தென்காசி அருகே சொகுசு காரில் வந்து கொள்ளை.. சிக்கிய அசோக்கிற்கு இப்படி ஒரு பின்னணியா?
திருநெல்வேலி: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஜோதி நகர் பகுதியில் கடந்த மாதம் 19-ந் தேதி ஸ்டேட் வங்கி கட்டிடத்தின் முதல் மாடியில், இரண்டு கடைகளை உடைத்து கொள்ளை அடித்த சம்பவத்தில் சொகுசு காரில் வந்து கொள்ளையில் ஈடுபட்ட வடமாநில ஆசாமி நிகில் அசோக் ஜோஸி என்பவரை ஆலங்குளம் போலீசார் கைது செய்துள்ளனர்.இவரை பிடித்து விசாரித்த போது, இவர் மீது பாலக்காட்டில் 3 கோடி மதிப்பிலான தங்க நகைகள் திருடிய வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
வடமாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஒரு சிலர் திடீரென வீடுகளை நோட்டம் விட்டு கொள்ளையடிக்கும் சம்பவங்கள் ஆங்காங்கே நடப்பது உண்டு. அதேபோல் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் வியாபாரம் செய்வது போல் வந்து நோட்டமிட்டு, பூட்டிய வீடுகள் மற்றும் கடைகளை கொள்ளையடிப்பது உண்டு.

சிலர் சிசிடிவி இல்லாத கடைகள், சிசிடிவி இல்லாத தெருக்களை நோட்டமிட்டு கண்டுபிடித்து திருடுவதும் நடக்கிறது. இப்படி திருடும் வடமாநிலத்தவரை பிடிப்பது சவாலாக இருக்கும். ஏனெனில் இவர்களை பற்றி எந்த தகவலும் இருக்காது. இவர்கள் தான் திருடினார்கள் என்பதை கண்டுபிடிக்க தடயங்களோ அல்லது ஆதாரங்களோ அவ்வளவு எளிதாக இருக்காது. எனினும் தற்போதைய சூழலில் சிசிடிவி காட்சிகள் மற்றும் செல்போன் தொடர்புகள் ஓரளவு கைகொடுத்து வருகின்றன. தென்காசி அருகே நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஜோதி நகர் பகுதியில் ஸ்டேட் வங்கி கட்டிடம் இருக்கிறது. இங்குள்ள முதல் தளத்தில் அமைந்துள்ள 2 நிறுவனங்களின் கதவுகளை உடைத்து கடந்த ஜனவரி 19ம் தேதி கொள்ளை சம்பவம் நடந்தது. இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக புகாரின் பேரில் ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில், மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் பகுதியை சேர்ந்த நிகில் அசோக் ஜோஸி (53) என்பவர் தான் இச்செயலில் செய்தது தெரியவந்தது. ஹைடெக் உபகரணங்களான செல்போன் ஜாமர் கருவி, ஹைட்ராலிக் கட்டர் ஆகியவற்றை சொகுசு காரில் கொண்டு வந்து கொள்ளையடித்தது தெரியவந்தது. இதையடுத்து நிகில் அசோக் ஜோஸியை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து அனைத்து பொருட்களையும் மீட்டதுடன், கொள்ளையடிக்க பயன்படுத்தி வந்த மகாராஷ்டிரா பதிவெண் கொண்ட காரும் பறிமுதல் செய்யப்பட்டது
இதனிடையே விசாரணையில் நிகில் அசோக் ஜோஸி மீது 2021-ம் ஆண்டு கேரளா பாலக்காடு மாவட்டம் பாலக்காடு கஸ்பா காவல் நிலையத்தில் 3 கோடி மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் ரூ.18 ஆயிரத்தை வங்கியில் கொள்ளையடித்த வழக்குபதிவு செய்யப்பட்டிருக்கிறது..
மேலும் நிகில் அசோக் ஜோஸி. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரபிரதேசம், கோவா, மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களில் பல்வேறு பகுதிகளில் சொகுசு காரில் பயணம் செய்து அப்பகுதிகளில் உள்ள நிதி நிறுவனங்கள், கடைகள், கூட்டுறவு வங்கிகளை கொள்ளையடிக்கும் நோக்கத்தோடு வேவு பார்த்து வந்ததாக விசாரணையில் தெரிய வந்தது. கைதான கொள்ளையன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications