தென் மாவட்ட மக்கள் மகிழ்ச்சி... முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் அதிகரிப்பு
தேனி: கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால் முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை கடந்த 8 ம் தேதி தொடங்கியது. இதனால் மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளிலும், பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியிலும் மழை பெய்து வருகிறது. இதனால், முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

கடந்த 20 நாட்களுக்கு மேலாக 112 அடியிலேயே இருந்த அணையின் நீர்மட்டம் இன்று 112.15 அடியாக உயர்ந்துள்ளது. நீர்வரத்தும் 325 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவும் உயர்த்தப்பட்டு 100 கனஅடியாக திறந்துவிடப்படுகிறது. இதனால், தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.
தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் விவசாயத்திற்கும், குடிநீருக்கும் ஆதாராமாக வைகை அணை உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் வைகை அணைக்கு நீர்வரத்து முற்றிலும் நின்று போய் இருந்தது.
கடந்த 4 வாரங்களாக வைகை அணைக்கு நீர்வரத்து இல்லாத நிலையில், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வரும் சூழலில், மீண்டும் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.தற்போது, வைகை அணையின் நீர்மட்டம் 33.83 அடியாக உள்ளது. மதுரை மாநகர குடிநீருக்காக மட்டும் 60 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.
முதல்போக சாகுபடிக்காக ஜூன்மாதம் முதல் வாரத்தில் தண்ணீர் திறப்பது வழக்கம். ஆனால் இந்த வருடம் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படாத நிலையில் தற்போது பெய்து வரும் மழையினால் தாமதமாக தண்ணீர் திறந்தாலும் அதனை பயன்படுத்தி சாகுபடி செய்ய விவசாய நிலங்களை தயார் நிலையில் வைத்துள்ளனர்.
இதற்கிடையே, மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா முல்லைபெரியாறு - வைகை அணை தண்ணீரை நம்பியுள்ள கடைமடை பகுதி. இங்குள்ள கொட்டாம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட 50 க்கும் மேற்பட்ட கிராமங்கள் வானம் பார்த்த பூமியாக உள்ளது. இதனால் தங்கள் பகுதிக்கும், பெரியாறு பாசன கால்வாய் அமைத்துத்தர வலியுறுத்தி உள்ளனர்.












Click it and Unblock the Notifications