"சதியின் பலிகடா.. நம்பவே முடியாது".. சசிகலா குறித்து.. தங்க தமிழ்ச்செல்வன் போட்டு உடைத்த பின்னணி!
தேனி: சசிகலாவை டிடிவி தினகரன் நம்பவைத்து ஏமாற்றிவிட்டார் என்று போடிநாயக்கனூர் தொகுதியின் திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் பேட்டி அளித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில் இந்த முறை போடிநாயக்கனூர் தொகுதியில் கடுமையான போட்டி நிலவுகிறது. இந்த தொகுதியில் அதிமுக சார்பாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து அதிமுகவில் இருந்து பிரிந்து அமமுகவில் இணைந்து பின் திமுகவிற்கு வந்த தங்க தமிழ்ச்செல்வன் போட்டியிடுகிறார் .
திமுக இவர் மீது பெரிய அளவில் நம்பிக்கை வைத்து களமிறக்கி உள்ளது. இதனால் போடிநாயக்கனூர் தொகுதியில் மிகவும் சுவாரசியமான போட்டி காணப்படுகிறது.
எப்படி
இந்த நிலையில் தேர்தல் குறித்தும் சசிகலா குறித்தும் தனியார் செய்தி நிறுவனங்களுக்கு தங்க தமிழ்ச்செல்வன் பேட்டி அளித்துள்ளார். அதில், போடி தொகுதியில் திமுகவின் வெற்றி வாய்ப்பு சிறப்பாக இருக்கிறது. எனக்கு மக்கள் ஆதரவு அதிகம் உள்ளது. அதிமுக மீது கட்சி தொண்டர்களே ஏமாற்றத்தில் உள்ளனர். ஆட்சிக்கு எதிரான மனநிலை நிலவி வருகிறது.
எதிர்ப்பு
திமுக என்னை நம்பி வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி. கண்டிப்பாக போடியிலும், மொத்தமாக தேனியிலும் திமுகவின் வெற்றிக்கு உழைப்பேன். எனக்கு கட்சியில் நல்ல மரியாதை இருக்கிறது. உதய சூரியன் சின்னம் மக்கள் மத்தியில் பிரபலம். அதனால் என்னுடைய வெற்றி வாய்ப்பு உறுதியாகிவிட்டது. அமமுக மக்கள் மத்தியில் பிரபலமாக இல்லை.
அமமுக
நான் அதிமுகவில் இருந்த போதும் சசிகலாவுடன் நேரடி தொடரில் இல்லை . என்னை கேட்டால் சசிகலா ஒரு பலிகடா என்றுதான் சொல்வேன். தினகரன் செய்த சதியின் பலிகடாதான் சசிகலா. இந்த தேர்தலில் அமமுக எப்படி செயல்படுகிறது என்பதை பொறுத்து சசிகலாவின் கம்பேக்கும் அமையும் என்று எதிர்பார்க்கிறேன்.
ஓ.பி.எஸ்
சசிகலாவிற்கு எதிராக தர்மயுத்தம் நடத்தியவர்தான் பன்னீர்செல்வம். ஜெயலலிதாவை சசிகலாதான் கொன்றார் என்றும் கூட குற்றஞ்சாட்டியவர்தான் பன்னீர்செல்வம். இதற்காக விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என்றும் கூட கூறினார். இதற்குத்தான் அவர் மெரினாவில் தர்ம யுத்தம் நடத்தினார்.
தர்ம யுத்தம்
இத்தனை வருடம் ஆகிவிட்டது. இன்னும் விசாரணை முடியவில்லை. விசாரணை கமிஷன் முன்பும் கூட பன்னீர்செல்வம் ஆஜராகவில்லை. சசிகலா மூலம்தான் பன்னீர்செல்வம் முதல்வர் ஆனார். ஆனால் அதே சசிகலாவிற்கு பன்னீர்செல்வம் துரோகம் செய்தார். இவரை எல்லாம் எப்படி நம்ப முடியும் என்று தங்க தமிழ்ச்செல்வன் கோபமாக குறிப்பிட்டுள்ளார்.