100% ஜஸ்ட் மிஸ்! தலைமை தேர்தல் ஆணையர் பெருமையாக சொன்ன வெள்ளிமலை வாக்குச்சாவடியில் 4 வாக்குகள் பதிவு!
தேனி: இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், பெருமிதமாக குறிப்பிட்ட வருசநாடு வெள்ளிமலை வாக்குச்சாவடியில் ஐந்தில் 4 வாக்குகள் பதிவாகியுள்ளன. தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தொகுதிக்கு உட்பட்ட வருசநாடு மலையில் உள்ள வெள்ளிமலை கிராமத்தில் வசிக்கும் 5 வாக்காளர்களுக்காக அமைக்கப்பட்ட தனி வாக்குச்சாவடியில் 4 வாக்குகள் பதிவாகி உள்ளன.
காட்டுப்பகுதியில் 75 கி.மீ தூரம் கரடு முரடான சாலைகளில் சுமார் 6 மணி நேரம் பயணித்து, 6 அதிகாரிகளுடன் வாக்குப்பதிவு எந்திரங்கள் தேனியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்திற்கு இன்று காலையில் வந்தடைந்துள்ளன.

பிரத்யேக வாக்குச்சாவடி
தமிழக சட்டமன்றத் தேர்தல் நேற்று ஒரே கட்டமாக நடைபெற்றது. 234 தொகுதிகளிலும் மொத்தம் 4,023 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்த நிலையில், முன்னெப்போதும் இல்லாத வகையில் மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். ஒரு வாக்காளர் கூட தேர்தலில் வாக்களிக்க வழியில்லாமல் போய்விடக்கூடாது என்ற நோக்கில் தேர்தல் ஆணையம், நன்கு திட்டமிட்டு வாக்குச்சாவடி மையங்களை அமைத்திருந்தது.
அந்த வகையில், தேணி மாவட்டம் ஆண்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வெள்ளிமலை பகுதியான ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் சரணாலயத்திற்குள் ஐந்து வாக்காளர்களுக்காக அமைக்கப்பட்ட பிரத்யேக வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நடைபெற்றது. ஆண்டிபட்டியில் இருந்து 75 கி.மீ தொலைவில் உள்ள வனப்பகுதிக்குள் சேதமடைந்த கரடுமுரடான சாலை, மின்சார வசதி இல்லாத வெள்ளிமலை வாக்குச்சாவடிக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் கொண்டு சேர்க்கப்பட்டன.
5 வாக்காளர்கள்
5 வாக்காளர்கள் கொண்ட இந்த வெள்ளிமலை வாக்குச்சாவடிக்கு பிரத்யேகமாக தனியாக மண்டல அலுவலர்கள், வாக்குப்பதிவு அலுவலர், சப் இன்ஸ்பெக்டர், துணை ராணுவ வீரர் மற்றும் உதவியாளர் என 6 நபர்கள் பணியில் அமர்த்தப்பட்டிருந்தனர். அதனைத் தொடர்ந்து நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை அங்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 5 வாக்காளர்கள் மட்டுமே உள்ள இந்த பகுதியில் 4 பேர் வாக்குப்பதிவு செய்தனர். 4 பேரும் காலையிலேயே வாக்குப்பதிவு செய்தனர். ஒருவர் வாக்களிக்கவில்லை. ஒருவர் மட்டும் வாக்களிக்காததால் அதிகாரிகள் காத்திருந்தனர்.
கரடு முரடான காட்டுப்பாதையில்
மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நேரம் முடிந்தவுடன் வாக்குச்சாவடிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்களானது போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையமான தேனி அருகேயுள்ள தனியார் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் அலுவலர்கள் மாலை ஆறு மணிக்கு மேல் வெள்ளிமலை வாக்குச்சாவடியில் இருந்து புறப்பட்டனர். காட்டுப்பகுதியில் 75 கி.மீ தூரம் கரடு முரடான சாலைகளில் சுமார் 6 மணி நேரம் பயணித்து, வாக்குப்பதிவு எந்திரங்கள் தேனியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்திற்கு இன்று காலையில் வந்தடைந்துள்ளன.
5 வாக்காளர்களைக் கொண்ட வாக்குச்சாவடிக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில் அனைவரும் வாக்களித்திருந்தால் அங்கு 100% வாக்குப்பதிவு நடந்திருக்கும். ஒருவர் வாக்களிக்காத நிலையில் அந்த வாக்குச்சாவடியில் 80% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.
தலைமை தேர்தல் ஆணையர் பாராட்டி இருந்தார்
தேர்தல் தேதி அறிவித்தபோது இந்த வருசநாடு வாக்குச்சாவடியைக் குறிப்பிட்டுப் பேசி இருந்தார் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார். "தேனி மாவட்டம் வருசநாடு மலைப்பகுதிக்கு செல்ல அதிகாரிகள் மூன்று மணி நேரம் பயணம் செய்தனர். அங்கு வெள்ளி மலையில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அங்கு வெறும் ஐந்து வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக ஏற்பாடுகளை செய்துள்ளனர்" என தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications