புளியோதரை பஞ்சாயத்தே முடியலை.. அதிமுக மாநாட்டுக்கு 50 பவுனுடன் போன மனைவியை காணலையாம்- கணவன் கதறல்!
திருநெல்வேலி: மதுரை அதிமுக மாநாட்டு சென்ற மனைவி இன்னமும் வீடு திரும்பவில்லை என திருநெல்வேலி போலீசில் ராதாபுரம் ஜேசுபாதம் அளித்த புகார் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்ட பின்னர் மதுரையில் முதல் முறையாக பிரம்மாண்ட மாநாடு ஆகஸ்ட் 20-ந் தேதி நடத்தப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் லட்சக்கணக்கான அதிமுக தொண்டர்கள் இம்மாநாட்டில் பங்கேற்றனர்.

அதிமுக மதுரை மாநாடு மூலம், அக்கட்சியின் ஒற்றைத் தலைமை எடப்பாடி பழனிசாமிதான்; அவருக்கு பின்னால்தான் அதிமுக தொண்டர்கள் உள்ளனர் என்பதை நிரூபித்திருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர். அதிமுக சிதறவில்லை- சிதையவில்லை; முழு பலத்துடன் இருக்கிறது என்பதை வெளிப்படுத்தக் கூடியதாகவும் மதுரை மாநாடு அமைந்தது என்கின்றனர். அதேநேரத்தில் மதுரை மாநாட்டில் டன் கணக்கில் சாப்பாடு வீணானது உள்ளிட்ட சர்ச்சைகளும் எழுந்தன.
இந்நிலையில் திருநெல்வேலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு ராதாபுரம் அருகே கன்னங்குளத்தைச் சேர்ந்த ஜேசுபாதம் என்பவர் கொடுத்த புகார் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அம்மனுவில் ஜேசுபாதம் கூறியிருப்பதாவது: என் மனைவி தங்க செல்வம், அதிமுக மகளிர் அணியில் நிர்வாகியாக இருக்கிறார். உள்ளாட்சித் தேர்தலில் ஊராட்சி குழு தலைவர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அவருக்கு 200 பவுன் நகை வாங்கி கொடுத்துள்ளேன். 18 வயதில் மகளும் 17 வயதில் மகனும் இருக்கின்றனர்.
கடந்த ஆகஸ்ட் 17-ந் தேதியன்று மதுரை மாநாட்டுக்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு சென்றார் தங்க செல்வம். ஆனால் இப்போது வரை மனைவி தங்க செல்வம் வீட்டுக்கு திரும்பவில்லை. அதிமுகவை சேர்ந்த பிரமுகர் ஒருவர் மீதுதான் சந்தேகம் உள்ளது. அவர்தான் என் மனைவியை லாட்ஜில் கடத்தி வைத்திருப்பதாக சந்தேகிக்கிறோம். என் மனைவி, மதுரை மாநாட்டுக்கு செல்லும் போது 50 பவுன் நகையும் அணிந்திருந்தார். அவரை பாதுகாப்பாக மீட்டுத் தர வேண்டும். இவ்வாறு ஜேசுபாதம் தமது மனுவில் கூறியிருந்தார்.
ஜேசுபாதத்தின் இந்த மனு மீது நெல்லை போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications