15 அடி சுற்று சுவரில் ஏறிக் குதித்த கொள்ளையர்கள்! ஓபிஎஸ் பண்ணை வீட்டில் எல்இடி டிவி மட்டும் கொள்ளை!
தேனி : 15 அடி உயர காம்பவுண்ட் சுவற்றில் ஏறிக் குதித்து தேனியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் பண்ணை வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள், வீட்டில் பணம் நகை எதுவும் இல்லாததால் அங்கிருந்த 54 இன்ச் எல்.இ.டி.டிவியை கொள்ளையடித்துச் சென்றதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கைலாசப்பட்டியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் பண்ணை வீடு அமைந்துள்ளது. ஓ.பன்னீர்செல்வம் தேனி மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள நிர்வாகிகளை இந்த பண்ணை வீட்டில் சந்தித்து ஆலோசனை நடத்துவது வழக்கம்.
கடந்த இரண்டு தினங்களாக தேனி மாவட்ட நிர்வாகிகள் மற்றும் திருச்சி மாவட்ட நிர்வாகிகளை இந்த பண்ணை வீட்டில் சந்தித்து ஆலோசனைகளையும் நடத்தி வந்தார்.

ஓ.பன்னீர்செல்வம்
இந்த நிலையில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஓ.பன்னீர்செல்வத்தின் பண்ணை வீட்டின் பூட்டை உடைத்து அங்கிருந்த பீரோவை கொள்ளையடிக்க முயன்ற போது, பீரோவில் பணம் நகை எதுவுமில்லை என்று கூறப்படுகிறது.இதனால் அந்த அறையில் மாட்டி வைக்கப்பட்டிருந்த 54 இன்ச் எல்.இ.டி.டிவியை கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

கொள்ளை சம்பவம்
இன்று காலை பண்ணை வீட்டிற்குச் சென்ற பணியாட்கள் வீட்டுக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்த போது எல்இடிடிவி காணாமல் போய் இருப்பதும், பீரோ உடைக்கப்பட்டு இருப்பதையும் பார்த்து, ஓ.பன்னீர்செல்வத்தின் அறிவுரையின் பேரில் தென்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

போலீசார் விசாரணை
புகாரின் பேரில் தென்கரை காவல்துறையினர் மோப்ப நாய்கள் உதவியுடன் சென்று சோதனை நடத்தி வந்துள்ளனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். நேற்று நள்ளிரவு மர்ம நபர்கள் பண்ணை வீட்டின் 15 அடி உயர காம்பவுண்ட் சுவர் மீது ஏறிக் குதித்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

மக்கள் அதிர்ச்சி
சுமார் 15 அடி உயரமுள்ள காம்பவுண்ட் சுவற்றின் மீது ஏறிக் குதித்து தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் வீட்டிலேயே கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் சமீப காலமாக பூட்டி இருக்கும் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்கப்படும் சம்பவங்கள் அதிக அளவில் நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications