நான் வர்றேன் தனியா.. ஓபிஎஸ் ஊருக்குள் கால் வைக்கும் எடப்பாடி! என்ன பேசப் போகிறார்? எகிறும் பிரஷர்.!
தேனி: இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதை அடுத்து மீண்டும் அதிமுகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரான பெரிய குளத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்கிறார். நாளை நடைபெற இருக்கும் இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி என்ன பேசப் போகிறார்? என்பது தான் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் அக்கட்சியின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அதிமுகவின் இரட்டை இலை சின்னம் உள்ளிட்ட உட்கட்சி விவகாரங்களை விசாரிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தை ஓபிஎஸ் தரப்பு உள்ளிட்ட சிலர் தொடர்பு கொண்டனர்.

இதற்கிடையே தங்கள் கட்சி விவகாரங்களை தேர்தல் ஆணையம் விசாரிக்க கூடாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு மனு தாக்கல் செய்திருந்தது.
இது தொடர்பாக பதில் அளித்து இருந்த தேர்தல் ஆணையம் உட்கட்சி விவகாரங்களை உரிமையியல் நீதிமன்றங்கள் விசாரித்தாலும் தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி தான் விசாரித்தது என கூறி இருந்தது. இந்த நிலையில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று எடப்பாடி பழனிசாமியின் மனு மீதான விசாரணை நடைபெற்றது. அதில் அதிமுக உட்கட்சி விவகாரத்தை தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக எடப்பாடி பழனிச்சாமி தரப்பு கடும் அதிர்ச்சியை சந்தித்துள்ளது. கட்சியில் இருந்து அனைவரும் வெளியேற்றப்பட்ட நிலையில் இல்லாத நபர்களுக்கு எப்படி அதிகாரம் இருக்கும் எப்படி தேர்தல் ஆணையம் விசாரிக்க முடியும் என அவர் தரப்பு கேள்வி எழுப்பி உள்ளது. ஆனால் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராகவும் தங்கள் தரப்புக்கு ஆதரவாகவும் நீண்ட காலத்திற்குப் பிறகு ஒரு தீர்ப்பு வந்திருப்பதால் ஓ.பன்னீர்செல்வம், பெங்களூரு புகழேந்தி உள்ளிட்டோர் உற்சாகத்தில் இருக்கின்றனர்.
இதை அடுத்து சென்னை, டெல்லி, தேனி, என சுற்றுச்சுற்றி வருகிறார் ஓ.பன்னீர்செல்வம். இந்த நிலையில் அதிமுக சார்பில் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டங்கள் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மதுராபுரியில் நாளை ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது. வழக்கமாக இது போன்ற நிகழ்ச்சிகளில் முன்னாள் அமைச்சர்கள் அல்லது அருகில் உள்ள மாவட்டங்களைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் மட்டுமே கலந்து கொள்வார்கள்.
ஆனால் நாளை நடக்க இருக்கும் இந்த நிகழ்ச்சியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்க இருக்கிறார். அதற்கு காரணம் பெரியகுளம் பகுதி ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊர் என்பது குறிப்பிடத்தக்கது. அதிமுகவையும் தாண்டி இந்த விஷயம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பிரம்மாண்டமான மாநாடு போல இந்த பொதுக்கூட்டத்தை நடத்த வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டார்.
இதை அடுத்து முன்னாள் அமைச்சர்கள் ஆர்பி உதயகுமார், செல்லூர் ராஜூ, திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட பலரும் அங்கு முகாமிட்டு ஏற்பாடுகளை செய்தனர். நாளை கூட்டம் நடைபெற இருக்கும் நிலையில் அதிமுக தொண்டர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் ஓபிஎஸ் ஆதரவாளர்களும் அந்த கூட்டத்தை ஆர்வத்துடன் எதிர்நோக்கி உள்ளனர்.
எதற்காக இவ்வளவு பெரிய ஏற்பாடுகள் என அதிமுகவினரிடம் விசாரித்த போது சில தகவல்கள் கிடைத்தது. ஓபிஎஸ் வெளியேற்றத்திற்கு பிறகு எடப்பாடி பழனிச்சாமி கட்சியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளார், ஆனாலும், சசிகலா, டிடிவி, பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை நீக்கியதால் குறிப்பிட்ட சமுதாயத்தினர் அதிருப்தியில் உள்ளனர். மேலும் அடுத்த அடுத்த தேர்தல்களை அதிமுக படுதோல்வியை சந்தித்ததால் அதிமுகவினர் சோர்வில் உள்ளனர்.
அதே நேரத்தில் சட்டம் ஒழுங்கு பாதிப்பு, அரசு ஊழியர்களுக்கு எதிரான மனநிலை, சிறுபான்மை மக்களுக்கு எதிரான சில பிரச்சனைகள் காரணமாக ஆளும் தரப்பு மீது கோபம் எழுந்துள்ளது. இதை பயன்படுத்திக் கொண்டு அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்க போராடி வருகிறது. ஆனால் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை சேர்க்க எடப்பாடி பழனிச்சாமி விரும்பவில்லை. மேலும் ஓநாயும் வெள்ளாடும் ஒன்று சேர முடியுமா என தொண்டர்களுக்கு கடிதம் எழுதியதன் மூலம், இனிமேல் கட்சியில் சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியோருக்கு அதிமுகவில் இடமில்லை என்பதை உறுதியாக சொல்லிவிட்டார்.
அதே நேரத்தில் அதிமுகவில் குறிப்பாக தென் மாவட்டங்களில் தனக்குத் தான் ஆதரவு என்பதை காட்டிக் கொள்வதற்காகவே தற்போது பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரில் நடைபெறும் கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்க இருக்கிறார். மேலும் இந்த கூட்டத்தில் கட்சி தொண்டர்களுக்கு பல முக்கிய செய்திகள் இருக்கும் எனவும், கூட்டணி உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் இடம்பெறலாம் என்கின்றனர்.












Click it and Unblock the Notifications