ஓபிஎஸ் போட்டியிடும் போடி தொகுதியில் பரவிய வீடியோ.. அதிமுக வேட்பாளர் நாராயணசாமி மீது பாய்ந்த வழக்கு
தேனி: வாக்குப்பதிவின் போது பணியில் ஈடுபட்டிருந்த காவலரை பணி செய்யவிடாமல் தடுத்து அவதூறாகப் பேசியதாக போடி தொகுதி அதிமுக வேட்பாளர் நாராயணசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஸ்ரீரங்கபுரம் கிராமத்தில் பூத் எண் 233 ஆம் வாக்குச்சாவடியில் கடந்த 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றுக் கொண்டிருந்தது. அந்த வாக்குச்சாவடிக்கு போடி தொகுதி அதிமுக வேட்பாளர் நாராயணசாமி, மற்றும் கட்சி நிர்வாகிகள் சுரேஷ், வடிவேல், மோகன் உள்ளிட்டோர் வருகை தந்தனர்

அப்போது அந்த வாக்குச்சாவடியில் பாதுகாப்பு பணியில் தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் மாரிச்செல்வம் பணியில் ஈடுபட்ட நிலையில், அதிமுக வேட்பாளர் நாராயணசாமி கட்சி தலைவர் மற்றும் சின்னம் பொறித்த துண்டுடன் வாக்குச்சாவடிக்குள் வருகை தந்ததால் அவரை தடுத்து நிறுத்தியுள்ளார் காவலர்
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் துண்டை அகற்றுமாறு காவலர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த வேட்பாளர் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் காவலரை திமுகவுக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை செல்போனில் படம் பிடித்தும் சமூக வலைதளத்தில் பரப்பி உள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் காவலர் மாரிசெல்வம் வீரபாண்டி காவல் நிலையத்தில் அதிமுக வேட்பாளர் நாராயணசாமி மற்றும் நிர்வாகிகள் நான்கு பேர் மீது புகார் அளித்துள்ளார். இந்த நிலையில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த காவலரை பணி செய்யவிடாமல் தடுத்தல், பொது இடத்தில் ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வீரபாண்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தேனி மாவட்ட வாக்குப்பதிவு நிலவரம்
தேனி மாவட்டத்தில் 81.52 சதவீதம் வாக்குகள் பதிவாகின. அதிக பட்சமாக ஆண்டிப்பட்டி தொகுதியில் 83.58 சதவீதம் பதிவாகியுள்ளது. தேனி மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. மாவட்டத்தில் 5,06,058 ஆண் வாக்காளர்கள், 5,35,303 பெண் வாக்காளர்கள், 178 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 10 லட்சத்து 41 ஆயிரத்து 539 வாக்காளர்கள் உள்ளனர்.
சட்டமன்ற தொகுதி வாரியாக ஆண்டிப்பட்டி தொகுதியில் 1,25,525 ஆண்கள், 1,30,974 பெண்கள், 30 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 2 லட்சத்து 56 ஆயிரத்து 529 வாக்காளர்கள் உள்ளனர். பெரியகுளம் (தனி) தொகுதியில் 1,29,399 ஆண்கள், 1,36,321 பெண்கள், 110 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 2 லட்சத்து 65 ஆயிரத்து 830 வாக்காளர்கள் உள்ளனர்.
போடி தொகுதியில் 1,27,593 ஆண்கள், 1,35,683 பெண்கள், 16 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 2 லட்சத்து 63 ஆயிரத்து 292 வாக்காளர்கள் உள்ளனர். கம்பம் தொகுதியில் 1,23,541 ஆண்கள், 1,32,325 பெண்கள், 22 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 2 லட்சத்து 55 ஆயிரத்து 888 வாக்காளர்கள் உள்ளனர்.
இந்த 4 சட்டமன்ற தொகுதிகளிலும் நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடந்தது. காலை 7 மணிக்கு தொடங்கியது. பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிவடைந்தது. சில இடங்களில் 6 மணிக்கும் வாக்களிக்க வரிசையில் நின்றனர். இதனால் இரவு 7.30 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது. வாக்குப்பதிவு விவரங்கள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டன. வாக்குப்பதிவு முடிவில் மாவட்டத்தில் சுமார் 81.52 சதவீதம் வாக்குகள் பதிவாகின. சட்டமன்ற தொகுதி வாரியாக ஆண்டிப்பட்டியில் 83.58 சதவீதம், பெரியகுளத்தில் 78.50 சதவீதம், போடியில் 82.84 சதவீதம், கம்பத்தில் 81.23 சதவீதம் வாக்குகள் பதிவாகின. மாவட்டத்தில் கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 72.66 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தன. கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications