இலக்கியாவுக்கு ’டவுட்’..நள்ளிரவில் அலறல் சத்தம்! உடல் கருகி உயிரிழந்த பொன் விஜய்..செல்போன் விபரீதம்
தேனி: தேனி அருகே செல்போனில் பெண்களுடன் பேசுவதாக ஏற்பட்ட சந்தேகத்தால் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த கணவன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொலை செய்ய முயன்ற மனைவி கைது செய்யப்பட்ட நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கணவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். உயிரிழந்தவர் மதுரை மேயர் இந்திராணியின் கணவர் பொன் வசந்தின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள கூடலூர் பகுதியைச் சேர்ந்தவர் பொன்விஜய். இவருக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பிருப்பதாக சந்தேகம் அடைந்த, அவரது மனைவி இலக்கியா (37) அடிக்கடி கணவருடன் சண்டையிட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக தம்பதியரினடையே குடும்பத் தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினமும் தம்பதியருக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையால் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த கணவர், பொன்விஜய் மீது நேற்று காலை அவரது மனைவி இலக்கியா, பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார்.
பொன் விஜய்-ன் அலறல் சத்தத்தை கேட்ட அவரது தாயார் கண்ணம்மாள் (80) எழுந்து பார்த்து அக்கம் பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக வந்த அவர்கள் தீயில் எரிந்து கொண்டிருந்த பொன் விஜய்யை மீட்டு சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இது தொடர்பாக பொன் விஜய்யின் தாய் கண்ணம்மாள் புகாரில், இலக்கியா மீது வழக்குப் பதிந்த கூடலூர் வடக்கு காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் நடத்திய விசாரணையில் பொன் விஜய் அடிக்கடி மொபைலில் வேறு சில பெண்களுடன் பேசிக் கொண்டிருந்ததாகவும் இதனால் அவர் மீது சந்தேகம் அடைந்த இலக்கியா கணவருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இதனையடுத்து அவரது உறவினர்கள் இருவரையும் சமாதானம் செய்திருக்கின்றனர். இந்த நிலையில் தான் கடந்த 30ஆம் தேதி மீண்டும் தகராறு ஏற்பட்டபோது நள்ளிரவில் பொன் விஜய் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்தது தெரியவந்தது. இந்த நிலையில் உடல் முழுவதும் 70% தீக்காயம் ஏற்பட்ட நிலையில் பொன் விஜய்க்கு கடந்த ஐந்து நாட்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பொன்விஜய் நேற்று உயிரிழந்தார்.

இதை அடுத்து அவரது உடல் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் உடர்கூறு ஆய்வு செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு கூடலூரில் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதற்கிடையே பொன் விஜய் உயிரிழந்ததால் இலக்கியா மீது பதியப்பட்ட கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மனைவியால் எரித்துக் கொலை செய்யப்பட்ட பொன் விஜய் மதுரை மேயர் இந்திராணியின் நெருங்கிய உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திராணியின் கணவர் பொன் வசந்தின் சகோதரர் தான் பொன் விஜய் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பொன்விஜய் உயரிழந்த தகவலை கேட்டு மதுரை மேயர் இந்திராணி மற்றும் அவரது கணவர் பொன் வசந்த் ஆகியோர் கூடலூர் சென்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.












Click it and Unblock the Notifications