ஆடா? மாடா? மாணவர்களை அடித்துச் சித்திரவதை! நெல்லையில் ‘நீட்’ மைய கொடுமை! அதிகாரிகள் எடுத்த ஆக்சன்!
நெல்லை: திருநெல்வேலியில் நீட் தேர்வு பயிற்சி மையத்தில் மாணவ மாணவிகளை கொடூரமாக தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்திய நிலையில் இன்று சமூக நலத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர்வதற்காக மத்திய அரசு சார்பில் தேசிய தேர்வு முகமை மூலம் நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. சிபிஎஸ்சி எனப்படும் மத்திய பாடத்திட்டத்தை தவிர பிற பாடத்திட்டங்களில் படிக்கும் மாணவர்கள் இந்த தேர்வுகளில் வெற்றி பெற முடியாத நிலை உள்ளது.

இதன் காரணமாக நீட் தேர்வு பயிற்சி மையங்களில் படித்து வருகின்றனர். இதன் காரணமாக புற்றீசல்கள் போல நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான நீட் தேர்வு பயிற்சி மையங்கள் முளைத்திருக்கிறது.
முறையான பயிற்சி இருக்கிறதோ இல்லையோ அதிக அளவு கட்டணக் கொள்ளையில் நீட் தேர்வு பயிற்சி மையங்கள் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் எப்படியாவது மருத்துவர் ஆகிவிட வேண்டும் என மாணவர்களும் தங்கள் பிள்ளைகளை மருத்துவர்கள் ஆக்கிவிட வேண்டும் என பெற்றோர்களும் கடன் வாங்கியாவது அவர்களை நீட் தேர்வு பயிற்சி மையங்களுக்கு அனுப்பி படிக்க வைத்து வருகின்றனர்.
தமிழகத்தில் மட்டுமே சுமார் 800-க்கும் மேற்பட்ட நீட் தேர்வு பயிற்சி மையங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் கேரளாவை சேர்ந்த ஜலாலுதீன் அகமத் வெட்டியாடன் என்பவர் சென்னையில் உள்ள பிரபல பயிற்சி மையத்தில் பயிற்சியாளராக பணியாற்றி வந்திருக்கிறார். இந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருநெல்வேலி வந்த அவர் ஜல் மீட் அகாடமி என்ற பெயரில் பயிற்சி மையத்தை நடத்தி வந்துள்ளார்.
இந்த பயிற்சி மையத்தில் படித்த 12 பேர் கடந்த ஆண்டு அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் பிடித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அங்கு ஏராளமான மாணவ மாணவிகள் சேர்ந்துள்ளனர். அவர்களிடம் 60 ஆயிரம் முதல் 80 ஆயிரம் வரை கட்டணம் வசூல் செய்யப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இங்கு புதுக்கோட்டை, மதுரை, திண்டுக்கல், தேனி, நாகர்கோவில், திருநெல்வேலி, இராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் படித்து வரும் நிலையில் ஆண்களுக்கும், ஆண்களுக்கும் தனித்தனியாக பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் 12 மணி நேரத்திற்கு மேலாக பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவதால் மாணவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளானதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வகுப்பறையில் மாணவன் ஒருவன் தூங்கியதாக கூறப்படுகிறது. இதனால் அந்த மாணவனுக்கு உடலில் பல இடங்களில் ரத்த காயம் ஏற்பட்டு இருக்கிறது. மேலும் செருப்பை ஒழுங்காக அடுக்கவில்லை என மாணவி ஒருவர் மீது செருப்பை வீசி உள்ளார் ஜலாலுதீன்.
இந்த நிலையில் மாணவர்கள் அனுபவித்து வரும் கொடுமை குறித்து அங்கு பணிபுரியும் பெயர் சொல்ல விரும்பாத ஒருவர் இந்த சிசிடிவி காட்சிகளை காவல்துறையினருக்கு அனுப்பி புகார் தெரிவித்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இதுதொடர்பாக ஜலால் அகமதுவிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே நீட் தேர்வு பயிற்சி மைய உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில் இது தொடர்பாக நேற்று மனித உரிமை ஆணைய அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்நிலையில் நீட் தேர்வு பயிற்சி மையத்தில் இன்று சமூக நலத்துறை அதிகாரிகள் நேரடியாக விசாரணை நடத்தினர்.
அதில் மாணவ மாணவிகளுக்கு உரிய வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதா? முறையான அனுமதி பெறப்பட்டிருக்கிறதா? அரசின் விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறதா? என ஆய்வு நடத்தப்பட்டது. மேலும் மாணவ மாணவிகளை தனியாக அழைத்து நீட் தேர்வு மைய உரிமையாளரின் அத்துமீறல்கள் குறித்து கேட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த அறிக்கை தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்ட பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications