தேனியில் ஆட்டோவில் சென்ற ஆசிரியை.. கழுத்தில் தங்க நகை.. சலனமான டிரைவருக்கு பெரிய ட்விஸ்ட்
தேனி: தேனி சமதர்மபுரம் காமராஜர் பூங்கா பகுதியை சேர்ந்த முனியம்மாள் என்பவர் ஓய்வு பெற்ற ஆசிரியை ஆவார். இவர் தேனி-மதுரை சாலையில் நடந்த ஜெப கூட்டத்தில் கலந்து கொண்டார். பின்னர் ஆட்டோவில் சென்றார்.. ஆனால் அந்த ஆட்டோவை ஓட்டிய டிரைவர் மாற்று வழியாக செல்வதாக கூறி தேனி-பெரியகுளம் சாலை தென்றல் நகர் பகுதிக்கு அழைத்து சென்றார். பின்னர் அங்கு ஆட்டோவை நிறுத்தி மூதாட்டியை மிரட்டி 9 பவுன் தங்க நகை மற்றும் பணத்தை பறித்துள்ளார்.
ஆட்டோவில் ஏறி செல்லும் போது, மிக அபூர்வமாக சில நேரங்களில் கற்பனை கூட செய்யாத சம்பவங்கள் நடப்பது உண்டு. ஆட்டோ ஓட்டும் பலரும் பயணியைமிரட்டி பணம் பறித்து, அத்துமீறுவது போன்ற காரியங்களில் ஈடுபட மாட்டார்கள். ஆட்டோவில் ஏறும் பயணிகளை பத்திரமாக கொண்டு போய் இறக்கிவிடுவார்கள். அவர்கள் பை, பணத்தை மறந்தாலும் எடுத்து கொடுத்துவிடுவார்கள்.

சிலர் நகைகளை பறிப்பார்கள்
பலர் மிகவும் நேர்மையானவர்களாக இருக்கிறார்கள். ஆனால் விரல் விட்டு எண்ணக்கூடிய சில கயவர்கள் குடித்து விட்டு ஆட்டோ ஓட்டுவார்கள். தனியாக செல்லும்பெண் அல்லது மூதாட்டியை மிரட்டி பணம் பறிப்பார்கள். நகை அணிந்திருந்தால் கத்தியைகாட்டி மிரட்டி நகைகளை கழட்டி தர சொல்லி கேட்பார்கள். அது மிக அபூர்வமாகவே நடக்கும். அப்படி ஒரு நிகழ்வு தேனியில் நடந்துள்ளது.
ஆட்டோவில் ஏறினார்
தேனி சமதர்மபுரம் காமராஜர் பூங்கா பகுதியை சேர்ந்த 56 வயதாகும் ஜான் இருதயராஜ் வசிக்கிறார். இவரது தாய் முனியம்மாளுக்கு 85 வயது ஆகிறது. இவர் ஓய்வு பெற்ற ஆசிரியை ஆவார். தேனி கொண்டுராஜா லைனில் தனியாக வசித்து வருகிறார். கடந்த 5-ந்தேதி தேனி-மதுரை சாலையில் நடந்த ஜெப கூட்டத்தில் முனியம்மாள் கலந்துகொண்டார். பின்னர் அங்கிருந்து தனது வீட்டுக்கு செல்வதற்காக ஒரு ஆட்டோவில் ஏறினார். வீட்டுக்கு செல்லும் வழியில் உள்ள ஒரு ஓட்டலில் ஆட்டோவை நிறுத்தி டிரைவரிடம் தோசை வாங்கி கேட்டார். அப்போது தான் வைத்திருந்த பையில் இருந்த பணத்தை எடுத்து ஆட்டோ டிரைவரிடம் கொடுத்தார்.
தோசை வாங்கிய பின்பு ஆட்டோவில் புறப்பட்டார். ஆனால் ஆட்டோ டிரைவர் மாற்று வழியாக செல்வதாக கூறி தேனி-பெரியகுளம் சாலை தென்றல் நகர் பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர் அங்கு ஆட்டோவை நிறுத்தி மூதாட்டியை மிரட்டி கழுத்தில் அணிந்திருந்த 9 பவுன் சங்கிலியை பறித்துள்ளாராம். தொடர்ந்து முனியம்மாளிடம் இருந்த ரூ.10 ஆயிரத்தை பறித்துக்கொண்டு அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தாராம். இதையடுத்து மூதாட்டியை சாலையில் இறக்கிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றதாக கூறப்படுகிறது.
டிரைவர் கைது
தனது தாயார் முனியம்மாளுக்கு நடந்த சம்பவம் குறித்து அல்லிநகரம் போலீஸ் நிலையத்தில் ஜான் இருதயராஜ் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் நகை பறிப்பில் ஈடுபட்டது தேனி தீயணைப்பு நிலைய ஓடைத்தெரு பகுதியை சேர்ந்த விக்னேஷ் (30) என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications