வீட்டின் பூஜை அறையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த நர்ஸ்... ஆண்டிபட்டியில் அதிர்ச்சி
ஆண்டிபட்டியில் அரசு மருத்துவமனையில் பணிபுரிந்த நர்ஸ் வீட்டின் பூஜை அறையில் அடித்து கொலை செய்யப்பட்டது பற்றி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தேனி : அரசு மருத்துவமனையில் பணிபுரிந்த நர்ஸ் தனது வீட்டின் பூஜை அறையில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஆண்டிபட்டியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெயர் செல்வி என்பதாகும். இவர் சுரேஷ் என்பவரின் மனைவியாவார். 43 வயதான செல்வி ஆண்டிபட்டி அரசு மருத்துவமனையில் 17 ஆண்டுகளாக நர்ஸ் ஆக வேலை செய்து வந்தார். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
செல்வியின் கணவர் சுரேஷ் திண்டுக்கல்லில் தங்கி கேட்டரிங் வேலை செய்து வருகிறார். மகனும், மகளும் சுரேஷ் உடன் திண்டுக்கல்லில் தங்கியுள்ளனர். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஆண்டிபட்டி அருகே பாப்பம்மாள்புரம் பகுதியில் தனியாக வீட்டில் வசித்து வந்தார். பிள்ளைகளுக்காக கணவருடன் அவ்வப்போது பேசி வந்துள்ளார் செல்வி.
நேற்று செல்வியிடம் இருந்து போன் எதுவும் வராமல் போகவே, செல்வியின் செல்போனுக்கு சுரேஷ் தொடர்பு கொண்டார். அப்போது சுவிட்ச் ஆஃப் என தகவல் வரவே, அக்கம் பக்கத்தில் இருந்த உறவினர்களிடம் கூறி செல்வியை போய் பார்த்து விட்டு வரச்சொன்னார் சுரேஷ்.
வீடு பூட்டி இருக்கவே, கதவை தட்டியும் செல்வி திறக்கவில்லை. சந்தேகம் அடைந்த உறவினர்கள் கதவை உடைத்துக்கொண்டு போய் பார்த்தனர். வீட்டின் பூஜை அறையில் முகம் மற்றும் தலையில் பலத்த காயங்களுடன் செல்வி கொடூரமாக இறந்து கிடந்துள்ளார். அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உடனடியாக சுரேசுக்கு தகவல் தெரிவித்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து மகனையும் மகளையும் அழைத்துக்கொண்டு வந்தார் சுரேஷ், மனைவியின் கொலை பற்றி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் செல்வியின் உடலைக் கைப்பற்றி தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
கொலை சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துவிசாரணை செய்து வருகின்றனர். செல்வி முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? குடும்ப பிரச்சனையால் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். டி.எஸ்.பி. தங்ககிருஷ்ணன் மற்றும் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனை நர்ஸ் வீட்டின் பூஜை அறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஆண்டிபட்டியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.