தமிழ்நாடு இரண்டாக பிரிக்கப்படுமா? - நயினாரையும் வைத்துக்கொண்டே அப்படி ஒரு பதில் சொன்ன விகே சிங்!
நெல்லை : தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்கும் திட்டம் இல்லை என்றும், தமிழ்நாடு ஏற்கனவே பிரிக்கப்பட்ட மாநிலம் தான் என்றும் மத்திய அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார்.
Recommended Video
தமிழ்நாட்டை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் நேற்று பேசிய நிலையில் அவரைப் பக்கத்தில் வைத்துக்கொண்டே இவ்வாறு தெரிவித்துள்ளார் வி.கே.சிங்.
திமுக எம்.பி ஆ.ராசா பேச்சைத் தொடர்ந்து சர்ச்சை எழுந்த நிலையில், பாஜகவின் நயினார் நாகேந்திரன் தமிழ்நாட்டை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்றார். அதற்கு திமுகவின் டி.கே.எஸ்.இளங்கோவன் பதிலளித்தார். ஆனாலும், இன்னும் அந்த சர்ச்சை தொடர்ந்து வருகிறது.
அண்ணாமலையை முந்துவதற்காக.. தமிழக பிரிவினை பேசிய நயினார் நாகேந்திரன்! விளாசும் திமுக ராஜீவ் காந்தி
பாஜக வியூகம்
2024 நாடாளுமன்றத் தேர்தலை குறிவைத்து வியூகங்களை வகுத்து வரும் பாஜக முதற்கட்டமாக தமிழகத்தில் 8 தொகுதிகளை தேர்ந்தெடுத்து மத்திய அமைச்சர்களை பொறுப்பாளர்களாக நியமித்து கட்சி நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து கட்சிப் பணிகளைச் செய்ய அறிவுறுத்தியுள்ளது. அதன்படி திருநெல்வேலி தொகுதிக்கு மத்திய அமைச்சர் வி.கே.சிங் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நெல்லை மாவட்டம், பாளை பெருமாள்புரத்தில் நடந்த மாவட்ட பா.ஜ.க நிர்வாகிகள் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக மத்திய அமைச்சர் வி.கே.சிங் கலந்துகொண்டு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
8 ஆண்டு பாஜக ஆட்சி
முன்னதாக செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த மத்திய அமைச்சர் வி.கே.சிங், "கடந்த 8 ஆண்டுகளில் மதம், இனம் பாகுபாடு இல்லாமல் மத்திய அரசின் எல்லா திட்டங்களும், எல்லா மக்களையும் சென்றடையும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. உஜ்வாலா திட்டத்தின் கீழ் மானிய விலையில் கியாஸ் சிலிண்டர்கள், விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் உதவித் தொகை, ஜன்தன் திட்டத்தில் வங்கி கணக்குகள் ஆரம்பிக்கப்பட்டு எந்தவிதமான ஊழலும் இல்லாமல் திட்டத்தின் பயன்கள் மக்களுக்கு சென்றடைந்துள்ளது.
பாஜக ஆட்சி மக்களின் கையில்
எல்லா கிராமங்களிலும் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுவரை 8 கோடி மக்களுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் சுத்தமான குடிநீர் வீட்டு வாசல்களுக்கு சென்றடையும் வகையில் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன. கடந்த 8 ஆண்டுகளில் மதிப்புமிக்க இந்தியாவை உருவாக்கி உள்ளோம். சுங்கச்சாவடிகளை குறைப்பது தொடர்பாக ஆய்வு நடந்து வருகிறது. முழுமையான ஆய்வுக்கு பிறகு சுங்கச்சாவடிகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
எட்டிப்பார்க்க மாட்டோம்
தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த மத்திய அமைச்சர் வி.கே.சிங், தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைப்பது எப்போது என கேட்கிறீர்கள், பா.ஜ.க மீண்டும் ஆட்சி அமைப்பது மக்கள் கையில் தான் உள்ளது எனத் தெரிவித்தார். மேலும், அ.தி.மு.க.வில் நிலவும் மோதல் குறித்த கேள்விக்கு அது அவர்களின் உட்கட்சி பிரச்சினை. நாங்கள் யார் வீட்டு வாசலையும் எட்டிப் பார்க்க மாட்டோம் எனத் தெரிவித்தார்.
தமிழ்நாட்டை இரண்டாக
மேலும், தமிழ்நாட்டை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்ற பேச்சு எழுந்துள்ளது குறித்த கேள்விக்கு பதிலளித்த பாஜக மத்திய அமைச்சர் வி.கே.சிங், தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்கும் திட்டம் இல்லை. தமிழ்நாடு ஏற்கனவே பிரிக்கப்பட்ட மாநிலம் தான் எனத் தெரிவித்தார். அதுவும், தமிழ்நாட்டை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என நேற்று பேசிய நயினார் நாகேந்திரனை பக்கத்தில் வைத்துக்கொண்டே இவ்வாறு தெரிவித்துள்ளார் வி.கே.சிங்.
நயினார் நாகேந்திரன் பேச்சு
திமுக எம்.பி ஆ.ராசா, "தனி தமிழ்நாடு கோரிக்கை எழுப்பி பெரியார் வழியில் செல்ல வைத்துவிடாதீர்கள். மாநில சுயாட்சி தாருங்கள்" எனப் பேசியதற்கு எதிர்வினையாற்றிய பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன், "ஆ.ராசாவின் பேச்சை கேட்ட பிறகு எனக்கும் தமிழ்நாட்டை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்படுகிறது. தமிழ்நாட்டை இரண்டாகப் பிரிக்க வேண்டும். பிரிக்க முடியாது என நினைக்க வேண்டாம். பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பிரிக்க வேண்டும் என்று நினைத்தால் பிரித்து விடுவோம்." எனப் பேசியிருந்தார். இந்நிலையில்தான், தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்கும் திட்டம் இல்லை என விகே சிங் தெரிவித்துள்ளார்.