அதிமுகவில் இடமில்லை என்பது பழைய செய்தி.. எடப்பாடி பழனிசாமி கருத்துக்கு ஓபிஎஸ் சொன்ன பதில்!
தேனி: அதிமுகவில் சேர்க்க வாய்ப்பில்லை என்ற எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் எதிர்வினையாற்றி உள்ளார். அதிமுகவில் இடமில்லை என்பது பழைய செய்தி என்று கூறிய ஓபிஎஸ், மற்ற கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் காரில் புறப்பட்டு சென்றார். இதனால் ஓபிஎஸ்ஸின் அடுத்த நகர்வு என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் நேற்று தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்கு பின் ஓபிஎஸ் செய்தியாளர்களை சந்தித்து, அதிமுக தொண்டர்கள் உரிமையை மீட்கவே சட்டப்போராட்டம் நடத்தி வருகிறோம். அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்பதே எங்களின் தலையாய கோரிக்கை. தேர்தலில் போட்டியிட நாங்கள் ஒருங்கிணைப்பு குழுவை தொடங்கவில்லை.

தனிக்கட்சி தொடர்பாகவும் எந்த முடிவும் எடுக்கவில்லை. அதிமுக ஆட்சி அமைய வேண்டும் என்று சண்டையை மறந்துவிட்டு டிடிவி தினகரன் - எடப்பாடி பழனிசாமி கூட்டணி சேர்ந்துள்ளார்கள். அதேபோல் அதிமுக ஒன்றிணைய நானும் ரெடி.. இதற்கு எடப்பாடி பழனிசாமி மற்றும் டிடிவி தினகரன் ரெடியா என்று கேள்வி எழுப்பினார். இதனால் எடப்பாடி பழனிசாமி - ஓபிஎஸ் இணையப் போகிறார்களா என்ற கேள்வி எழுந்தது.
ஆனால் சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்து எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ஓபிஎஸ்ஸை அதிமுகவில் சேர்க்க வாய்ப்பே இல்லை. பொதுக்குழு உறுப்பினர்கள் 2,500 பேர் ஒன்றாக சேர்ந்து ஓபிஎஸ்ஸை நீக்கியுள்ளோம். 4 ஆண்டுகளாக இந்த கேள்விக்கு இதே பதிலைதான் கூறி வருகிறேன் என்று தெரிவித்தார்.
இதனால் ஓபிஎஸ்-க்கு அதிமுகவில் இடமில்லை என்பதில் எடப்பாடி பழனிசாமி பிடிவாதமாக இருப்பதாக தெரிகிறது. எடப்பாடி பழனிசாமியின் பதிலுக்கு பின் ஓபிஎஸ் மீதான விமர்சனங்களும் அதிகரித்தது. ஏனென்றால் மனோஜ் பாண்டியன் மற்றும் வைத்திலிங்கம் ஆகியோர் கூறியே 2வது தர்மயுத்தம் தொடங்கப்பட்டதாக ஓபிஎஸ் கூறி இருந்தார். இதனால் முதல்வர் தர்மயுத்தம் ஆடிட்டர் குருமூர்த்தி கூறி தொடங்கினார்..
2வது தர்மயுத்தம் இவர்கள் இருவரும் கூறி தொடங்கி இருக்கிறார். ஓபிஎஸ் சுயமாக முடிவு எடுக்க வேண்டும் என்று அதிமுகவினர் பலரும் விமர்சித்து வந்தனர். இதனால் ஓபிஎஸ்ஸின் அடுத்த நகர்வு என்ன என்ற கேள்வியும் எழுந்தது. இந்த நிலையில் தேனியில் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ்ஸிடம் எடப்பாடி பழனிசாமியின் கருத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு ஓபிஎஸ், அது பழைய செய்தி என்று பதில் அளித்து சென்றார். இதன்பின் செய்தியாளர்கள் கேட்ட எந்த கேள்விக்கும் ஓபிஎஸ் பதில் அளிக்கவில்லை. சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், ஓபிஎஸ்ஸின் அடுத்த நகர்வு குறித்த எதிர்பார்ப்பு அவரது ஆதரவாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications