நெல்லையில் முதியவரை தாக்கிய பேருந்து நடத்துநர்..வெளியான அதிர்ச்சி வீடியோ.. பாய்ந்த அதிரடி நடவடிக்கை
நெல்லை: நெல்லையில் மூட்டை முடிச்சுகளுடன் அரசு பேருந்தில் ஏற முயன்ற முதியவரை நடத்துனர் தகாத வார்த்தைகளால் பேசியதோடு அவரை கன்னத்தில் ஓங்கி ஓங்கி அறைந்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்திய போக்குவரத்து கழக அதிகாரிகள் அந்த நடத்துனரை பணியிடை நீக்கம் செய்துள்ளனர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்னமும் தனியார் பேருந்து சேவை இல்லாத நிலையில் அரசு பேருந்து சேவை தான் மக்களுக்கு மிக முக்கியமானதாக இருக்கிறது.

நாள் ஒன்றுக்கு 20,000-க்கும் மேற்பட்ட பேருந்துகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்களை சுமந்து பயணிக்கின்றன. குறிப்பாக கடைக்கோடி கிராமங்களுக்கும் மலைப்பகுதிகளுக்கும் அரசு பேருந்து சேவை தான் வரப்பிரசாதமாக உள்ளது.
மேலும் ஏழை எளிய மாணவர்கள் பயன்பெறும் வகையில் இலவச பஸ் பாஸ், மாற்றுத்திறனாளிகளுக்கு சலுகை, பெண்களுக்கு இலவசப் பயணம் என அரசு பேருந்து சேவையை மக்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் பயன்படுத்தப்படும் அரசு பேருந்துகள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை எனவும், ஓட்டை உடைசலுடன் இயக்கப்படும் பேருந்துகளால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதாகவும் புகார் எழுந்தது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட திருச்சியில் இருந்து கேகே நகருக்கு சென்ற அரசு பேருந்தில் வளைவில் திரும்பிய போது நடத்துனர் பேருந்தில் இருந்து இருக்கையுடன் வெளியே விழுந்தார். இந்த சம்பவத்தை குறிப்பிட்டு தமிழகத்தில் அரசு பேருந்துகள் பராமரிப்பு மிகவும் பரிதாபகரமான நிலையில் இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர்கள் விமர்சித்தனர்.
மேலும் இலவசமாக பேருந்து பயணம் செய்யும் பெண்களை நடத்துனர்கள் மரியாதை குறைவாக பேசுவது, பேருந்தில் ஏறியவர்களை இறக்கி விடுவது, இலவச பேருந்து பயணம் செய்யும் மாணவ மாணவிகளை தரக்குறைவாக பேசுவது, பேருந்தை நிறுத்தாமல் செல்வது என பல பிரச்சினைகள் இருந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட வாரண்ட் இல்லாமல் பயணிக்க முடியாது என காவலரை போக்குவரத்து ஊழியர் தரக்குறைவாக பேச தமிழகம் முழுவதும் அரசு பேருந்துகள் மீது அபராதம் விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இரு தரப்பினரும் சமாதானம் செய்து கொண்டனர். இந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு நடத்துனரின் அராஜக செயல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நெல்லையில் தனது உடமைகளுடன் முதியவர் ஒருவர் அரசு பேருந்து ஏறுவதற்காக முயன்றுள்ளார். அப்போது பேருந்தில் இருந்து இறங்கிய நடத்துனர் இவ்வளவு சாமான்களை பேருந்தில் ஏற்றக்கூடாது எனக் கூறியிருக்கிறார். அதற்கு வேண்டுமானால் லக்கேஜ் சார்ஜ் செய்து கொள்ளுங்கள் என அந்த முதியவர் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நடத்துனர் முதியவரை தொடர்ந்து இரண்டு மூன்று முறை கன்னத்தில் ஓங்கி ஓங்கி அறைந்தார்.
இதற்கிடையே முதியவரை கன்னத்தில் ஓங்கி அறைந்த வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்த நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இந்த நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்திய நெல்லை அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் மூலக்கரைப்பட்டியில் மூட்டைகளுடன் பேருந்தில் ஏறிய பயணியை தாக்கியதாக 52 வயதான நடத்துனர் சேதுராமாலிங்கத்தை பணியிடை நீக்கம் செய்துள்ளனர். இதற்கான உத்தரவை அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் சரவணன் உத்தரவிட்டுள்ளார்.













Click it and Unblock the Notifications