திமுக முன்னாள் எம்.பி வேணுகோபால் காலமானார்.. 2009 தேர்தலில் இவர் செய்த ரெக்கார்ட் தெரியுமா?
திருவண்ணாமலை: திமுக முன்னாள் எம்.பி வேணுகோபால் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். திருப்பத்தூர், திருவண்ணாமலை தொகுதிகளில் எம்.பியாக இருந்துள்ளார் வேணுகோபால். 2009 லோக்சபா தேர்தலில் மிக அதிக வித்தியாசத்தில் பாமகவின் காடுவெட்டி குருவை தோற்கடித்தவர் இவர்.
திமுக மூத்த நிர்வாகியான வேணுகோபால், திமுகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். 2 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், 5 முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் செயல்பட்டுள்ளார் வேணுகோபால். 1977 மற்றும் 1984ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் தண்டராம்பட்டு தொகுதியில் வென்று எம்.எல்.ஏவாக இருந்தார் வேணுகோபால்.

திருப்பத்தூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக 1996, 1998, 1999, 2004 என தொடர்ச்சியாக நான்கு முறை வென்று எம்.பியாக இருந்தவர் திமுகவின் த.வேணுகோபால். பின்னர் தொகுதி மறுசீரமைப்பில் திருப்பத்தூர் எம்.பி தொகுதி நீக்கப்பட்டது.
கடந்த 2009 நாடாளுமன்றத் தேர்தலில் தான் திருவண்ணாமலை தொகுதி மீண்டும் உருவானது. திருவண்ணாமலை தொகுதியில் பாமகவின் முன்னணி தலைவரான காடுவெட்டி குருவை எதிர்த்து, திமுக சார்பில் வேணுகோபால் நிறுத்தப்பட்டார். திமுகவின் மூத்த முன்னோடிகளில் ஒருவரான வேணுகோபால் vs காடுவெட்டி குரு என கடுமையான போட்டி நிலவியது.
திருவண்ணாமலை தொகுதி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் ஒரு சுற்று கூட விடாமல் வேணுகோபால் தொடர்ந்து முன்னணி வகித்து காடுவெட்டி குருவுக்கு அதிர்ச்சி கொடுத்தார். இறுதியில், ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 300 வாக்குகள் வித்தியாசத்தில் காடுவெட்டி குருவை தோற்கடித்தார் வேணுகோபால். 2009 லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டிலேயே மிக அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்றவர் வேணுகோபால் தான்.
திருவண்ணாமலை மாவட்ட திமுகவின் மூத்த முன்னோடியாகவும், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அவைத் தலைவராகவும் செயல்பட்டு வந்த வேணுகோபால் உடல்நலக் குறைவால் இன்று மறைந்துள்ளது திமுக தொண்டர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.












Click it and Unblock the Notifications