இடுக்கியை தமிழகத்துகிட்ட கொடுங்க.. சீமான் அதிரடி சரவெடி கோரிக்கை! பின்னணி என்ன?
தேனி: முல்லை பெரியாறு அணை பாதுகாப்பில்லை என்றால் இடுக்கி மாவட்டத்தை தமிழகத்திடம் கொடுத்துவிடுங்கள் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.
இடுக்கி மாவட்டத்தில் உள்ள முல்லை பெரியாறு அணை பாதுகாப்பில்லை என்பதால் அதை இடித்து விட வேண்டும் என மலையாள நடிகர் ப்ரித்விராஜ் ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை முன்வைத்தார். இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு நிலவியது.
இதையடுத்து அணை பாதுகாப்பாக இருக்கிறது என்றும் தவறான கருத்துகளை யாரும் பதிவிட வேண்டாம் என்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் கேட்டுக் கொண்டார். ஆனால் நீதிமன்றத்தில் அணை பாதுகாப்பாக இல்லை என கேரள அரசு ஒரு கருத்தை முன் வைத்துள்ளது முதல்வரின் கருத்துக்கு முரணாக உள்ளதாக விமர்சனங்கள் எழுந்தன.

இடுக்கி மாவட்டம்
இந்த நிலையில் #AnnexeIdukkiWithTN என்ற ஹேஷ்டேக் டிரென்டானது. அதாவது இடுக்கி மாவட்டத்தை தமிழகத்துடன் இணைத்துவிடுமாறு கோரிக்கை எழுந்தது. முல்லை பெரியாறு அணையை இடிக்கும் நோக்கில் செயல்படும் கேரள அரசை கண்டித்து தேனியில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதில் பங்கேற்ற நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், முல்லை பெரியாறு அணையில் கேரள நீர் வளத்துறை அமைச்சர் உள்ளிட்டோர் சேர்ந்து தண்ணீரைத் திறந்தனர்.

தண்ணீர் திறப்பு
இதுகுறித்து பேசிய தமிழக நீர் வளத் துறை அமைச்சர் துரைமுருகனோ தமிழக அரசுக்கு தெரிந்துதான் தண்ணீர் திறக்கப்பட்டது என்கிறார். தண்ணீர் திறக்கும் போது தமிழக அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் ஏன் அங்கு செல்லவில்லை? தமிழர்களால் கட்டப்பட்ட அணையை இடிக்க விடமாட்டோம். 142 அடி வரை அணையில் தண்ணீர் தேக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் 136 அடியை தாண்டிய போதே தண்ணீர் திறக்கப்பட்டதற்குத் தமிழக அரசு கண்டனம் தெரிவிக்கவில்லை.

முல்லை பெரியாறு அணை விஷயம்
முல்லை பெரியாறு அணையை இடிக்க வேண்டும் என கேரளா தொடர்ந்து கூறி வரும். இதற்கு தமிழக அரசு கண்டனம் தெரிவிக்கவில்லை. முல்லை பெரியாறு அணை விஷயத்தில் தமிழக அரசோட நிலைப்பாடு என்ன என விளக்குங்கள். பேபி அணையைப் பலப்படுத்தத் தடையாக உள்ளதாகக் கூறப்படும் மரங்களை வெட்ட 40 ஆண்டுகளாக கேரள அரசுடன் போராட வேண்டிய நிலை உள்ளது. பெருந்தலைவர் காலத்தில் தேவிக்குளம், பீர்மேடு பகுதிகள் கேரளாவுடன் சென்றது.

இடுக்கி
அதைத் தொடர்ந்து அணையின் பாதுகாப்புப் பணி உரிமையையும் எம்ஜிஆர் விட்டுக்கொடுத்தார். தற்போது அணை பலவீனமாக உள்ளது, பாதுகாப்பில்லாத சூழல் உள்ளது என்கிறார்கள். அவ்வாறு பாதுகாப்பு இல்லாமல் இருக்கிறது என நினைத்தால் இடுக்கி மாவட்டத்தைத் தமிழகத்திடம் கொடுத்துவிடுங்கள். முல்லை பெரியாறு விவகாரத்தில் தண்ணீரை 136 அடியாக தேக்கியதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தும் பாஜக இந்த விவகாரத்தை பிரதமர் நரேந்திர மோடியிடம் ஏன் முறையிட தயங்குகிறது. அவ்வாறு முறையிட்டால் தீர்வு கிடைத்துவிடுமே என சீமான கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications