தேனியில் தாமரைச் சின்னத்தில் களமிறங்கச் சொல்லும் பாஜக! தயங்கி தடுமாறும் ஓ.பன்னீர்செல்வம்!
தேனி: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தேனி மக்களவைத் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வத்தை தாமரைச் சின்னத்தில் களமிறக்க பாஜக காய் நகர்த்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
தேனி நாடாளுமன்றத் தொகுதியை பொறுத்தவரை கம்பம், போடி, பெரியகுளம், ஆண்டிப்பட்டி, சோழவந்தான், உசிலம்பட்டி என 6 சட்டமன்ற தொகுதிகள் வருகின்றன. பிறமலைக்கள்ளர், நாயக்கர், சிறுபான்மையினர், ஒக்கலிக கவுடர், ஆதி திராவிடர் உள்ளிட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் கணிசமான வாக்கு வங்கியை கொண்டுள்ளார்கள்.

ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டம் என்பதால் தேனி மக்களவைத் தொகுதியை பொறுத்தவரை அரசியல் ரீதியாக கவனம் ஈர்த்து வருகிறது. தேனியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் போட்டியிடக் கூடும் என கூறப்பட்ட நிலையில், சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், தாம் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை எனக் கூறிவிட்டார். ஆனால் அதே நேரத்தில் பாஜக கூட்டணியில் அமமுக ஐக்கியமாவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
பாஜக + அமமுக +ஓ.பி.எஸ். தரப்பு என மூன்று தரப்பும் தேர்தலில் இணைந்து களம் காணக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தேனி மக்களவைத் தொகுதியில் ஓ.பி.ரவீந்திரநாத்துக்கு பதில் ஓ.பன்னீர்செல்வமே நேரடியாக போட்டியிட்டால் களம் நன்றாக இருக்கும் எனக் கருதும் பாஜக மேலிடம் அதற்கான காய் நகர்த்தல் வேலையில் இறங்கியுள்ளது. சட்டசபையிலும் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவி பறிபோனதோடு மட்டுமல்லாமல் பின் இருக்கை ஒதுக்கப்பட்டு ஓரமாக உட்கார வேண்டிய சூழல் வந்துள்ளது.
இதனால் இனியும் சட்டசபை செல்வதா என்ற மனநிலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வம், தனது தரப்பை வலிமைப்படுத்த வேண்டும் என்றால் கையில் அதிகாரப் பதவி இருக்க வேண்டும் என எண்ணுவதாகவும் இதையறிந்து தான் பாஜக அவரை தாமரைச் சின்னத்தில் களமிறக்க காய் நகர்த்துவதாகவும் தெரிகிறது. அப்போ ஓ.பி.ரவீந்திரநாத் நிலைமை என்னவாகும் என்ற கேள்விக்கு ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களே விடை தெரியாமல் குழம்பிப் போய் காணப்படுகிறார்கள்.
மாநில அரசியலில் கோலோச்சிவிட்டு டெல்லி அரசியல் தனக்கு சரிபட்டு வருமா என்பதை நினைத்து தயங்கி தடுமாறி வருகிறாராம் ஓ.பன்னீர்செல்வம், இதனால் தேர்தல் களம் சுவாரஸ்யத்துக்கு பஞ்சமில்லாமல் விறுவிறுப்பாக நகர்ந்து வருகிறது.
தேனி மக்களவைத் தொகுதியை பொறுத்தவரை ஓ.பன்னீர்செல்வத்துக்கு அத்துபடியான தொகுதியாகும். கடந்த 1999ல் டிடிவி தினகரன் பெரியகுளம் நாடாளுமன்ற தொகுதியில் (இப்போதைய தேனி மக்களவைத் தொகுதி) போட்டியிட்ட போது அவருக்காக இரவு பகல் பாராமல் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வெற்றி பெற வைத்தவர் ஓ.பன்னீர்செல்வம். அந்த நன்றிக்கடனுக்கு தான் 2001ல் எம்.எல்.ஏ. சீட் வாங்கிக் கொடுத்த டிடிவி தினகரன், வருவாய் துறை அமைச்சர் பதவியையும் வாங்கிக் கொடுத்து ஒரு கட்டத்தில் முதலமைச்சர் பதவி, நிதி அமைச்சர் பொறுப்பையும் சசிகலா மூலம் பெற்றுக்கொடுத்து அரசியலில் அடையாளம் கொடுத்தார்.












Click it and Unblock the Notifications