அது அண்ணாமலையின் தனிப்பட்ட கருத்து.. கூட்டணியை பாஜக தலைமையே முடிவு செய்யும்.. நயினார் நாகேந்திரன்!
அண்ணாமலை பேசியது அவரது தனிப்பட்ட கருத்து என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
நெல்லை: பாஜக - அதிமுக கூட்டணி குறித்து மாநில பாஜக தலைவர் அண்ணாமலை பேசியது அவரின் தனிப்பட்ட கருத்து என்று பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். அதேபோல் பாஜகவை பொறுத்தவரை கூட்டணி பற்றி தேசிய தலைமை தான் முடிவு செய்யும் என்று கூறிய நயினார் நாகேந்திரன், அகில இந்திய தலைமை என்ன சொல்கிறதோ அதை தான் செய்வோம் என்று தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு பாஜகவின் மாநில நிர்வாகிகள் மற்றும் அணி தலைவர்கள் கூட்டம் சென்னை அமைந்தகரையில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை பேசுகையில், தமிழ்நாட்டில் பாஜக தனியாக இருந்தால் மட்டுமே கட்சியை வளர்க்க முடியும்.
தமிழ்நாட்டில் கூட்டணி நிலைப்பாட்டை எடுத்தால், தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சாதாரண தொண்டனாக இருப்பேன். பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்கு நேரம் கேட்டு இருக்கிறேன்.

அண்ணாமலை பரபரப்பு
கர்நாடக சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதால் வரும் மே மாதம் 10ஆம் தேதி வரை கட்சி பணிகளில் முழுமையாக ஈடுபட்டிருப்பேன். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி என்று முடிவு எடுத்தால், எனது பதவியை ராஜினாமா செய்துவிடுவேன். சாதாரண தொண்டனாகவே கட்சி பணிகளை செய்வேன் என்று தெரிவித்தார்.

உடைகிறதா அதிமுக - பாஜக கூட்டணி?
தமிழ்நாட்டில் 2019ம் ஆண்டு முதல் அதிமுக - பாஜக இடையிலான கூட்டணி தொடர்ந்து வரும் சூழலில், அண்மைக் காலமாக இரு கட்சிகளிடையே மோதல் ஏற்பட்டது. இருப்பினும் கூட்டணியில் எந்தப் பிரச்சனையும் இல்லை என்றே அதிமுக மற்றும் பாஜக நிர்வாகிகள் கருத்து தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் அதிமுகவுடன் கூட்டணி வைத்தால், தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் என்று அண்ணாமலை பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அண்ணாமலையின் தனிப்பட்ட கருத்து
இதுகுறித்து பாஜக சட்டமன்றக் குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தபோது, அதிமுக கூட்டணி பற்றிய அண்ணாமலை பேச்சு பற்றிய கேள்விக்கு, அண்ணாமலை பேசியது அவரது தனிப்பட்ட கருத்து. கருத்து சுதந்திரம் அனைவருக்கும் உண்டு. பாஜகவை பொறுத்த வரை கூட்டணி பற்றி தேசிய தலைமை தான் முடிவு செய்யும். அகில இந்திய தலைமை என்ன சொல்கிறதோ அதை தான் செய்வோம் என்று தெரிவித்தார்.

தனித்துப் போட்டி
அதேபோல், தமிழ்நாட்டில் யாரும் தனித்து போட்டியிட்டது கிடையாது. தனித்து போட்டியிடுவோம் என அறிவிக்கவும் முடியாது. ஏதாவது ஒரு கட்சியுடன் கூட்டணி சேர்ந்து தான் ஆகவேண்டும் என்று தெரிவித்தார்.தொடர்ந்து பாஜக-வில் இருந்து விலகிய நிர்வாகிகள், நயினார் நாகேந்திரன்அதிருப்தியில் இருப்பதாக கூறியது பற்றிய கேள்விக்கு, என்னுடைய கருத்தை நான் தான் சொல்ல வேண்டும் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications