நெல்லை எம்பி ஞானதிரவியம் மகனால் 4 ஏக்கர் நிலம் அபேஸ்? கலெக்டர் கார் முன்பாக அழுதபடி மூதாட்டி தர்ணா
நெல்லை: நெல்லை நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் ஞானதிரவியத்தின் மகன் சேவியர் ராஜா, தனது 4 ஏக்கர் நிலத்தை மோசடியாக ஏமாற்றி எழுதி வாங்கிக் கொண்டார் என மூதாட்டி ஒருவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் கொடுத்திருக்கிறார்.
தனது நிலத்தை மீட்டுக் கொடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியர் கார் முன்னே அமர்ந்து மூதாட்டி மாலதி கண்ணீர் வடித்த நிகழ்வு காண்போரையும் கலங்க வைத்தது.

நெல்லையில் சி.எஸ்.ஐ. மதபோதகர் மீது தாக்குதல் நடத்திய விவகாரத்தில் நெல்லை திமுக எம்.பி. ஞானதிரவியம் உட்பட 36 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் திமுக மேலிடமும் ஞானதிரவியம் எம்.பி.யை கடுமையாக கண்டிக்கவும் செய்தது. இதனால் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அவருக்கு மீண்டும் சீட் கிடைக்குமா என்பதே சந்தேகம் தான்.
இந்தச் சூழலில் நெல்லை திமுக எம்.பி. ஞானதிரவியம் மகன் சேவியர் ராஜா மீது மானுரை சேர்ந்த மூதாட்டி ஒருவர் பரபரப்பு புகார் ஒன்றை முன் வைத்திருக்கிறார். மானூரில் தனக்குச் சொந்தமான 4 ஏக்கர் நிலத்தை ஞானதிரவியம் எம்.பி. மகன் மோசடியாக ஏமாற்றி எழுதி வாங்கிவிட்டதாக தெரிவித்திருக்கிறார். அவரிடமிருந்து தனது நிலத்தை மீட்டுக்கொடுக்குமாறு நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் கொடுத்திருக்கிறார்.
இதனிடையே வராண்டாவில் நின்று கொண்டிருந்த மாவட்ட ஆட்சியர் கார் முன்பு அமர்ந்து அழுத மூதாட்டி, தனது நிலத்தை மீட்டுக்கொடுக்குமாறு வேண்டினார். இதையடுத்து காவல்துறையினர் அவரை அங்கிருந்து அழைத்துச் சென்று நடந்த விவரத்தை கேட்டறிந்து விசாரணை நடத்துவதாக உறுதியளித்தனர். பட்ட காலிலேயே படும் என்பதை போல் பாதிரியார் தாக்கப்பட்ட சர்ச்சையிலிருந்து இப்போது தான் ஒருவழியாக ஞானதிரவியம் மீண்டு வந்தார்.
அதற்குள் அவரது மகன் மூலம் அடுத்த சர்ச்சை தேடி வந்திருக்கிறது. மூதாட்டியின் புகார் குறித்து காவல்துறையினர் உரிய விசாரணை நடத்தி வருவதால் விசாரணை முடிவுக்கு பிறகே என்ன நடந்தது என்ற முழு விவரம் தெரியவரும்.












Click it and Unblock the Notifications