எட்டி பார்க்காத நிர்வாகிகள்! கடும் அப்செட்டில் கம்பம் ராமகிருஷ்ணன்! தேனி மாவட்ட திமுக ரவுண்ட் அப்!
தேனி: தேனி தெற்கு மாவட்ட திமுக செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள கம்பம் ராமகிருஷ்ணனை நிர்வாகிகள் யாரும் பெரியளவில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்காததால் கடும் அப்செட்டில் இருந்து வருகிறார்.
உள்ளூர் அரசியலில் இருக்கும் கடும் எதிர்ப்பையும் மீறி தலைமை அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியதால் ஏற்பட்ட அதிருப்தியின் வெளிப்பாடாக, இந்த விவகாரம் பார்க்கப்படுகிறது.
இதனிடையே தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளராக தேர்வாகியுள்ள தங்க.தமிழ்ச்செல்வனை கட்சி நிர்வாகிகள் தொடர்ந்து சந்தித்த வண்ணம் இருக்கின்றனர்.
மும்பை ஹாஜி அலி தர்காவில்.. உலகின் மிக உயரமான கொடிக் கம்பம்! மூவர்ணக் கொடி ஏற்ற உள்ள பிரமதர் மோடி
தேனி மாவட்டம்
தேனி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் பதவிக்கு கடும் போட்டி நிலவியது. நீயா நானா என கம்பம் ராமகிருஷ்ணனும், ஜெயக்குமாரும் ஒருவருக்கு ஒருவர் மோதினர். ஜெயக்குமார் தரப்பு வலிமையான டீமை கையில் வைத்திருந்ததால் அறிவாலயம் நிர்வாகிகள் அவரை சமாதானம் செய்து போட்டியிலிருந்து ஒதுங்க வைத்தனர். ஸ்டாலினுக்காக அந்த சமாதானத்தை ஏற்றுக்கொண்டு ஊர் திரும்பினார் தேனி மாவட்ட திமுக முன்னாள் பொறுப்பாளர் ஜெயக்குமார்.
கம்பம் ராமகிருஷ்ணன்
இதையடுத்து தனக்கு ரூட் கிளியரானதும் மேலிட லாபி மூலம் தேனி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் பதவியை கைப்பற்றினார் கம்பம் ராமகிருஷ்ணன். மாவட்டச் செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ள கம்பம் ராமகிருஷ்ணனை கட்சியின் அனைத்து மட்ட நிர்வாகிகளும் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரது ஆதரவாளர்களை தவிர கட்சியினர் பெரும்பாலானோர் எட்டிக்கூட பார்க்கவில்லையாம்.
தலைமை அறிவுறுத்தல்
இதனால் மாவட்டச் செயலாளர் ஆகியும் அவர் கடும் அப்செட்டில் இருந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால் அதே வேளையில் தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ள தங்க தமிழ்ச்செல்வனை கட்சியினர் சந்தித்து வாழ்த்துக் கூறி வருகின்றனர். அதிருப்தியில் இருப்பவர்களை சரிகட்டி சமாதானம் செய்து அவர்களுடன் இணைந்து பயணிக்க வேண்டும் என்ற அறிவுறுத்தலை வழங்கி தான் கம்பம் ராமகிருஷ்ணனை ஊருக்கு அனுப்பி வைத்திருக்கிறது கட்சித் தலைமை.
தங்க.தமிழ்ச்செல்வன்
தங்க.தமிழ்ச்செல்வனுக்கும் ஆரம்பத்தில் கடும் எதிர்ப்பு இருக்கத்தான் செய்தது. ஆனால் தன்னை எதிர்ப்பவர்களிடம் இறங்கி வந்து சமாதானம் பேசி தேவையானவற்றை செய்துக் கொடுத்து சாதுர்யமாக சரிகட்டிக் கொண்டார். இதனிடையே ஒன்றிய, நகரச் செயலாளர் பதவிகள் தொடர்பான பஞ்சாயத்துக்களும் இன்னும் ஓய்ந்தபாடில்லை.