பிரிட்டனை பதறவைத்த நெல்லை சீமை! ‛திருநெல்வேலி எழுச்சி’யை மறக்க முடியுமா? அலறிய ஆங்கிலேயர்
திருநெல்வேலி: ஆகஸ்ட் 15.. ஆங்கிலேயர்களை விரட்டியடித்து சுதந்திர காற்றை நாம் சுவாசித்த நாள்.. ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15ம் தேதி நாம் சுதந்திர தினம் கொண்டாடி வருகிறது. இந்திய சுதந்திரத்துக்காக காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஏராளமானவர்கள் உயிர் தியாகம் செய்துள்ளனர். பலரும் ஆங்கிலேயர்களின் சித்ரவதைகளுக்கு உள்ளாகி உள்ளனர். இதில் பிரிட்டன் நாடாளுமன்றத்தை அதிர வைத்த ‛திருநெல்வேலி எழுச்சியின்' புல்லரிக்கும் பின்னணியை இங்கு பார்ப்போம்.
திருநெல்வேலி.. இப்போது நெல்லை எனவும் அழைக்கப்பட்டு வருகிறது. வற்றாத ஜீவ நதியை சுற்றி இயற்கை எழில் மிக்க மாவட்டமாக இருந்து வரும் இந்த திருநெல்வேலிக்கு வரலாற்றில் முக்கிய இடம் உண்டு. அதுவும் குறிப்பாக இந்திய சுதந்திர போராட்டத்தை எடுத்து கொண்டால் தமிழகத்தை திருநெல்வேலியை ஒதுக்கவே முடியாது. ஏனென்றால் வீரம் செறிந்து, துணிவு மிக்க பலர் சுதந்திர போராட்ட தியாகிகள் பிறந்தது இந்த திருநெல்வேலி சீமையில் தான்.

திருநெல்வேலி சீமை என்பது ஒருகாலத்தில் தற்போதைய திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டத்தை உள்ளடக்கி இருந்தது. இங்கு தான் சுதந்திர போராட்ட வீரர்கள் பூலித்தேவன், ஒண்டிவீரன், வீரன் அழகுமுத்துகோன், வீரபாண்டிய கட்டபொம்மன், வீரன் சுந்தரலிங்கம், கப்பலோட்டிய தமிழன் வஉ சிதம்பரம் பிள்ளை, பாரதியார், வாஞ்சிநாதன் உள்பட இன்னும் பல தியாகிகள் பிறந்து ஆங்கிலேயர்களை எதிர்த்து நின்றனர்.
இதில் பாரதியார் பிறந்த எட்டயப்புரம், வஉசி பிறந்த ஒட்டப்பிடாரம், வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த பாஞ்சாலங்குறிச்சி, வீரன் அழகுமுத்துகோன் பிறந்த கட்டாலங்குளம், வீரன் சுந்தரலிங்கம் பிறந்த கவர்ணகிரி உள்ளிட்டவை தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது. பூலித்தேவன், ஒண்டிவீரன் பிறந்த ஊரான நெற்கட்டும்செவல், வாஞ்சிநாதன் பிறந்த ஊரான செங்கோட்டை உள்ளிட்டவை தற்போதைய தென்காசி மாவட்டத்தில் உள்ளது.
இப்படியாக இந்திய சுதந்திரத்துக்காக பாடுபட்டு உயிர் துறந்த தியாகிகளின் பிறப்பிடமாக தென்காசி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களை உள்ளடக்கிய திருநெல்வேலி சீமை உள்ளது. சரி இது நம்மில் பலருக்கும் தெரியும். அதேபோல் மேற்கூறிய சுதந்திர போராட்ட வீரர்களின் போராட்ட குணம் மற்றும் அவர்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிராக எப்படி செயல்பட்டனர்? என்பதும் நமக்கு தெரியும்.

ஆனால் இன்றும் கூட பலருக்கும் தெரியாத ஒரு விஷயம் உள்ளது. அதுதான் ஆங்கிலேயர்களுக்கு எதிராக நடந்த 1908 ம் ஆண்டு நடந்து ‛திருநெல்வேலி எழுச்சி' (Tirunelveli Riot). இந்த போராட்டம் திருநெல்வேலி சீமையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. ஒவ்வொரு மக்களின் மனதிலும் சுதந்திர காற்றை சுவாசிக்க வேண்டும் என்ற எண்ண உணர்வை தீவிரமாக்கியது. அதுமட்டுமின்றி பிரிட்டன் நாடாளுமன்றத்தில் இந்த ‛திருநெல்வேலி எழுச்சி' போராட்டம் விவாதிக்கப்பட்டது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
ஆம்.. உண்மையிலேயே நம் நாட்டை அடக்கி ஆண்ட ஆங்கிலேயர்கள் பெரிதும் அச்சப்பட்ட போராட்டம் தான் இந்த ‛திருநெல்வேலி எழுச்சி' போராட்டம். இந்த ‛திருநெல்வேலி எழுச்சி' போராட்டம் என்பது என்ன? இது நடந்தது எப்படி? இந்த ‛திருநெல்வேலி எழுச்சி' போராட்டம் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தியது என்பது பற்றி இங்கே விரிவாக பார்க்கலாம் வாங்க...
இந்திய சுதந்திர போராட்ட தலைவர்களில் ஒருவரான விபின் சந்திரபால் ஆங்கிலேயர்களுக்கு எதிராக புரட்சி செய்து வந்தார். 1907 ல் வங்காளத்தில் சுதந்தரித்துக்காக போராடி ‛வங்தே மாதரம்' கோஷமிட்ட அரவிந்த் கோஷ் என்பவரை ஆங்கிலேயர்கள் கைது செய்தனர். இவருக்கு எதிராக சாட்டி சொல்ல மறுத்த சுதந்திர போராட்ட வீரர் பிபின் சந்திரபால் மறுத்துவிட்டார். இதனால் பிபின் சந்திரபால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பிறகு 1908 ம் ஆண்டு மார்ச் 8 ம் தேதி விடுவிக்கப்பட்டார். இந்த தினத்தை சுயராஜ்ய நாளாக அறிவித்து சுதந்திர போராட்ட வீரர்கள் அனைவரும் இணைந்து விபின் சந்திரபாலுக்கு விழா எடுக்க முடிவு செய்தனர். இதற்கு ஆங்கிலேயர்கள் அனுமதி மறுத்தனர்.

ஆனாலும் சுதந்திர போராட்ட தலைவர்கள் பின்வாங்கவில்லை. விபின் சந்திரபால் விடுதலை தினமான மார்ச் 8 ம் தேதியை சுயராஜ்ய நாளாக கொண்டாடும் வகையில் விடுதலைப் போராட்ட வீரர்கள் திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றங்கரையில் கூடி நிகழ்ச்சி எடுத்தனர். இது ஆங்கிலேயர்களை கோபப்படுத்தியது. மேலும் தூத்துக்குடியில் விபின் சந்திரபால் விடுதலை விழாவை கொண்டாடிய பத்மநாப அய்யங்கார், வஉசி, சுப்பிரமணிய சிவா ஆகியோர் திருநெல்வேலியிலும் எழுச்சி உரையாற்றினர்.
இதையடுத்து தடையை மீறிய குற்றத்துக்காக திருநெல்வேலி கலெக்டர் விஞ்ச், வஉசியை நேரில் அழைத்தார். 1908 மார்ச் 12ம் தேதி கலெக்டர் விஞ்ச்சை, வஉசி சந்தித்தார். அப்போது அவரை ஆங்கிலேயர்கள் கைது செய்தனர். பத்மநாப அய்யங்கார், சுப்பிரமணிய சிவா ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இதன் எதிரொலியாக திருநெல்வேலியில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர்.
அதாவது வஉசி உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்ட பிறகு மார்ச் 13ம் தேதி திருநெல்வேலி பாலம் ரயில் நிலையம் அருகேயுள்ள பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன. போக்குவரத்து முடக்கப்பட்டது. இந்து கல்லூரிகளுக்குள் நுழைந்து மாணவர்களையும் போராட்டத்தில் ஈடுபடுத்தினர். திருநெல்வேலி நகராட்சி அலுவலக கட்டட சுவர் இடிக்கப்பட்டதோடு, ஆவணங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. தபால் நிலையம் தீவைக்கப்பட்டது. காவல்நிலையம், நீதிமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. மண்ணெண்ணெய் கிடங்கு தீவைக்கப்பட்டது. தச்சநல்லூரில் குப்பை வண்டிகள், தெருவிளக்குகள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. அதன்பிறகு தூத்துக்குடியிலும் கலவரம் வெடித்தது. ‛வந்தே மாதரம்' முழக்கமிடப்பட்டது.

‛வந்தே மாதரம்' சொல்ல தடை விதிக்கப்பட்டு ஒட்டுமொத்த நாடு முழுவதும் வாய்ப்பூட்டு சட்டம் அமலில் இருந்த காலத்தில் நம் நாட்டின் கடைக்கோடியில் உள்ள திருநெல்வேலியில் சாதி, மத உணர்வுகளை மக்கள் விடுதலை வேட்கையில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து வெகுண்டெழுந்ததால் ஆங்கிலேயர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அதுமட்டுமின்றி மக்கள் வஉசியின் சுதேசி இயக்கம் மூலம் அந்திய பொருட்களை புறக்கணிக்கும் பிரசாரம் தீவிரமாக இருந்த காலம் அது.
இதனால் குதிரை வண்டிக்காரர்கள், சலவை, சவரத்தொழிலாளர்கள் ஆங்கிலேயர்களுக்கு பணியாற்ற மறுத்தனர். ஆங்கிலேயர்களின் உடைகளை துவைக்க சலவை தொழிலாளர்கள் மறுத்தனர். சவரத்தொழிலாளர்கள் ஆங்கிலேயர்களுக்கு சவரம் செய்யவும், முடிவெட்டவும் மறுப்பு தெரிவித்தனர். குதிரை வண்டிக்காரர்கள் ஆங்கிலேயர்களை அழைத்து செல்ல மறுத்துவிட்டனர்.
இதனால் கோபத்தின் உச்சிக்கே ஆங்கிலேயர்கள் சென்றனர்.
இதனால் ஆங்கிலேயர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 4 பேர் வீரமரணமடைந்தனர். மேலும் ஆங்கிலேயர்கள் கடும் அடக்குமுறையை கையில் எடுத்தனர். இந்த விவகாரம் என்பது பிரிட்டன் நாடாளுமன்றத்தில் புயலை கிளப்பியது. திருநெல்வேலி எழுச்சி போராட்டத்தில் 4 பேர் கொல்லப்பட்டது, பொது சொத்துகள் சூறையாடப்பட்டது பற்றிய கேள்விகள் எழுப்பப்பட்டன.

கலவரத்தில் ஈடுபட்டதாக 50-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 27 பேருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அனைத்துத் தரப்பு மக்களும் இணைந்து நெல்லையில் நடத்திய 'திருநெல்வேலி எழுச்சி' போராட்டம் பிற்காலத்தில் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் ‛திருநெல்வேலி எழுச்சி' போராட்டம் என்பது ஆங்கிலேயர்களுக்கு எதிரான பல போராட்டங்களுக்கு அடிப்படையாக இருந்தது. அதாவது இந்த போராட்டத்துக்கு பிறகு தான் ஏராளமானவர்கள் சுதந்திர போராட்டத்துக்காக ஆங்கிலேயர்களை எதிர்த்து வலிமையாக போராட தொடங்கினர்.
ஒவ்வொரு தலைவர்களின் கீழும் அணியாக திரண்டு ஒன்றாக இணைந்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக கிளர்ச்சி செய்தனர். 1908 ம் ஆண்டு ஏப்ரல் 13ம் தேதி நடந்த ‛திருநெல்வேலி எழுச்சி' என்பது இன்றும் ஆங்கிலேயர்களின் கொட்டத்தை அடக்கிய தினமாக இருக்கிறது. நூற்றாண்டையும் தாண்டிய இந்த ‛திருநெல்வேலி எழுச்சி' தற்போதும் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 13 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருவதை இந்த சுதந்திர தினத்தில் நினைவு கொண்டு உயிர் தியாகம் செய்த தியாகிகளை நினைவு கூறுவோம்.












Click it and Unblock the Notifications