Exclusive: சசிகலா தான் என்னை சேர்மன் ஆக்கினார்! நன்றி மறக்கமாட்டேன்! ஓ.பி.எஸ். தம்பி ஓ.ராஜா அதிரடி
தேனி: சசிகலா தான் 2011-ம் ஆண்டு தனக்கு சேர்மன் சீட் வாங்கிக் கொடுத்தார் என்றும் அவர் செய்த உதவிக்கு நன்றி மறக்கமாட்டேன் எனவும் கூறுகிறார் ஓ.பன்னீர்செல்வத்தின் உடன் பிறந்த சகோதரர் ஓ.ராஜா.
தனக்கு தனது அண்ணன் ஓ.பன்னீர்செல்வம் எதுவும் செய்யவில்லை என்றும் அரசியலில் தன்னை ஆளாக்கியவர் சசிகலா தான் எனவும் தெரிவிக்கிறார்.
சசிகலா ஆதரவு குரலுடன் மிகத் தீவிரமாக வலம் வந்த ஓ.ராஜா அண்மைக்காலமாக சைலண்டு மோடுக்கு சென்றுவிட்டார். இந்நிலையில் இது தொடர்பாக விளக்கம் அறிய நாம் அவரை தொடர்பு கொண்டு பேசினோம்.
அப்போது அவர் கூறியதாவது;
கேள்வி: சசிகலாவை அதிமுகவில் இணைக்காமல் ஓயமாட்டேன் என்றெல்லாம் கூறினீர்கள், ஆனால் ஆளையே பார்க்க முடியவில்லையே?
பதில்: அப்படியெல்லாம் இல்லை, இன்றும் அதே நிலைப்பாடு தான். இடையில் யாரும் அது தொடர்பாக என்னிடம் கேட்கவில்லை, இப்போது நீங்க கேட்குறீங்க, சொல்கிறேன். கேட்டால் தானே பேசமுடியும். சின்னம்மாவை கட்சியில் இணைக்க வேண்டும் என்பது தான் இன்றும் எனது விருப்பம்.
கேள்வி: சசிகலாவுடைய ஆன்மிக சுற்றுப்பயணம் பெரியளவில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லையே, அவருமே இப்போது முன்பை காட்டிலும் சுணக்கமாக இருப்பது போல் தெரிகிறதே?
பதில்: சின்னம்மாவை நேரில் பார்த்து பேசாமல் அதைப்பற்றி கூற முடியாது. வரும் திங்கள்கிழமை அன்று சின்னம்மாவை நேரில் சந்தித்து பேசவிருக்கிறேன். அதன் பிறகு அவர் முன்னெடுக்கப் போகும் நடவடிக்கைகள் பற்றி பேசுகிறேன்.
கேள்வி: உங்க அண்ணன் ஓ.பன்னீர்செல்வம் இது தொடர்பாக உங்களிடம் எதுவும் பேசவில்லையா?
பதில்: அவர் எதுக்கு இதைப்பற்றி பேசப்போகிறார், எனக்கு 2011-ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பெரியகுளம் நகராட்சி தலைவர் பதவிக்கு சீட் வாங்கிக் கொடுத்ததே சின்னம்மா தான். அவங்க தான் என்னை சேர்மன் ஆக்கினாங்க. எங்க அண்ணனா எனக்கு சீட் வாங்கிக் கொடுத்தார்.
ஜெயலலிதா போல் ஆட்சி செய்வேன்.. அசராமல் சொன்ன சசிகலா! திமுக ஆட்சியில் மனசு நிறையவில்லை என்றும் குட்டு
கேள்வி: சசிகலா உங்களிடம் பேசுகிறாரா, அவரது அட்வைஸ் என்ன?
பதில்: எல்லோரும் ஒற்றுமையா இருக்கனும்னு சின்னம்மா விரும்புறாங்க, அதைத் தான் அவங்க தொடர்ந்து சொல்லிகிட்டு வர்றாங்க. வேற என்ன சொல்லப் போறாங்க.
கேள்வி: உங்களது செயல்பாடுகள் உங்க அண்ணனும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பி.எஸ்.க்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தாதா?
பதில்: நான் தான் இப்ப அதிமுகவிலேயே இல்லையே, நான் என்ன அதிமுகவுலயா இருக்கேன். என்னை தான் கட்சியை விட்டு நீக்கிட்டார்களே. இப்போது பேசுவதை விட திங்கள்கிழமை சின்னம்மாவை சந்தித்து பேசி விட்டு உங்களிடம் பேசுகிறேன்.
இவ்வாறு ஒன் இந்தியா தமிழ் முன் வைத்த கேள்விகளுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் உடன்பிறந்த சகோதரர் ஓ.ராஜா தெரிவித்தார்.