2 சிறுமிகளுக்கு எமனாக மாறிய செப்டிக் டேங்க்..பெற்றோர் மறியல்..2 பேரை சஸ்பெண்ட் செய்த தேனி ஆட்சியர்
தேனி: பண்ணைபுரத்தில் செப்டிக் டேங்க் மூடி உடைந்து விழுந்ததில் இரண்டு சிறுமிகள் பலியான சம்பவம் பெற்றோரை கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது. அலட்சியமாக செயல்பட்ட 2 பேரூராட்சி அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து தேனி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே அமைந்திருக்கிறது பண்ணைப்புரம் பேரூராட்சி. அங்கிருக்கும் பாவலர் தெருவைச் சேர்ந்த ஈஸ்வரன் மகள் நிகிதாஸ்ரீ ,7, மேற்குத் தெருவைச் சேர்ந்த ஜெகதீஷ் மகள் சுபஸ்ரீ ,6 ஆகியோர் அந்தப் பகுதியிலுள்ள அரசுப் பள்ளியில் 2ஆம் வகுப்பு படித்து வந்தனர்.
இந்த நிலையில், அந்தப் பகுதியிலுள்ள பெண்கள் பொது சுகாதார வளாகத்தின் செப்டிக் டேங்க் மேல் பகுதியில் சிறுமிகள் இருவரும் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக தொட்டியின் சிமென்ட் கல் மேல் மூடி உடைந்தது. இதில் சிறுமியர் இருவரும் தவறி தொட்டிக்குள் விழுந்தனர்.
சிறுமிகளின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் குழிக்குள் விழுந்த இருவரையும் மீட்டனர். அதில் நிகிதாஸ்ரீ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சிகிச்சைக்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சுபஸ்ரீ செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
இதையடுத்து சிறுமிகளின் உறவினர்கள் உத்தமபாளையம் - தேவாரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். பல ஆண்டுகள் பழைமையான கழிவுநீர்த் தொட்டியை முறையாகப் பராமரிக்காத பேரூராட்சியின் அலட்சியத்தாலே இந்த உயிர் பலி ஏற்பட்டிருப்பதாக குற்றம்சாட்டினர். சிறுமிகளின் உடலை வாங்க மறுத்து மறியலில் ஈடுபட்டதால் 2 மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவலறிந்து வந்த உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், சிறுமிகள் மரணத்துக்கு நீதி கிடைக்கும் எனவும் உறுதியளித்ததை அடுத்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். சிறுமிகள் மரணம் குறித்து கோப்பை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
இதனிடையே சிறுமிகள் மரணத்திற்கு காரணமான அலட்சியமாக செயல்பட்ட பண்ணைபுரம் பேரூராட்சியைசேர்ந்த செயல் அலுவலர்,இளநிலை பொறியாளரை பணியிடை நீக்கம் செய்து தேனி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.