நண்பனுக்கு கல்யாணம்.. திருநெல்வேலி வந்த சென்னை நண்பர்கள்.. தாமிரபரணியில் குளித்த போது விபரீதம்
நெல்லை: நண்பனின் கல்யாணத்தில் பங்கேற்க சென்னையில் இருந்து திருநெல்வேலி வந்த இரண்டு இளைஞர்கள், தாமிரபரணி ஆற்றில் குளிக்க சென்றபோது தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மற்றொருவர் உயிர் தப்பினார்.
சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்தவர் புஷ்பராஜ் என்பவருடைய மகன் சக்தி (வயது 25). இவர் சென்னையில் ரயில்வே மெயில் சர்வீசில் தற்காலிக ஊழியராக வேலை செய்து வருகிறார்.இவருக்கு திருமணம் செய்ய பெற்றோர்கள் முடிவு செய்தனர். திருமணத்திற்காக நெல்லையை அடுத்த திருவேங்கடநாதபுரத்தில் உள்ள உறவினரின் வீட்டுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு சக்தி வந்தார். திருமண ஏற்பாடுகள் நடந்து வந்தது.

இந்த நிலையில் சக்தியின் நண்பர்களான சென்னை ஆயிரம்விளக்கு ஆசிஸ் முல்க் பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் ஸ்ரீராம் (25), மாடர்ன் ஸ்கூல் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் ஆட்டோ டிரைவர் அருண் (24), மோர்ஸ் ரோடு 9-வது தெருவைச் சேர்ந்த முனுசாமி மகன் வினோத் (24) ஆகிய 3 பேரும் சக்தியின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக திருவேங்கடநாதபுரத்துக்கு திங்கள்கிழமை காலையில் வந்தனர்.
பின்னர் மதியம் சக்தி, அவருடைய தம்பி முரளி, சக்தியின் நண்பர்களான ஸ்ரீராம், அருண், வினோத் ஆகிய 5 பேரும் திருவேங்கடநாதபுரம் தாமிரபரணி ஆற்றில் குளிக்க சென்றுள்ளார்கள்
அப்போது ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்ற ஸ்ரீராம், அருண், வினோத் ஆகிய 3 பேரும் தண்ணீரில் தத்தளித்தனர். உடனே சக்தி, அவருடைய தம்பி முரளி ஆகிய 2 பேரும் சேர்ந்து வினோத்தை காப்பாற்றினர். எனினும் ஸ்ரீராம், அருண் ஆகிய 2 பேரையும் காப்பாற்ற முடியாததால் அவர்கள் தண்ணீரில் மூழ்கினர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சக்தி, முரளி ஆகிய 2 பேரும் அக்கம் பக்கத்தினர் உதவி கேட்டு கூச்சலிட்டனர். இது ஒருபக்கம் எனில் உடனடியாக பேட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே தீயணைப்பு நிலைய அலுவலர் முத்தையா தலைமையில், வீரர்கள் விரைந்து சென்று, ஆற்றில் இறங்கி தேடும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேர தேடுதலுக்கு பிறகு ஸ்ரீராம், அருண் ஆகிய 2 பேரையும் பிணமாக மீட்டனர். அவர்களின் உடல்களை சுத்தமல்லி போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.
தண்ணீரில் தத்தளித்ததில் உடல்நலம் பாதிக்கப்பட்ட வினோத்தை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். இதுகுறித்து சுத்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள் சென்னையில் இருந்து நண்பரின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த இடத்தில் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி 2 வாலிபர்கள் பலியான சம்பவம் திருநெல்வேலியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதனிடையே தாமிரபரணி ஆற்றில் மூழ்கி பலியான 2 பேரில் ஒருவரான அருணுக்கு கடந்த மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. அடுத்த மாதம் (ஜூன்) திருமண ஏற்பாடுகளை குடும்பத்தினர் செய்திருந்தனர். இந்த நிலையில் நண்பரின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து திருநெல்வேலி வந்து உயிரிழந்துள்ளார். அவர் வீட்டில் ஒரே பிள்ளை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications