பாஜக நயினார் நாகேந்திரன் போட்டியிடும் நெல்லை தொகுதி தேர்தல் ரத்தா? மீண்டும் திரும்பும் 2019 வேலூர்?
திருநெல்வேலி: லோக்சபா தேர்தலில் நெல்லை (திருநெல்வேலி தொகுதி) பாஜக வேட்பாளராகப் போட்டியிடும் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானதாகக் கூறப்படும் ரூ4 கோடி சிக்கிய விவகாரத்தில் புதிய திருப்பமாக நெல்லை தேர்தலே ரத்து செய்யப்படும் சாத்தியத்தையும் மறுப்பதற்கில்லை என்கின்றன தேர்தல் ஆணைய வட்டாரங்கள். இதனால் பாஜகவில் ஒரு தரப்பினர் அதிர்ச்சியும் மற்றொரு தரப்பினர் பெரு மகிழ்ச்சியும் அடைந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை தாம்பரத்தில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் பிடிபட்ட ரூ4 கோடி ரொக்க விவகாரம் பெரும் புயலைக் கிளப்பி உள்ளது. திருநெல்வேலி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் ஹோட்டல் ஊழியர்கள் 3 பேரிடம் இருந்து ரூ4 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான புளூ டைமண்ட் ஹோட்டல் உள்ளிட்ட பல இடங்களில் தேர்தல் அதிகாரிகளும் போலீசாரும் இணைந்து அதிரடி சோதனை நடத்தி பணக் கட்டுகளை பறிமுதல் செய்தனர். திருநெல்வேலியிலும் நயினார் நாகேந்திரனுக்கு நெருக்கமானவர் வீடுகளில் இருந்து பணம், பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ஆனால் இந்த பணம் தமக்கு உரியது அல்ல; தம்மை சிலர் டார்கெட் செய்து நெருக்கடி கொடுக்கின்றனர் என நயினார் நாகேந்திரன் பகிரங்கமாக மறுப்பும் தெரிவித்திருந்தார். தற்போது ரூ4 கோடி சிக்கிய விவகாரத்தை வருமான வரித்துறை விசாரிக்க தேர்தல் ஆணைய அதிகாரிகள் பரிந்துரைத்தனர். அதே நேரத்தில் ரூ4 கோடி விவகாரத்தில் அமலாக்கத்துறையும் களமிறங்கப் போகிறதாம்.
இந்த நிலையில் நயினார் நாகேந்திரனுக்காக கொண்டு செல்லப்பட்டதாகக் கூறப்படும் ரூ4 கோடி ரொக்கம் குறித்து போலீசாருக்கு யார் துல்லியமான தகவல் தந்தது? அந்த கறுப்பு ஆடு யார்? என்பதும் ஒரு பக்கம் விவாதமாக நடந்து கொண்டிருக்கிறது.
இன்னொரு பக்கம் ரூ4 கோடி ரொக்கம் கையும் களவுமாக சிக்கிவிட்ட நிலையில் இனி நெல்லை தொகுதி தேர்தல் நடைபெறுமா? என்கிற சந்தேகமும் கிளம்புகிறது. தமிழ்நாட்டில் பணம் சிக்கிய காரணத்தாலேய 2016-ல் தஞ்சாவூர், அரவக்குறிச்சி சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல்கள் ரத்து செய்யப்பட்டன. 2017-ல் ஆர்கே நகர் தொகுதி இடைத்தேர்தலும் இதே காரணத்துக்காக ரத்தாகி பின்னர் நடந்தது. 2019-ல் வேலூர் லோக்சபா தொகுதியில் அதிகமான பணப் பட்டுவாடா நடந்த காரணத்தை முன்வைத்து அத்தொகுதி தேர்தலும் ரத்தானது. பின்னர் வேலூர் தொகுதி தேர்தல் நடத்தப்பட்டது. தற்போது அதே பாணியில் நெல்லை தொகுதி தேர்தல் ரத்தாகும் சாத்தியங்கள் இருக்கின்றன என்கின்றன தேர்தல் ஆணைய வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications