் கட்சி நிர்வாகிகளின் இல்ல திருமண விழாவுக்குக் கலந்து கொண்ட எடப்பாடிக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. அப்போது எதிர்க்கட்சி துணைத் தலைவர் பொறுப்பில் இருக்கும் ஆர்பி உதயகுமார், அனைவரின் முன்பு மேடையிலேயே எடப்பாடி காலில் விழுந்தது பேசுபொருளாகியுள்ளது.
ஈரோடு இடைத்தேர்தல் அமைதியாக இருந்த தமிழ்நாடு அரசியல் களத்தில் மீண்டும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. ஆளும் கட்சியும் சரி, எதிர்க்கட்சியும் சரி தனது பலத்தை நிரூபிக்க இடைத்தேர்தலை முக்கியமான ஒன்றாகப் பார்க்கிறது.
அதிமுக கூட்டணியில் இருந்து யார் வேட்பாளர் என்று இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. பாஜக இன்னும் ஓரிரு நாட்களில் போட்டியிடுமா அல்லது அதிமுகவுக்கு ஆதரவா என அறிவிக்க உள்ளது.
ட்விஸ்ட்! ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. ஆதரவு கேட்ட எடப்பாடி.. நிராகரித்த ஏ.சி.சண்முகம்! என்ன சொன்னர்
தேனி பயணம்
அதேநேரம் மறுபுறம் ஓபிஎஸ் தரப்பும் சரி எடப்பாடி தரப்பும் சரி தாங்கள் வேட்பாளரை அறிவிக்க உள்ளதாகக் கூறி அதற்கான நடவடிக்கையிலும் இறங்கிவிட்டனர். இரு தரப்பும் கூட்டணி கட்சியினரைச் சந்தித்து ஆதரவைக் கேட்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளன. இந்த அரசியல் பரபரப்புக்கு இடையே ஓபிஎஸின் சொந்த மாவட்டமான தேனிக்குச் சென்று மாஸ் காட்டியுள்ளார் எடப்பாடி.. அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராகத் தேர்வான பிறகு எடப்பாடி தேனி செல்வது இதுவே முதல்முறையாகும். அங்கு நடந்த சம்பவங்கள் அரசியல் அரங்கில் முக்கியமானதாக மாறியுள்ளது.
அட்டகாசமான வரவேற்பு
தேனியில் அதிமுக நிர்வாகிகளாக முன்னாள் எம்எல்ஏ ராமராஜ் மற்றும் கூடலூர் நகரக் கழக செயலாளர் அருண்குமார் ஆகியோர் இல்ல திருமண விழா நடைபெற்றது. இதில் கலந்து கொள்ளவே எடப்பாடி பழனிசாமி தேனி மாவட்டம் கம்பத்திற்கு வந்திருந்தார். அவருக்கு மாவட்ட அமைப்புச் செயலாளர் எஸ்டிகே ஜக்கையா தலைமையில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. திண்டுக்கல்- வத்தலகுண்டு வழியாகத் தேனி புறவழிச்சாலைக்கு எடப்பாடி வாகனம் வந்த போது பிரம்மாண்ட வரவேற்பு தொடங்கியது.
எடப்பாடி பழனிசாமி
தேனி அன்னஞ்சி விளக்கு பகுதியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் எடப்பாடிக்கு வரவேற்பு கொடுத்தனர். பூரண கும்பம் மரியாதை உடன் மலர்கள் தூவியும், செண்டைமேளம், தப்பாட்டம், டிரம் செட், கரகாட்டம், தேவராட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம் என்று தேனியையே மிரள வைக்கும் அளவுக்கு எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது. இந்த வரவேற்பாள் உற்சாகமடைந்த எடப்பாடி மகிழ்ச்சியுடன் தொண்டர்களை நோக்கிக் கையசைத்து வரவேற்பை ஏற்றுக் கொண்டார்.
மூத்த தலைவர்கள்
தென் மாவட்டங்களைச் சேர்ந்த அதிமுக மூத்த தலைவர்களான செல்லூர் ராஜு, ஆர்பி உதயகுமார், கடம்பூர் ராஜு நேரில் வந்து எடப்பாடி பழனிசாமியை வரவேற்றனர். அங்கு ஏற்பாடு செய்யப்பட்ட மேடையில் ஏகப்பட்ட அதிமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் எடப்பாடி பழனிசாமிக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர். அவர்கள் அனைவரிடம் பூங்கொத்து வாங்கி உற்சாக போட்டோக்களும் போஸ் கொடுத்தார் எடப்பாடி பழனிசாமி. அப்போது அங்கு நடந்த ஒரு சம்பவம் தான் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
காலில் விழுந்த ஆர்.பி. உதயகுமார்
எடப்பாடி அணி சார்பில் எதிர்க்கட்சி துணைத் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள ஆர்.பி.உதயகுமாரும் இதற்கான பணிகளைச் செய்திருந்ததாகத் தெரிகிறது. எடப்பாடி மேடையேறியதும் அங்கே வந்த ஆர்.பி.உதயகுமார் அவருக்குச் சால்வை அணிவித்தார். மேலும், வீர வாள் கொடுத்து அசத்தினார். அப்போது "அண்ணன் எடப்பாடியார் வாழ்க" என்று உரத்துக் கத்திய ஆர்பி உதயகுமார் யாரும் எதிர்பார்க்காத வகையில் மேடையிலேயே வைத்து எடப்பாடி காலில் விழுந்தார். எதிர்க்கட்சி துணைத் தலைவர் பொறுப்பில் இருக்கும் ஆர்பி உதயகுமார், அனைவரின் முன்பு மேடையிலேயே எடப்பாடி காலில் விழுந்தது பேசுபொருளாகியுள்ளது.
விமர்சனம்
முன்பு ஜெயலலிதா இருந்த வரை, அமைச்சர்கள் தொடங்கி நிர்வாகிகள், தொண்டர்கள் என யாராக இருந்தாலும் அவரது காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவதை வழக்கமாக வைத்திருந்தனர். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு இந்த கட்சிகள் சற்றே இல்லாமல் இருந்தது. இப்போது மீண்டும் எதிர்க்கட்சி துணைத் தலைவர் பொறுப்பில் இருக்கும் ஆர்பி உதயகுமார் எடப்பாடி காலில் விழுந்தது சர்ச்சையாகியுள்ளது. இது தொடர்பான வீடியோவை இணையத்தில் பகிர்ந்து பலரும் இது குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.