எங்கய்யா என் போட்டோவ காணோம்.. தேனி மா.செ முன் போஸ்டரை கிழித்த ஒ.செ.! அதகளமான அதிமுக நிகழ்ச்சி!
தேனி: புரட்சித் தலைவர் என அழைக்கப்படும் அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆர்-ன் 108வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் எம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டு ஒட்டப்பட்ட வாழ்த்து போஸ்டரில் தனது புகைப்படம் இல்லையென அவற்றை கிழித்து மாவட்ட செயலாளரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அதிமுக ஒன்றிய செயலாளரால் பரபரப்பு ஏற்பட்டது.
நடிகராக இருந்து கட்சி ஆரம்பித்து முதல்வரான முதல் நடிகர் என்ற பெருமையை பெற்றவர் எம்ஜிஆர். எம்.ஜி.ராமச்சந்திரன் என்ற பெயர் தமிழகத்தில் ஒலிக்காத இடமே கிடையாது என்ற அளவுக்கு தமிழ் சினிமாவிலும் 30 ஆண்டுகளுக்கும் மேலாக உச்சத்தில் இருந்தார்.

இன்றும் கூட எம்ஜிஆர் ரசிகர்கள் அவரை கடவுள் போல வழிபடுவதை பார்க்க முடியும். அதிமுகவை ஆரம்பித்து முதல்வரான அவருக்கு மத்திய அரசு சார்பில் பாரத ரத்னா விருதும் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் எம்ஜிஆரின் 108-வது பிறந்தநாள் விழா என்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதை அடுத்து அதிமுகவினர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். இதேபோல தமிழக அரசு சார்பில் கிண்டியில் உள்ள எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக வளாகத்தில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

அந்த வகையில், தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 108 வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக பேரூர் கழக துணைச் செயலாளர் பொன்முருகன் எம்ஜிஆரை வாழ்த்தி ஆண்டிபட்டி நகரின் பல்வேறு பகுதிகளில் வாழ்த்து போஸ்டர்கள் ஒட்டியுள்ளார். அப்போது அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளர் முறுக்கோடை ராமர் மற்றும் ஆண்டிப்பட்டி ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட்டோர் ஊர்வலமாக வந்து ஆண்டிபட்டி வைகை சாலை பிரிவில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்தனர்.
அப்போது காமராஜர் சிலை அருகில் ஒட்டப்பட்ட அந்த போஸ்டரை பார்த்த அதிமுக மேற்கு ஒன்றிய செயலாளர் லோகிராஜன் போஸ்டரில் ஒன்றிய செயலாளர் தனது புகைப்படம் இல்லை என்று கூறி அதிமுக மாவட்ட செயலாளர் முன்பாகவே ஆத்திரமடைந்து போஸ்டரை கிழித்தார். மேலும் அதிமுக மாவட்ட செயலாளர் முறுக்கு கோட்டை ராமரிடம் இதுபோன்று கட்சியின் ஒன்றிய செயலாளர் பொறுப்பில் உள்ள எனக்கு மதிப்பு இல்லை எனக் கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அதனை தொடர்ந்து அதிமுக மேற்கு ஒன்றிய செயலாளர் லோகிராஜன் அங்கிருந்து காரில் ஏறி புறப்பட்டு சென்றார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது. தனது வாழ்த்து போஸ்டரில் தனது புகைப்படம் இல்லையென அவற்றை கிழித்து மாவட்ட செயலாளரிடம் அதிமுக ஒன்றிய செயலாளர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications