"பிரதமர்கிட்ட ஏன் ஒப்பாரி வைக்கிறீங்க.. அங்க போக வேண்டியதுதானே”- திமுக அரசை புரட்டி எடுத்த எச்.ராஜா!
தேனி : தேனி பங்களாமேட்டில் நடந்த மத்திய பாஜக அரசின் 8 ஆண்டு சாதனை பொதுக்கூட்டத்தில் பா.ஜ.க தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா பேசினார்.
Recommended Video
அப்போது அவர், மு.க.ஸ்டாலின் அரசு தமிழகத்திற்கு எதுவுமே செய்யவில்லை. மத்திய அரசு செய்யும் நலத் திட்டங்கள் மட்டுமே மக்களுக்கு வந்து சேருகின்றன எனத் தெரிவித்தார்.
பசிக்கு உணவு கேட்ட 5 வயது சிறுமி! வளர்ப்பு தாய் செய்த கொடூரம்! கர்நாடகத்தில் அதிர்ச்சி சம்பவம்
மேலும், பிரதமரிடம் நீட் பற்றி ஒப்பாரி வைப்பதற்கு பதிலாக, நளினி சிதம்பரத்தின் வீட்டிற்குச் சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒப்பாரி வைக்கலாம் எனச் சாடியுள்ளார்.
திமுக அரசின் வேதனை
பாஜக அரசின் 8 ஆண்டு சாதனை பொதுக்கூட்டத்தில் பேசிய எச்.ராஜா, "பா.ஜ.க அரசின் சாதனைகளோடு, தி.மு.க அரசின் வேதனைகளையும் மக்களிடம் எடுத்துக் கூற வேண்டும். 43 கோடி மக்களுக்கு ஜன்தன் வங்கி கணக்கு, 12 கோடி கழிப்பறை, 9 கோடி குடும்பங்களுக்கு இலவச கேஸ் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஏழை மக்கள் நலனுக்கான திட்டங்களை கொடுத்தது பா.ஜ.க அரசு. தமிழகத்தில் உட்கட்டமைப்பு திட்டங்களில் ரூ. 1 லட்சம் கோடி மத்திய அரசு முதலீடு செய்துள்ளது.
ஸ்டாலின் அரசு எதுவுமே செய்யவில்லை
மு.க.ஸ்டாலின் அரசு தமிழகத்திற்கு எதுவுமே செய்யவில்லை. மத்திய அரசு செய்யும் நலத் திட்டங்கள் மட்டுமே மக்களுக்கு வந்து சேருகின்றன. அதில் ஸ்டிக்கர் ஒட்டும் வேலையைத்தான் திமுக அரசு செய்து கொண்டிருக்கிறது. பொங்கல் பரிசு தொகுப்பில் ஊழல், மகளிருக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்குகிறோம் எனக் கூறி ஏமாற்றியது என தொடர்ந்து ஏமாற்றம்தான்.
மோசமான ஆட்சி
தமிழர்களை குடிகாரர்கள் ஆக்கியதே திமுகவின் சாதனை. மக்களால் அடித்து விரட்டப்பட வேண்டிய ஆட்சி தமிழகத்தில் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. இப்படியொரு மோசமான ஆட்சியைப் பார்க்கவே முடியாது. முதலமைச்சர் முதல் அனைவரும் உளறுபவர்களாக உள்ளனர். நீட் தேர்வை எதிர்த்து தீர்மானம் போட்டதாக முதலமைச்சர் கூறுகிறார். அந்த தீர்மானம் வெறும் வெற்றுக் கடுதாசி தான்.
விலகி இருக்கலாமே
கடந்த 2010ஆம் ஆண்டு திமுக இடம் பெற்றிருந்த காங்கிரஸ் அமைச்சரவையில் தான் நீட் தேர்வு முதன் முதலாக அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது ஏன் மு.க.ஸ்டாலினும் அவருடைய அப்பா கருணாநிதியும் எதிர்க்கவில்லை. நீட் தேர்வை எதிர்த்து மத்திய அமைச்சரவையில் இருந்து விலகி இருக்கலாமே? நீட் தேர்வு அமல்படுத்தப்பட்டது உச்சநீதிமன்ற தீர்ப்பால் தான். முதலமைச்சருக்கு நீட் தேர்வில் விலக்கு வேண்டுமென்றால் அவர் தட்ட வேண்டிய இடம் நீதிமன்றத்தின் கதவுகள்.
ஒப்பாரி
அதிலும் குறிப்பாக உச்சநீதிமன்றத்தில் நீட் தேர்வுக்கு ஆதரவாக வாதாடி வெற்றி பெற்றவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம். இதனை திசை திருப்பும் வேலையை முதல்வர் ஸ்டாலின் செய்து கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டிற்கு நலத்திட்டங்களை வழங்க வந்த பிரதமர் மோடியிடம் நீட் பற்றி ஒப்பாரி வைப்பதற்கு பதிலாக, நளினி சிதம்பரத்தின் வீட்டிற்கு தினந்தோறும் சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒப்பாரி வைக்கலாம்.
விஞ்ஞான ரீதியில் ஊழல்
தமிழக அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் செய்த ஊழல் பட்டியல் டெல்லிக்குச் சென்றுள்ளது. திமுக என்ற கட்சி ஊழலில் பிறந்து ஊழலிலேயே வளர்ந்த ஒன்று. அதில் ஒரு சில ஊழல் பட்டியலை நமது மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் வெளியிட்டுள்ளார். திமுக குறித்து எந்தவொரு ஆதாரமும் வெளியிடத் தேவையில்லை. ஏனென்றால் திமுக என்றாலே ஊழல் கட்சி என்று சாதாரண மக்களுக்கு கூட தெரியும். சர்க்காரியா கமிஷன் கூறியது போல, அவர்கள் விஞ்ஞான ரீதியாக செய்யக் கூடியவர்கள்.
மோடி தான் மீட்கிறார்
நேரு முதல் கருணாநிதி வரை இந்திய நிலப்பரப்புகளை மற்ற நாட்டிற்கு தாரை வார்த்துக் கொடுத்துள்ளனர். தற்போது பிரதமர் மோடி அவற்றை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்து கோயில்களில் 10 லட்சம் கோடிக்கு மேல் ஊழல் நடந்துள்ளது" எனப் பேசியுள்ளார்.