அண்ணாமலை ஆடு மேய்க்கணும்! எடப்பாடி வெல்லமண்டி நடத்தணும்! வானதி கூடை பின்னணும்! -அனல் கக்கிய ஆ.ராசா!
நெல்லை: கொங்குவேளாளர் கவுண்டர் சமுதாயத்தை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க கையெழுத்திட்டவர் கருணாநிதி என திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா தெரிவித்துள்ளார்.
அவர் மட்டும் அப்படி செய்திருக்கவில்லை என்றால் அண்ணாமலை ஆடு தான் மேய்த்துக் கொண்டிருக்கணும் என்றும் எடப்பாடி வெல்லமண்டி தான் நடத்தி கொண்டிருக்கணும் எனவும் வானதி சீனிவாசன் கூடை பின்னிக் கொண்டிருந்தக்கணும் எனவும் ஆ.ராசா விமர்சித்துள்ளார். நெல்லையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் இதனைக் கூறினார்.

கருணாநிதியை ஒழிக என்று கூட அண்ணாமலை திட்டிக்கொள்ளட்டும் ஆனால் கருணாநிதி போட்ட கையெழுத்துக்களால் தாமோ தனது தந்தையோ எந்த பயனும் அடையவில்லை என்று மட்டும் அவர் சொல்ல வேண்டாம் என ஆ.ராசா கேட்டுக்கொண்டார். தாம் கவுண்டர் சமுதாய மக்கள் நிறைந்துள்ள நீலகிரி தொகுதியில் தான் எம்.பி.யாக இருப்பதாகவும் அந்த சமுதாயத்தினர் பண்பட்ட மக்கள் எனவும் புகழாரம் சூடினார்.
கருணாநிதி பேனா இல்லையென்றால் அண்ணாமலை, எடப்பாடி உட்பட யாரும் இல்லை எனப் பேசிய அவர், தனது பேச்சை குறிப்பெடுக்க மத்திய புலனாய்வு துறை வந்திருப்பது தெரியும் எனக் கூறி கூட்டத்தை அதிர வைத்தார். ஊழலை பற்றி பேச தனக்கு பயமில்லை என்று மேஜையில் அடித்து ஆக்ரோஷமான அவர் பிரதமர் மோடி மீது கடும் விமர்சனங்களை முன் வைத்தார்.
எடப்பாடி பழனிசாமிக்கு அவரது தாய், தந்தை சம்பாதித்து வைத்துவிட்டுச் சென்றது 50 முதல் 60 ஏக்கர் இருக்கும் என்றும் இவர் கொள்ளையடித்து சேர்த்தது 500 ஏக்கர் இருக்கும் எனவும் ஆ.ராசா தெரிவித்தார். தனது தோட்டத்துக்கே 3 மோட்டார் இருப்பதாகவும் எடப்பாடி பழனிசாமி தோட்டத்துக்கு நிச்சயம் 10 மோட்டாராவது இருக்கும் என்றும் அந்த மோட்டார்களுக்கான இலவச மின்சாரத்திற்கு தனது பேனாவில் கையெழுத்திட்டவர் கருணாநிதி என ஆ.ராசா தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications