திருநெல்வேலி: உயிரை பணையம் வைத்து பயணித்த மாணவிகள்.. முதல்வர் ஸ்டாலின் எடுத்த ஆக்சன்.. மாறிய காட்சி
திருநெல்வேலி ராணி அண்ணா மகளிர் அரசு கலைக் கல்லூரியில் இருந்து பேருந்தில் தொங்கி கொண்டு போன மாணவிகள், வீடியோ பரவிய நிலையில் உடனே ஆக்சன் எடுக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.
திருநெல்வேலி: திருநெல்வேலி அரசு கல்லூரிக்கு பேருந்தில் தொங்கி கொண்டு போன மாணவிகள், வீடியோ பரவிய நிலையில் உடனே ஆக்சன் எடுக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். இதையடுத்து போக்குவரத்து அதிகாரிகள் கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தமிழகத்தில் அரசு பள்ளிகள் மற்றும் அரசு கல்லூரிகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாகவே உள்ளது, ஏனெனில் பள்ளி மற்றும் கல்லூரி நேரங்களில் வரும் அந்த ஒற்றை பேருந்துதான் பலரது கல்வி கனவை நிறைவேற்றி வந்தது.
அந்த பேருந்தை விட்டுவிட்டால் பள்ளிக்கோ கல்லூரிக்கோ போக முடியாத நிலை இருந்தது. தற்போது அந்த நிலை ஓரளவு மாறி இருக்கிறது என்றாலும் முழுமையாக மாறவில்லை. இன்றும் பல பகுதிகளில் அரசு பேருந்துகளில் மாணவ மாணவியர் ஆபத்தான முறையில் படியில் தொங்கியபடி பயணிப்பது தொடர் கதையாகவே உள்ளது.

முதல்வர் உத்தரவு
அப்படித்தான் திருநெல்வேலி ராணி அண்ணா மகளிர் அரசு கலைக் கல்லூரியில் படிக்கும் மாணவிகள் போதிய அரசு பேருந்துகள் இல்லாமல் உயிரை பணயம் வைத்து படியில் தொங்கியபடி சென்றனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவின. இதுபற்றி உடனடியாக விசாரித்த முதல்வர் ஸ்டாலின், போதிய பேருந்துகளை இயக்க போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து விரைந்து செயல்பட்ட அதிகாரிகள் பேருந்துகளையும் இயக்கி உள்ளனர்.

இரண்டு ஷிப்ட்
இது தொடர்பாக திருநெல்வேலி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பொது மேலாளர் வெளியிட்ட அறிக்கையில், " திருநெல்வேலி இராணி அண்ணா மகளிர் கல்லூரி காலை 8 மணி முதல் 1 மணி வரையிலும், அதனைத் தொடர்ந்து மதியம் 1.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையிலும் இரண்டு பகுதிகளாக கல்லூரி செயல்பட்டு வந்தது. இக்கல்லூரியில் பயிலும் மாணவியர்கள் பயன்பெறும் வகையில் கல்லூரி தொடங்கும் நேரத்திற்கும், மதியம் மற்றும் மாலை நேரத்திற்கும் ஏற்றாற் போல் மாணவியர்கள் சென்று வருவதற்கு ஏதுவாக, போதிய பேருந்து வசதிகள் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு மாணவியர்கள் பயன்படுத்தி வந்தனர்.

கல்லூரி நேரம்
இந்நிலையில் இராணி அண்ணா கல்லூரி நிர்வாகம் 18.01.2023 அன்று முதல் கல்லூரி செயல்படும் நேரத்தை காலை 10.00 மணி முதல் மாலை 3.30 மணி வரை ஒரே பகுதியாக கல்லூரி நேரத்தை மாற்றி அமைத்துள்ளது. கல்லூரி நிர்வாகம் கல்லூரி இயங்கும் நேரம் மாற்றம் குறித்த விபரத்தினை போக்குவரத்து கழக அலுவலர்களிடம் முன்கூட்டியே கலந்து ஆலோசிக்கவில்லை.

கூடுதல் பேருந்துகள்
தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, இராணி அண்ணா மகளிர் கல்லூரி பேருந்து நிறுத்தத்தில், போக்குவரத்து அலுவலர்கள் நேரில் சென்று ஆய்வு செய்து 20.01.2023 அன்று முதல் 12 பேருந்துகளை கல்லூரியில் இருந்தும் 2 பேருந்துகள் கல்லூரி வழியாகவும், மொத்தம் 14 கட்டமில்லா மகளிர் பேருந்துகள், மாலை கல்லூரி முடியும் நேரமான 3.30 மணி முதல் 4 மணிக்குள் அனைத்து மாணவியர்களும், கல்லூரியில் இருந்து திருநெல்வேலி செல்வதற்கு ஏதுவாக பேருந்து வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப் எண்
மேலும் கல்லூரி முடியும் நேரமான 3.30 மணி முதல் 4 மணிக்குள் கல்லூரியில் இருந்து புதூர் மாறாந்தை வழியாக ஆலங்குளம், ஓடைமறிச்சான், முக்கூடல் மற்றும் காசிநாதபுரம் ஆகிய ஊர்களுக்கு மொத்தம் 4 கட்டணமில்லா மகளிர் பேருந்துகளும், ஆலங்குளம், தென்காசி மற்றும் சுரண்டை செல்வதற்கு 6 புறநகர் பேருந்துகளும் மாணவியர்களை ஏற்றி செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக அலுவலர்கள் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்படும். மேலும் இதுகுறித்து புகார்கள் ஏதும் இருப்பின் 9487599080 என்ற வாட்ஸ் அப் எண்ணில் புகார் தெரிவிக்கலாம்" இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications