தேனியில் தாசில்தார், சர்வேயர், விஏஓ.. அரசு அதிகாரிகளுக்கு புதிய வழியில் பாடம் புகட்டிய விவசாயி
தேனி: நிலத்தை அளவீடு செய்து கொடுக்காத அதிகாரிகளுக்கு எதிராக சின்னமனூர் அருகே உள்ள மூர்த்திநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ராஜேஷ் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தனது நிலத்தை பட்டா மற்றும் பத்திரத்தில் உள்ளபடி நில அளவை செய்து, அத்துமால் செய்து கொடுக்காமல் தாமதித்த நில அளவைத் துறை உதவி இயக்குனர், உத்தமபாளையம் தாசில்தார், தலைமை நில அளவையர், ஓடைப்பட்டி நில அளவையர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோருக்கு பாடம் புகட்டியுள்ளார்.
ஒரு நிலத்தை விற்பனை செய்வதற்கும், அதை தனித்தனியாக பிரித்து அளவீடு செய்து வீட்டுமனைகளாக விற்பதற்கும், டிடிசிபி அங்கீகாரம் பெறுவதற்கும், வீட கட்டுவதற்கும், வீடு கட்ட கடன் வாங்குவதற்கும் நிலத்தின் உண்மையான அளவு என்ன.. பத்திரத்தில் உள்ள அளவு என்ன.. பட்டாவிற்கு உள்ள அளவு என்ன.. என்பதை அறிவதற்கு நிலத்தை அளவீடு செய்வது என்பது மிகவும் முக்கியம். ஆனால் நிலத்தை அளவீடு செய்வதற்கு இசேவை மையத்தில் விண்ணப்பிக்க வேண்டும்..

அப்படி விண்ணப்பித்தாலும் சில நேரங்களில் அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதும் நடக்கிறது. அதேநேரம் சில சமயங்களில் தாமதம் ஏற்படுகிறது.. இதனால் அலைகழிக்கப்படும் விவசாயிகள் கடைசியில் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்து நிவாரணம் பெறுகிறார்கள்.. தேனியில் ஒரு விவசாயி நிலத்தை அளவீடு செய்து கொடுக்காததால் இழப்பீடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நிவாரணமும் பெற்றுள்ளார்.
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள மூர்த்திநாயக்கன்பட்டியை சேர்ந்த 47 வயதாகும் ராஜேஷ் என்பவர் விவசாயி ஆவார். இவர், பத்து ரூபாய் இயக்கத்தின் மாவட்ட இணைச் செயலாளராக இருக்கிறார். இவர் தனது நிலத்தை பட்டா மற்றும் பத்திரத்தில் உள்ளபடி நில அளவை செய்து, அத்துமால் செய்து கொடுக்குமாறு நில அளவைத்துறையில் மனு கொடுத்திருக்கிறார்.
ஆனால் அவருக்கு அத்துமால் செய்து கொடுக்காமல் தாமதித்தனர். அரசு உயர் அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் தீர்வு கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து அவர் தேனி மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்கள். அதில், நில அளவைத் துறை உதவி இயக்குனர், உத்தமபாளையம் தாசில்தார், தலைமை நில அளவையர், ஓடைப்பட்டி நில அளவையர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோரை எதிர்மனு தரப்பினர்களாக குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு தேனி நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி சுந்தர், உறுப்பினர் சவுந்திரராஜன் ஆகியோர் கொண்ட அமர்வில் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை முடிவில் கோர்ட்டு ஒரு உத்தரவை பிறப்பித்தது. அதில், "மனுதாரர் ராஜேசுக்கு பாத்தியப்பட்ட சொத்தை, எதிர்தரப்பினர் அத்துமால் அளவீடு செய்து அறிக்கை மற்றும் வரைபடத்தை ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும். எதிர்தரப்பினர்களின் சேவை குறைபாட்டினால் ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் மன வேதனைக்கு இழப்பீடாக ரூ.30 ஆயிரத்தை ஒரு மாத காலத்துக்குள் செலுத்த வேண்டும். வழக்கு செலவுத் தொகையாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications