மதுரை - போடிநாயக்கனூர் ரயில் பாதையில் சத்தமில்லாமல் நடந்த சம்பவம்.. தேனிக்கு சூப்பர் விஷயம்
தேனி: மதுரை - போடிநாயக்கனூர் இடையே புதிதாக போடப்பட்ட அகல ரயில் பாதையில் முழுமையாக மின்மயமாக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பணிகள் வரும் டிசம்பரில் முடியும் என தெற்கு ரயில்வே அறிவித்திருக்கிறது.
மதுரை - போடிநாயக்கனூர் இடையே உள்ள 90 கி.மீ. நீளத்திற்கு புதிய அகல ரயில் பாதை அமைக்கப்பட்டன. அதில் தற்போது தினசரி பயணிகள் ரயில் மற்றும் சென்னை ரயில், மற்றும் சரக்குரயில்கள் இயங்கி வருகின்றன. மதுரை போடிநாயக்கனூர் இடையேயான ரயில் வழித்தடத்தை மின்மயமாக்கினால் கூடுதல் ரயில்கள் இயக்க முடியும் என்பதால், ரயில் பாதையை மின்மயமாக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

மதுரை - போடிநாயக்கனூர் இடையே உள்ள 90 கி.மீ. நீளத்திற்கு மின்மயமாக்கும் பணி இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் துவங்கியது. தற்போது வரை 73 சதவீதம் மின்கம்பத்திற்கு அடித்தளம் இடும் பணிகள் நிறைவு பெற்றிருக்கின்றன. 37 சதவீதம் மின் கம்பம் நடும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. ஒன்பது கிலோமீட்டர் தூரத்திற்கு மின்சார வயர்கள் இணைக்கும் பணிகள் முடிந்திருக்கிறது.
மதுரை போடி இடையே, மதுரை, உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, தேனி, போடிநாயக்கனூர் ஆகிய ஐந்து ரயில் நிலையங்கள் அமைந்துள்ளன. அவற்றை இணைக்கும் வகையில் மின்மயமாக்கல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ரயில் நிலையங்களில் உள்ள மாற்று ரயில் பாதைகள் மற்றும் தேனியில் உள்ள சரக்கு நிலைய ரயில்பாதை ஆகியவற்றிலும் மின்மயமாக்கல் பணிகள் தொடர்ந்து ரயில்வே மேற்கொண்டு வருகிறது.
மதுரை - போடிநாயக்கனூர் இடையே 7 பெரிய பாலங்கள், 225 சிறிய பாலங்களிலும் மாற்று வழியில் மின்கம்பம் நடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மின்சார ரயில்களை இயக்க ஆண்டிபட்டி அருகே வள்ளல் நதி கிராமத்தில் மின் வழங்கல் நிலையம் ஒன்று அமைக்கப்பட்டு வருவதாகவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
மின்பாதைகளுக்கு தடையற்ற மின் வழங்கலை உறுதி செய்ய வடபழஞ்சி, உசிலம்பட்டி, ஆண்டிபட்டி ஆகிய ரயில் நிலையங்களில் சிறிய மின்சாரக் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றை மதுரை கட்டுப்பாட்டு அறையிலிருந்து இயக்குவதற்கான வசதியும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. தேனி ரயில் நிலையத்தில் மின்மயமாக்கல் பராமரிப்பு நிலையமும், மின் பராமரிப்பு ரயில் பெட்டி நிலையமும் அமைக்கப்பட உள்ளது. பணிகள் விறுவிறுப்பாக நடப்பதால் மதுரை - போடிநாயக்கனூர் மின்மயமாக்கல் பணிகள் டிசம்பர் மாத இறுதி வாரத்தில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே 34 கிமீ பகவதிபுரம் - எடமன் மலை ரயில் பாதையிலும் மின்மயமாக்கல் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது.உச்சிப்புளி அருகே உள்ள ஐஎன்எஸ் பருந்து படைத்தள விரிவாக்கத்திற்காக ரயில் பாதை மாற்றி அமைக்கப்பட வேண்டி இருப்பதால் ராமநாதபுரம் - ராமேஸ்வரம் மின்மயமாக்கல் பணிகள் தெற்கு ரயில்வே கட்டுமான அமைப்பிடத்தில் ஒப்படைக்கப்பட்டிருப்பபதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
மதுரை போடிநாயக்கனூர் இடையே ரயில்பாதை மின்மாயமானால், மதுரை வரை இயக்கப்படும் சில முக்கிய ரயில்களை, மதுரையில் நீண்ட நேரம் நிறுத்தி வைக்காமல், அப்படியே போடிநாயக்கனூர் வரை இயக்க முடியும். அதேபோல் மின்வழித்தடமாக மாறினால் புதிய ரயில்களும் மதுரை போடிநாயக்கனூர் வழித்தடத்தில் உடனடியாக இயக்க முடியும் என்பதால் மின்மாயாக்கல் பணி மதுரை போடி இடையே உள்ள மக்களுக்கு நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications