கேரளாவில் இருந்து வந்த கார்.. சூட்கேஸில் மனித உடல் உறுப்புகள்.. அதிர்ந்துபோன போலீசார்! ஷாக் பின்னணி!
தேனி: கேரளாவில் இருந்து வந்த காரை தேனி போலீசார் சோதனை செய்ததில் ஒரு சூட்கேஸுக்குள் மூளை, கல்லீரல் உள்ளிட்ட உடல் உறுப்புகள் பேக் செய்யப்பட்டு இருந்தன. கோடீஸ்வரர் அவதற்கான பூஜைக்காக மனித உடல் உறுப்புகளை வாங்கி வந்ததாக கூறிய மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் ஏ.எஸ்.பி மதுக்குமாரி தலைமையில் போலீசார் இரவு நேர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பழைய பைபாஸ் சாலையில் மின்னல் வேகத்தில் வந்த ஒரு ஸ்கார்ப்பியோ காரை நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது அந்தக் காருக்குள் 3 மூன்று பேர் இருந்தனர். அவர்களிடம் காவல்துறையினர் விசாரித்தனர்.

அந்த காரில் இருந்த நபர்களின் பேச்சில் சந்தேகம் அடைந்த காவல்துறையினர், அந்த காரில் சோதனை நடத்தினர். அவர்கள் வைத்திருந்த 3 சூட்கேஸ்களை போலீசார் திறந்து பார்த்தனர். அதில் நாக்கு, கல்லீரல், மூளை உள்ளிட்ட மனித உடல் உறுப்புகள் தனித்தனியாக பேக்கிங் செய்து வைக்கப்பட்டிருந்தன. எலுமிச்சம்பழம், சூடம், முட்டை போன்றவைகளும் இருந்துள்ளன.
இதைப் பார்த்து அதிர்ந்து போன போலீசார், அவற்றை பறிமுதல் செய்து, காரில் பயணித்த 3 பேரையும் உத்தமபாளையம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினனர். அதில் பல அதிர்ச்சியான தகவல்கள் காவல்துறையினருக்கு தெரியவந்தன.
விசாரணையில் அவர்கள் மதுரை அய்யனார்கோட்டையை சேர்ந்த அலெக்ஸ் பாண்டியன் (38), ராதநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்த டேவிட் பிரதாப்சிங் (40), பசும்பொன் கிராமத்தை சேர்ந்த முருகன் (65) என தெரியவந்தது. அவர்களுடன் வந்த உத்தமபாளையத்தைச் சேர்ந்த மந்திரவாதி ஜேம்ஸ் (52) என்பவர் தப்பி ஓடிவிட்டதும் தெரியவந்தது.
மந்திரவாதி ஜேம்ஸ், அலெக்ஸ் பாண்டியன் உள்ளிட்ட 3 பேரிடமும் நள்ளிரவில் ஒரு மாந்திரீக பூஜை செய்தால் பணம் பல மடங்காகக் கொட்டும். ஒரே நாளில் நீங்கள் கோடீஸ்வரர்களாக மாறிவிடலாம் என்று ஆசை காட்டியுள்ளார். அதனை நம்பிய 3 பேரும் கோடீஸ்வரர்களாக ஆவதற்கு என்ன பூஜை செய்ய வேண்டும் என்று கேட்டுள்ளனர்.
அதற்கு அந்த மந்திரவாதி ஜேம்ஸ், மனித உடல் உறுப்புகளை வீட்டில் வைத்து பூஜை செய்தால் கோடீஸ்வரர்கள் ஆகலாம், கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் வண்டிப்பெரியாரில் எனக்குத் தெரிந்த நபர் ஒருவர் இருக்கிறார். அவரிடம் நேரில் சென்று ரூ.5 லட்சம் பணத்தைக் கொடுத்தால் வேண்டியது கிடைக்கும், அதை வைத்து பூஜை செய்தால் பணம் கொட்டோ கொட்டு எனக் கொட்டும் எனக் கூறியுள்ளார்.
ஜேம்ஸ் கூறியபடி, அலெக்ஸ் பாண்டியன், பிரதாப் சிங், முருகன் ஆகியோர் நேற்று முன்தினம் காரில் கேரளா, வண்டிப்பெரியார் சென்றுள்ளனர். அங்கு ஜேம்ஸ் கூறிய நபரிடம் தாங்கள் வைத்திருந்த ரூ. 5 லட்சம் பணத்தை கொடுத்துள்ளனர். அதற்கு அந்த நபர் 3 சூட்கேஸ் பெட்டிகளை கொடுத்துள்ளார். அந்த பெட்டிகளை வாங்கிக்கொண்டு 3 பேரும் காரில் உத்தமபாளையம் நோக்கி புறப்பட்டனர். அப்போதுதான் அவர்கள் காவல்துறையினரின் சோதனையில் சிக்கியுள்ளனர்.
அவர்கள் வைத்திருந்த சூட்கேஸில் இருந்த உடல் உறுப்புகள் மனித உடல் உறுப்புகள் தானா என்பதைக் கண்டறிய மதுரையில் உள்ள தடயவியல் பரிசோதனை கூடத்துக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். மேலும், உடல் உறுப்புகளுக்காக நரபலி கொடுக்கப்பட்டதா என்பது குறித்தும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தலைமறைவான மந்திரவாதி ஜேம்ஸையும் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications