தமிழகத்தில் மாற்றமா? நோ சான்ஸ்.. பகல் கனவில் பாஜக.. பிரதமர் மோடி, ஜேபி நட்டா மீது வைகோ ‛அட்டாக்’
திருநெல்வேலி: ‛‛மத ஒற்றுமைக்கு ஆபத்தாக பேரபாயமாக நரேந்திரமோடி அரசும், அரசை இயக்கும் ஆர்எஸ்எஸ் பயங்கரவாதமும் திகழ்கிறது. தமிழகத்தில் மாற்றம் நிகழும் என சொல்லும் ஜேபி நட்டாவின் கருத்து பட்ட பகல் கனவு. 2024ல் திமுக தலைமையிலான இப்போதைய கூட்டணியே மீண்டும் வெற்றி பெறும்'' என திருநெல்வேலியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆக்ரோஷமாக தெரிவித்தார்.
திருநெல்வேலி பொதிகை நகரில் மதிமுக நிர்வாகியும், முன்னாள் மாவட்ட உறுப்பினருமான டானியல் ஆபிரகாம் இல்லத்தில் திருமண நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டு மணமக்கள் இமானுவேல் - சாமிலி தம்பதியை வாழ்த்தினார். இதனை தொடர்ந்து வைகோ பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
மிகுந்த கவலையில் முதல்வர்.. கோவை கார் வெடிப்பில் அரசியல் செய்வது தவறு..போலீசுக்கு வைகோ சப்போர்ட்
புல்டோசர் கொண்டு நொறுக்க...
இந்திய உப கண்டத்தில் பல்வேறு மதம், மொழி, தேசிய இன அடையாளங்கள் உள்ளது. இதனை அனைத்தையும் புல்டோசர் போட்டு நொறுக்கிவிட்டு சனாதன சக்திகள் இந்துத்துவா கொள்கையை மாத்திரம் நிலைநாட்ட வேண்டும் என பாஜகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் முயற்சித்து வருகிறது. இதுபோன்ற நிலை ஏற்பட்டால் இந்தியாவின் ஒருமைப்பாடு ஒடிந்து சிதைந்து விடும்.
நரேந்திர மோடி பேராபாயம்
மத ஒற்றுமைக்கு ஆபத்தாக பேரபாயமாக நரேந்திரமோடி அரசும், அரசை இயக்கும் ஆர்எஸ்எஸ் பயங்கரவாதமும் திகழ்கிறது. இதனை எதிர்த்து போராடும் பெரும் சக்தியாக தமிழகம் திகழ்கிறது. திராவிட மாடல் ஆட்சியை நடத்தும் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி ஒற்றுமை ஒருமைப்பாட்டை நிலைநாட்டும். அனைத்து மத நம்பிக்கைகளுக்கும் இடம் கொடுத்து சமத்துவத்தை நிலைநாட்டும் முறையில் இயங்கி கொண்டிருக்கிறது.
பகல் கனவில் ஜேபி நட்டா
இந்தியாவின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் வழிகாட்டும் வகையில் தெற்கே இருக்கும் தமிழகம் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தின் திராவிட மாடல் ,ஒற்றுமை கோட்பாட்டை மற்ற மாநிலங்களும் பின்பற்றும் நிலை ஏற்பட்டே தீரும். தமிழகத்தில் மாற்றம் நிகழும் என ஜேபி நட்டாவின் கருத்து பட்ட பகல் கனவு. அது ஒரு காலமும் நடக்காது. தமிழகத்தில் அவர்கள் (பாஜக) கால் ஊன்ற முடியாது. நட்டா சொல்வதைப் போல் என்றும் நடக்காது.
பாஜக ஊடுருவ முடியாது
2024ல் திமுக தலைமையிலான இதே கூட்டணி மீண்டும் வெற்றி பெறும்.பாஜகவின் கொள்கைகள் திராவிட இயக்க மண்ணில் ஊடுருவ முடியாது.சேது சமுத்திரத் திட்டம் தேவை என்பதை பேரறிஞர் அண்ணா சொன்னார். நானும் பல கட்ட போராட்டம் நடத்தி இருக்கிறேன்.சேது சமுத்திரத் திட்டம் என்பது அவசியம்.அது தென்னாட்டு வளர்ச்சிக்கும் இந்தியாவின் வளர்ச்சிக்கும் சேது சமுத்திரத் திட்டம் வழிவகை செய்யும்'' என்றார்.