'இந்துக்கள் சாதி கடந்து ஒன்றிணையணும்.. இல்லையெனில் ஆபத்து'.. பகீர் கிளப்பும் கிருஷ்ணசாமி
நெல்லை: புதிய தமிழகம் கட்சி சார்பில் நெல்லையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தலைமை தாங்கினார். இதனை தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டியளித்த கிருஷ்ணசாமி கூறியதாவது:-
இந்த ஆண்டு பொங்கல் பரிசு என்று எந்தவிதமான தொகையும் அறிவிக்கப்படவில்லை. வெறும் பொருட்கள் மட்டுமே அரசு கொடுக்கிறது. கடந்த அ.தி.மு.க அரசு வழங்கிய பொங்கல் சிறப்பு நிதியை தற்போது நிறுத்தி விட்டு பொருட்கள் மட்டும் வழங்கினால் ஏற்கனவே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் என்ன செய்வார்கள்?

2,500 ரூபாய் வழங்க வேண்டும்
எனவே பொங்கல் பொருட்களுடன் குறைந்தது 2,500 ரூபாயை வழங்க வேண்டும். இதுதான் இன்று தமிழக குடும்பம் இருக்கும் சூழ்நிலைக்கு போதுமானதாக இருக்கும். தமிழ்நாடு அரசு இதனை செய்ய வேண்டும். கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு இந்திய அரசு பெட்ரோலுக்கு 5 ரூபாயும், டீசலுக்கு 10 ரூபாயும் என்று விலையை குறைத்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு
இந்தியாவில் இருக்ககூடிய 21 மாநிலங்கள் தங்களுடைய பங்கிற்கு பெட்ரோல், டீசல் விலையை குறைத்துள்ளார்கள். தமிழ்நாடு அரசு மட்டும் ஏற்கனவே தேர்தல் நேரத்தில் கொடுத்த அறிக்கையின்படி பெட்ரோலுக்கு மட்டும் 4 ரூபாயை குறைத்து விட்டு டீசல் விலையை குறைக்கும் நடவடிக்கையை எடுக்கவில்லை.

இந்துக்கள் ஒன்றிணைய வேண்டும்
பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களை மிகவும் பாதித்துள்ளதால் மத்திய அரசு என்ன விலை குறைப்பு செய்துள்ளதோ அதனையே தமிழக அரசும் செய்ய வேண்டும். இப்போது இந்துக்கள் சாதிரீதியாக பிரிந்து கிடக்கின்றனர். இதனை விட்டுவிட்டு இந்துக்கள் அனைவரும் 'நாம் இந்து' என்ற அடையாளத்துடன் ஒன்றிணைய வேண்டும்.

இந்தியாவை பாதுகாக்க முடியும்
அப்போதுதான் வரக்கூடிய காலகட்டத்தில் இந்தியா பாதுகாக்கப்படும்; இந்தியாவை பாதுகாக்க முடியும். இல்லையென்றால் 1947-ம் ஆண்டு ஏற்பட்டதை போன்ற ஆபத்துகள் எந்த நேரத்திலும் இந்தியாவுக்கு வரக்கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளன. ஆகவே புதிய தமிழகம் கட்சி இந்துக்களை ஒன்றிணைக்கும் பணியை முன்னெடுத்து செல்கிறது. சமூக சிந்தனையுடன் இந்துக்களை முன்னெடுக்கும் பணியை செய்கிறோம். இதுதான் எங்களின் அடிப்படை செயல்பாடாக இருந்து வருகிறது. இவ்வாறு கிருஷ்ணசாமி தெரிவித்தார்,

யாருடன் கூட்டணி?
அப்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் புதிய தமிழகம் கட்சியின் கூட்டணி நிலைப்பாடு என்ன? என்று நிருபர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதில் அளித்த அவர், ''9 மாவட்டங்களில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்டதுபோல் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் தனித்து போட்டியிடுவோம்'' என்று கூறினார்.












Click it and Unblock the Notifications