நெல்லை: 480 டன் .. 30 லாரிகள்.. மீண்டும் கேரளாவுக்கே அனுப்பி வைக்கப்பட்ட மருத்துவ கழிவுகள்!
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் 6 இடங்களில் சட்டவிரோதமாக கொட்டப்பட்டிருந்த கேரள மாநில கழிவுகள் நேற்று முன் தினம் 18, நேற்று 12 என மொத்தம் 30 லாரிகளில் முழுமையாக மீண்டும் கேரளா அனுப்பி வைக்கப்பட்டுள்ளன; கழிவுகள் கொட்டப்பட்ட இடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு முழு சுகாதார பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று நெல்லை மாவட்ட நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தம் 480 டன் மருத்துவ கழிவுகளை அகற்றி மீண்டும் கேரளாவுக்கே கொண்டு செல்லப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் திருநெல்வேலி அருகே உள்ள சுத்தமல்லி, கோடகநல்லூர், பழவூர், கொண்டாநகரம் உள்ளிட்டவைகளை கேரளா மாநில அரசு, அம்மாநிலத்தின் மருத்துவ கழிவுகளைக் கொட்டிவிட்டு செல்லும் குப்பைக் கிடங்காக பயன்படுத்தி வந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கேரளா மாநிலத்தில் இருந்து உணவு, மருத்துவம், பிளாஸ்டிக் கழிவுகளை இப்பகுதிகளை கொட்டுவது வாடிக்கையாக இருந்து வந்தது.

இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் சுத்தமல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கில் தமிழ்நாட்டின் இடங்களை குப்பை கிடங்காக பயன்படுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்த இடைத்தரகர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர். அத்துடன் திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் சார்பில், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திலும் புகார் தெரிவிக்கப்பட்டது.

தேசிய பசுமைத் தீர்ப்பாயமும், தமிழ்நாட்டில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளை கேரளா அரசு உடனடியாக அகற்றி தங்களது மாநிலத்துக்கே கொண்டு செல்ல வேண்டும் என அதிரடியாக உத்தரவிட்டது. இந்த உத்தரவின் அடிப்படையில் கேரளா மாநில அதிகாரிகள் குழு திருநெல்வேலியில் முகாமிட்டது. திருநெல்வேலி பகுதியில் நேற்று முன்தினமும் நேற்றும் கொட்டப்பட்ட அனைத்து கழிவுகளையும் மொத்தம் 30 லாரிகளில் ஏற்றிக் கொண்டு கேரளாவுக்கே சென்றனர் கேரளா அதிகாரிகள்.

திருநெல்வேலி பகுதியில் மொத்தம் 480 டன் மருத்துவ கழிவுகள், கேரளாவில் கொட்டப்பட்டிருந்தன. இவை அனைத்தும் அகற்றப்பட்டு அப்பகுதியில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தூய்மைப்படுத்தப்பட்டுள்ளதாக திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே தமிழ்நாட்டில் கேரளா மாநில மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டதற்கு கேரளா உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது. அத்துடன் மருத்துவக் கழிவுகளை அகற்ற கேரளா மாநில அரசிடம் உரிய திட்டம் இல்லை எனவும் அம்மாநில உயர்நீதிமன்றம் கடுமையாக விமர்சித்திருந்ததது.













Click it and Unblock the Notifications