பெரியகுளத்தின் பெரிய மனுஷன் யார்? களமிறக்கப்படுகிறாரா ஓ.பி.எஸ். இளையமகன் ஜெயபிரதீப்?
தேனி: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் இளைய மகனான ஜெயபிரதீப், ஆன்மிகத்தில் மிகுந்த ஈடுபாடு காட்டி வரும் நிலையில் அவரது அடுத்த நகர்வு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஆதரவாளர்கள் மத்தியில் எழுந்திருக்கிறது.
தற்போது நேரடி அரசியலில் ஈடுபடவில்லை என்றாலும் கூட, தனது தந்தைக்கு உதவியாக அதிமுகவில் பல முக்கிய விவகாரங்களை கவனித்து வருகிறார்.
கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது கம்பம் தொகுதியில் ஜெயபிரதீப் போட்டியிடக் கோரி நூற்றுக்கணக்கானோர் விருப்பமனு கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இளையமகன்
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் இளையமகன் ஜெயபிரதீப்பை பொறுத்தவரை ஆன்மிக பற்றாளர் என்ற பிம்பத்தை கட்டமைத்து வைத்திருக்கிறார். கோயில் திருப்பணிகள், கும்பாபிஷேக விழாக்களில் கலந்துகொள்வது, சிறப்பு வாய்ந்த ஆன்மிக தலங்களுக்கு சென்று வழிபடுவது என்றிருக்கும் ஜெயபிரதீப்பிற்குள், அரசியல் ஆசையும் அவ்வப்போது எட்டிப்பார்ப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதனடிப்படையில் தான் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் கூட இவர் கம்பம் தொகுதியில் களமிறக்கப்படுவார் என்ற பேச்சு எழுந்தது.

பெரியகுளம் நகராட்சி
இந்தச் சூழலில் தற்போது நேரடி அரசியலில் ஈடுபடாத இவர், விவசாயப் பணிகளில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். ஆன்மிகம், விவசாயம் என வலம் வந்துகொண்டிருக்கும் ஜெயபிரதீப்பை பெரியகுளம் நகராட்சி சேர்மன் பதவிக்கு போட்டியிடக் கோரி அவரது ஆதரவாளர்கள் நச்சரிக்க தொடங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. ஏற்கனவே பெரியகுளம் நகராட்சி சேர்மனாக ஓ.பி.எஸ். உடன்பிறந்த சகோதரர் ஓ.ராஜா இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஓ.பி.எஸ். அமைதி
இதனிடையே ஓ.பன்னீர்செல்வத்தை பொறுத்தவரை அரசியலில் தாமும், மூத்த மகன் ரவீந்தரநாத்தும் இருப்பதால் ஜெயபிரதீப்பின் விஜயத்தை அவர் விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. இருப்பினும் ஓ.ராஜாவுக்கு பதில் ஓ.பி. ஜெயபிரதீப்பை பெரியகுளம் நகராட்சி தேர்தலில் நிறுத்த அவரது ஆதரவாளர்கள் முயற்சித்து வருகின்றனர். இந்நிலையில் பெரியகுளம் நகராட்சியை கைப்பற்ற திமுக மாவட்டப் பொறுப்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் பல்வேறு வியூகங்களை வகுத்து அதை செயல்படுத்தும் திட்டத்தில் இருக்கிறார்.

தனி ஆதரவாளர்கள்
தேனி மாவட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு என பொதுவான ஆதரவாளர்கள் வட்டம் உள்ள நிலையில் அவரது மகன்களான ஓ.பி.ரவீந்தரநாத் மற்றும் ஜெயபிரதீப் ஆகியோருக்கு சொந்த மாவட்டத்திலேயே தனித்தனி ஆதரவாளர்கள் வட்டம் இருப்பது கவனிக்கத்தக்கது.












Click it and Unblock the Notifications