மகளிர் உரிமை தொகை போல்.. மாதம் 1000 ரூபாய் தரும் தமிழக அரசு.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
தேனி: வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்தவர்களுக்கு காலாண்டு ஒன்றுக்கு எஸ்.எஸ்.எல்.சி. தோல்வி கல்வித் தகுதியை பதிவு செய்தவர்களுக்கு ரூ.600, எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பதிவு செய்தவர்களுக்கு ரூ.900, மேல்நிலை வகுப்பு தேர்ச்சி பதிவு செய்தவர்களுக்கு ரூ.1,200, பட்டம் மற்றும் முதுகலைப் பட்டம் படித்து பதிவு செய்தவர்களுக்கு ரூ.1,800 என 3 ஆண்டுகளுக்கு உதவித்தொகை தமிழக அரசால் வழங்கப்படுகிறது. இதற்கு இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்.
தமிழக அரசு கலைஞர் மகளிர் உரிமை தொகை என்ற திட்டம் மூலம் மாதம் 1000 ரூபாய் பெண்களுக்கு வழங்கி வருகிறது. இதேபோல் அரசு பள்ளியில் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் படித்து கல்லூரி படிப்பில் சேரும் மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டம் என்ற பெயரில் மாதம் 1000 ரூபாய் அரசு வழங்கி வருகிறது. இதேபோல் தமிழ் புதல்வன் என்ற திட்டத்தின் பெயரில் இதேபோல் அரசு பள்ளியில் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் படித்து கல்லூரி படிப்பில் சேரும் மாணவர்களுக்கும் படிப்பு காலம் முடியும் வரை மாதம் 1000 ரூபாய் உதவி தொகை அரசு வழங்கி வருகிறது. படிப்பதற்காக ஊக்குவிக்கும் வகையில் இந்த திட்டத்தை செயல்படுத்தி வரும் அரசு, படித்து முடித்து வேலையில் சேருவதற்காக நான் முதல்வன் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் இளைஞர்கள், மாணவிகள், பயிற்சி பெற்று நல்ல வேலைகளில் எளிதாக சேர முடியும். அரசே பெரு நிறுவனங்களில் வேலைக்கு சேர ஏராளமான வழிகளை காட்டுகிறது.

அதேநேரம் படித்து முடித்து வேலை வாய்ப்பு அன்ற இளைஞர்கள் மற்றும் வேலைவாய்ப்ப அற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி தொகையும் அரசு வழங்கி வருகிறது. இதில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் 1000 ரூபாய் என 10 ஆண்டுகளுக்கு வழங்குகிறது. மற்றவர்களுக்கு காலாண்டுக்கு ஒருமுறை கனிசமான உதவி தொகையை 3 ஆண்டுகளுக்கு வழங்கி வருகிறது.
இதுபற்றி தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: "தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், பதிவு செய்து, 31.12.2024 அன்றைய தேதிப்படி குறைந்தபட்சம் 5 ஆண்டுக்கும் மேலாக காத்திருப்போருக்கு அரசால் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
தற்போது இத்திட்டத்தின்படி காலாண்டு ஒன்றுக்கு எஸ்.எஸ்.எல்.சி. தோல்வி கல்வித் தகுதியை பதிவு செய்தவர்களுக்கு ரூ.600, எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பதிவு செய்தவர்களுக்கு ரூ.900, மேல்நிலை வகுப்பு தேர்ச்சி பதிவு செய்தவர்களுக்கு ரூ.1,200, பட்டம் மற்றும் முதுகலைப் பட்டம் படித்து பதிவு செய்தவர்களுக்கு ரூ.1,800 என 3 ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.
மாற்றுத்திறனாளி மனுதாரர் எனில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து, குறைந்தபட்சம் ஒரு ஆண்டு நிறைவு செய்திருந்தாலே போதுமானது. இவ்வாறான மனுதாரர்களின் எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி மற்றும் அதற்கு கீழான தகுதி வரை பதிவு செய்தவர்களுக்கு மாதம் ரூ.600, மேல்நிலைக் கல்வித் தகுதியை பதிவு செய்தவர்களுக்கு ரூ.750, பட்டதாரிகள் எனில் ரூ.1,000 ஆயிரம் என 10 ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும்.
பொறியியல், மருத்துவம், விவசாயம், கால்நடை மருத்துவம், சட்டம் போன்ற தொழிற்கல்வி பட்டதாரிகள் இந்த உதவித்தொகை பெற முடியாது. தகுதியுள்ள நபர்கள் www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து முழுமையாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பத்தை இலவசமாக பெற்றும் பூர்த்தி செய்து அளிக்கலாம்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ளவர்கள் மட்டுமின்றி அந்தந்த மாவட்டங்களை சேர்ந்தவர்கள் அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலவலகத்தில் இதற்கு விண்ணப்பிக்கலாம்.












Click it and Unblock the Notifications