எங்களை 2 பேர் மிரட்டறாங்க.. போலீசும் நடவடிக்கை எடுக்கல.. 3 மகன்களுடன் தீக்குளிக்க முயன்ற தந்தை
நெல்லை: 3 மகன்களுடன் சேர்ந்து தந்தையும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் அம்பாசமுத்திரத்தையே அதிர வைத்துள்ளது.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள பகுதி சிவந்திபுரம் காமராஜர் நகர். இங்கு புறம்போக்கு இடத்தில் வசித்து வரும் தம்பதி துரை-திலகவதி.
இவர்களுக்கு மாரிச் செல்வம், வெற்றிவேல், அம்பேத் என்ற 3 மகன்கள் உள்ளனர். அனைவருமே பள்ளிக்கு செல்லும் 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள்தான்.
இந்நிலையில், 2 பேர் இவர்கள் குடியிருக்கும் இடத்தை ஆக்கிரமிப்பு செய்ததுடன், அங்கிருந்து அவர்களை காலி செய்யுமாறு மிரட்டி வந்துள்ளனர்.

எங்கே போவது?
குழந்தை குட்டிகளுடன் எங்கே போவது என்று தெரியாத அவர், போலீசில் சென்று, தங்களை மிரட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்துள்ளார்.

மனம் உடைந்த துரை
ஆனால் போலீசாரும் எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. இதனால் மனம் உடைந்த துரை, தனது 3 பிள்ளைகளை கூட்டிக் கொண்டு, வட்டாட்சியர் அலுவலகம் வந்தார்.

மீட்டனர்
பிறகு திடீரென கையில் கொண்டு வந்திருந்த மண்ணெண்ணையை மகன்களின் மேல் ஊற்றிவிட்டு, தன்மீதும் ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார். இதைக் கண்டு அங்கிருந்த பாதுகாப்பு போலீசார் விரைந்து வந்து அவர்களை மீட்டனர்.

தற்கொலை முயற்சி
தொடர்ந்து, "குடியிருக்க விடாமல் எங்களை 2 பேர் மிரட்டறாங்க.. போலீசும் நடவடிக்கை எடுக்கல" என்று அழுதுகொண்டே முறையிட்டனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications