"ஆளுநர் & பாஜகவால் தமிழ்நாட்டிற்கு பாதுகாப்பே இல்லை.." நேரடியாகப் பாயும் திமுக எம்.பி. கனிமொழி
திருநெல்வேலி: தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே மோதல் தொடர்வதாகச் செய்திகள் வெளியாகி வரும் நிலையில், திமுக எம்பி கனிமொழி ஆளுநரைக் கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வள்ளியூர் பகுதியில் திமுக மகளிர் அணி சார்பில் "களம் காண்போம்" என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
திமுக மகளிர் அணித் தலைவர் கனிமொழி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், பெண்கள் பலரும் திமுகவில் இணைந்தனர்.

நீட் விலக்கு
இந்த நிகழ்ச்சியில் பேசிய கனிமொழி எம்பி, திமுக அரசு தொடர்ந்து கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருவதாகத் தெரிவித்தார். தமிழக மாணவர்களின் எதிர்கால நலன் கருதியே நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்று திமுக மற்றும் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தமிழகத்திற்கு ஆபத்து
மேலும், ஆளுநர் மற்றும் பாஜகவால்தான் தமிழகத்திற்குப் பாதுகாப்பு இல்லை என்று குற்றஞ்சாட்டிய திமுக எம்.பி. கனிமொழி, தமிழக மாணவர்களின் எதிர்காலத்துக்குப் பாதுகாப்பு தேவை என்றும் அவர் தெரிவித்தார். தமிழ்நாடு அரசுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையே மோதல் தொடர்ந்து வருவதாகக் கூறப்படும் நிலையில், கனிமொழியின் இந்தப் பேச்சு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

நீட் விவகாரம்
தமிழக அரசால் நிறைவேற்றப்பட்ட நீட் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட விவகாரங்களில் ஆளுநர் உரிய முடிவை எடுக்காமல் காலம் தாழ்த்துவதாகக் கூறப்படுகிறது. நீட் விவகாரத்தைப் பொருத்தவரை கடந்த ஆண்டு செப். மாதம் முதல்முறையாக நீட் விலக்கு மசோதாவைத் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. இருப்பினும், 6 மாதங்களாக இந்த விவகாரத்தில் எந்தவொரு முடிவையும் எடுக்காமல் இருந்த ஆளுநர் ஆர்.என்.ரவி, கடந்த பிப். மாதம் இந்த தீர்மானத்தைத் திருப்பி அனுப்பினார்.

முடிவு இல்லை
இதையடுத்து கடந்த மார்ச் 13ஆம் தேதி சிறப்புச் சட்டசபை கூட்டப்பட்டு, நீட் தேர்வில் இருந்து விலக்களிக்க வகை செய்யும் சட்ட மசோதா மீண்டும் 2ஆவது முறையாக நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்டது. அதன் மீதும் கூட ஆளுநர் ரவி இதுவரை எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை. இதைக் கடுமையாகக் கண்டித்து வரும் திமுக அரசு, இந்த விவகாரத்தை டெல்லி நாடாளுமன்றத்திலும் எழுப்பியது. மேலும், இந்த விவகாரத்தில் தமிழ்ப் புத்தாண்டை ஓட்டி ஆளுநர் அளித்த தேநீர் விருந்தையும் கூட தமிழக அரசு புறக்கணித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

கறுப்புக் கொடி
இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு, மயிலாடுதுறையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ளச் சென்ற ஆளுநர் ஆர்.என் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து திக, திவிக, விசிக, சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சியினர் கறுப்புக் கொடி காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆளுநர் கான்வாய் கடந்து சென்றதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிலர் கொடிகளைச் சாலையில் வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விவகாரத்தில் ஆளுநர் பாதுகாப்பில் குறைபாடு ஏற்பட்டதாக சில கட்சிகள் விமர்சித்து இருந்தன.












Click it and Unblock the Notifications