குடிபோதையில் குழந்தையை கொன்ற தந்தை.. மனசாட்சி உறுத்தியதால் தூக்கிட்டு தற்கொலை!
ஆலங்குளம் : நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே பிறந்து 22 நாளான குழந்தையை குளத்தில் வீசி கொலை செய்த குற்றச்சாட்டில் கைதான தந்தை பாளை மத்திய சிறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆலங்குளம் அருகே உள்ள அய்யனார்குளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் இசக்கிமுத்து. கூலி தொழிலாளியான அவருக்கும் சீதபற்பநல்லூர் வடக்கு தெருவை சேர்ந்த மாரியப்பன் மகள் இசக்கியம்மாள் என்கிற ஆனந்திக்கும் 3 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
ஆனந்தி கர்ப்பமாக இருந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் நடுகல்லூர் அரசு மருத்துவமனையில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.பின்னர் குழந்தையுடன் ஆனந்தி சீதபற்பநல்லூரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்தார்.
இதனையடுத்து குழந்தையை பார்க்க சென்ற இசக்கிமுத்து குழந்தையுடன் ஆனந்தியை அய்யனார்குளம் வரும்படி அழைத்தததாக கூறப்படுகிறது. அப்போது இசக்கி முத்து குடிபோதையில் இருந்ததால், ஆனந்தியை அனுப்வி வைக்க மாமியார் முத்துலட்சுமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பிரச்சனை ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 12ஆம் தேதி இசக்கிமுத்து சீதபற்பநல்லூர் மனைவி வீட்டிற்கு குடி போதையில் வந்து தங்கியுள்ளார். மறுநாள் கண்விழித்த ஆனந்தி குழந்தையும்,படுத்திருந்த இசக்கிமுத்துவையும் காணாதது கண்டு அதிர்ந்தார்.
அக்கம் பக்கம் தேடியும் கிடைக்காததால் சீதபற்பநல்லூர் போலீசில் இசக்கி முத்து மீது சந்தேகமடைந்து புகார் அளித்தனர். புகாரின் பேரில் ஆலங்குளம் இன்ஸ்பெக்டர் ஐயப்பன் அய்யனார்குளத்தில் இருந்த இசக்கிமுத்துவை பிடித்து விசாரணை நடத்தினார். அப்போது முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால் சந்தேகமடைந்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
அதில் குழந்தையை இரவில் தூக்கி சென்று சீதபற்பநல்லூர் குளத்தில் வீசி கொன்றது தெரியவந்தது. இதுகுறித்து சீதபற்பநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து இசக்கிமுத்துவை பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டிருந்த இசக்கிமுத்து திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த தற்கொலை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.