காலையில் டீ குடித்தார் ஓவர்.. குளிக்க கிளம்புறாங்க ஓவர்.. குற்றாலம் ரிசார்ட்டில் குவிந்த ஊடகத்தினர்
Recommended Video
நெல்லை: டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் பழைய குற்றாலம் பகுதியில் உள்ள ஹை வியூ என்ற ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தகுதி நீக்க வழக்கில் நாளை சென்னை உயர்நீதிமன்றத்தின் மூன்றாவது நீதிபதி தீர்ப்பு வழங்க உள்ளார் என்று எதிர்பார்ப்பு உள்ள நிலையில் இவர்கள் திடீரென நேற்று இரவே குற்றாலத்திற்கு வந்து தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்கள் மற்றும் அதிமுகவில் உள்ள தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் நால்வர், என மொத்தம் 22 பேர் இந்த ரிசார்ட்டில் தங்க வைக்கப்படுள்ளதாக கூறப்பட்டது.
[குரல் என்னோடதில்லைனு சொல்றாரே.. குழந்தை இல்லைனு சொல்ல ஏன் மறுக்கிறார்- தங்கதமிழ்செல்வன் கேள்வி]
பத்திரிகையாளர் குவிந்தனர்
ஆனால் இன்று காலை நிலவரப்படி மொத்தம் 20 பேர் வந்துள்ளதாகவும், இன்னும் இரண்டு பேர் வர இருப்பதாகவும், தங்க தமிழ்ச்செல்வன் அளித்த பேட்டியில் தெரிவித்தார். இந்த நிலையில் நேற்று இரவு முதலே பத்திரிகையாளர்கள் அந்த ரிசார்ட்டை சுற்றி குவிந்துள்ளனர். இதற்காக நெல்லை, மதுரையிலிருந்து சீனியர் நிருபர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
கண்காணிப்பு
யார் யார் உள்ளே வருகிறார்கள், வெளியே செல்கிறார்கள், உள்ளே என்ன நடவடிக்கைகள் நடந்து வருகின்றன, என்பதை பத்திரிகையாளர்கள் கண்காணித்து வருகிறார்கள். அவ்வப்போது தங்க தமிழ்ச்செல்வனிடம் தொடர்புகொண்டு ரிசார்ட் உள்ளே நடக்கும் நிலவரங்களை கேட்டிருக்கிறார்கள்.
டீயா, காபியா
ரிசார்ட் உள்ளே காலையில் டீ குடித்தார்களா, காபி குடித்தார்களா, சிற்றுண்டி என்ன சாப்பிட்டார்கள் என்பது போன்ற தகவல்களை பத்திரிக்கையாளர்கள் சேகரித்து வருகிறார்கள். இன்று காலை ரிசார்ட்டில் இருந்து 20 பேரும், தாமிரபரணி புஷ்கரம் நிகழ்ச்சியில் பங்கேற்று குளிப்பதற்காக காரில் கிளம்பி சென்றனர்.
வீடியோ காட்சிகள்
அவர்கள் கிளம்புவது, வெளியே செல்வது உள்ளிட்டவற்றை அங்குள்ள பத்திரிக்கையாளர்கள் அவசர அவசரமாக தங்களது செல்போன் கேமராவிலும், வீடியோ கேமராக்களிலும் பதிவு செய்து கொண்டனர். இதோ கிளம்பி விட்டனர்.. இந்த ஊருக்கு சென்று கொண்டுள்ளனர்.. என்பது போன்ற தகவல்களை பத்திரிக்கையாளர்கள் பிரேக்கிங் செய்திகளாக கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். அதிமுக எம்எல்ஏக்கள் கூவத்தூரில், தங்கவைக்கப்பட்டிருந்த போதும் பத்திரிகையாளர்களுக்கு இது போன்ற பணிகள் ஒதுக்கப்பட்டன. இப்போது மீண்டும் ரிசார்ட் அரசியலோடு, பிரேக்கிங் செய்தி கலாச்சாரமும் ஆரம்பித்துவிட்டது.