கொரோனா பரவல் எதிரொலி... கூட்டமாக வரவேண்டாம்... கட்சியினருக்கு ஓ.பி.எஸ்.வேண்டுகோள்
தேனி: கொரோனா பரவல் எதிரொலியால் கட்சிக்காரர்கள் யாரும் கூட்டமாக நிகழ்ச்சிகளுக்கு வர வேண்டாம் என துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் அன்புக்கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள தனது இல்லத்தில் இருக்கும் ஓ.பி.எஸ்., அரசு அலுவல், ஆய்வு தொடர்பான கூட்டங்களில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார்.
அவ்வாறு அவர் செல்லும்போது அவருடைய வாகனத்தை பின் தொடர்ந்து கட்சிக்காரர்கள் வாகனமும் சாரை சாரையாக செல்லும். இந்நிலையில் அதற்கு தற்காலிக தடை போடப்பட்டுள்ளது.

நாளுக்கு நாள்
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதால் பொதுமக்களுக்கு அது தொடர்பான அச்சமும், கலக்கமும் அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக குறைந்த வயதில் கொரோனாவுக்கு பலியானவர்கள் விவரத்தை அறியும் போது அனைவருக்கும் ஒரு வித அதிர்ச்சி ஏற்படுகிறது. இதனிடையே எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் என பல தரப்பட்டோரும் கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பெரியகுளத்தில் ஓ.பி.எஸ்.
சென்னையில் கொரோனா பரவல் அதிகமாக உள்ள நிலையில் சொந்த ஊரான தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இருக்கிறார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். நிவாரண உதவி, மாவட்ட ஆட்சியரகத்தில் ஆலோசனைக் கூட்டம், ஆய்வு என தொடர்ந்து அரசு நிகழ்ச்சிகளில் சொந்த ஊரில் இருந்தவாறே ஓ.பி.எஸ். கலந்துகொள்கிறார். அவ்வாறு அவர் செல்லும் நிகழ்ச்சிகளுக்கு அதிமுகவில் இருந்து ஒரு பெரிய படையே அவருடன் பயணிக்கும்.

பாதுகாவலர்
இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாகவும், முன்னெச்சரிக்கை காரணமாகவும் இன்னும் சில நாட்களுக்கு ஓ.பி.எஸ்.சுடன் பெரியளவில் கூட்டமாக வர வேண்டாம் எனக் கட்சியினரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. ஓட்டுநர், பாதுகாவலர், தாம் உட்பட மூன்று பேர் மட்டுமே காரில் பயணிப்பதாகவும் மற்றவர்களுக்கு ஓபிஎஸ் காரில் இடமில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மிகுந்த கவனம்
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜாவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது அவரது குடும்பத்தினரை மிகுந்த கவலை கொள்ளச் செய்துள்ளது. இருவரும் தனி தனி வீடுகளில் குடியிருந்தாலும் ஓ.பி.எஸ்.சை மிகுந்த கவனத்துடன் பார்த்துக்கொள்கின்றனர் அவரது குடும்பத்தினர். அவசியமற்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதை முடிந்தவரை தவிர்க்கும் ஓ.பி.எஸ்., நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கிக்கொள்ள மூலிகை சூப், கசாயம் உள்ளிட்டவைகளை அருந்துகிறார்.












Click it and Unblock the Notifications