பக்ரீத் பண்டிகை! ஆட்டின் விலை ரூ 70 ஆயிரமா? அதென்ன கோங்கு ரகம்? மேலப்பாளையத்தில் கடும் போட்டி
நெல்லை: பக்ரீத் பண்டிகையையொட்டி மேலப்பாளையத்தில் கோங்கு ரக ஆட்டை ரூ 70 ஆயிரம் கொடுத்து வாங்க கடும் போட்டி நிலவியது. அது மட்டுமல்லாமல் ஆட்டு சந்தையில் ரூ 8 கோடி வரை ஆடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
முஸ்லீம் சகோதர, சகோதரிகள் கொண்டாடும் பக்ரீத் பண்டிகை வரும் திங்கள்கிழமை கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையின் போது ஏழைகளுக்கு தங்கள் வசதிக்கேற்ப இறைச்சியை தானமாக வழங்குவர்.

இந்த பண்டிகையையொட்டி ஆடு, மாடுகளை வெட்டி, அதன் கறியை 3 பங்குகளாக பிரிப்பர், முதல் பங்கு தமது குடும்பத்தினருக்கும், 2ஆவது பங்கு உறவினர்களுக்கும், 3ஆவது பங்கு ஏழை எளியவர்களுக்கும் கொடுக்கப்படுவது வழக்கம்.
இஸ்லாமியர்களின் வழக்கப்படி இதை குர்பானி என்பார்கள். இந்த குர்பானி கொடுப்பதற்காக ஆடுகள் வாங்க நெல்லை மாவட்டத்தில் உள்ள மேலப்பாளையம் சந்தைக்கு ஏராளமானோர் கடந்த செவ்வாய்கிழமை வருகை தந்தனர். தென் மாவட்டங்களில் எட்டயபுரம் சந்தைக்கு அடுத்தபடியாக பிரசித்தி பெற்ற மேலப்பாளையம் கால்நடை சந்தையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை ஆடுகள் விற்பனை நடக்கும்.
இந்த சந்தைக்கு நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் மட்டுமின்றி மதுரை, தேனி, திண்டுக்கல், கேரளா உள்ளிட்ட இடங்களில் இருந்து வியாபாரிகள் ஆடுகளை விற்பனைக்குக் கொண்டு வருவது வழக்கம். இந்த வகையில் இந்த பக்ரீத் பண்டிகையையொட்டியும் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
இந்த மேலப்பாளையம் சந்தையில் வெள்ளாடு, செம்மறி ஆடு, வேலி ஆடு, பொட்டு ஆடு உள்ளிட்ட பல்வேறு ரக ஆடுகள் விற்பனைக்கு வந்தன. நாட்டு ரக ஆட்டுக்குட்டிகள் ரூ 2 ஆயிரம் முதலும் சில ஆடுகள் ரூ 30 ஆயிரம் வரையும் விற்கப்பட்டன. செம்மறி ஆடுகளை பொதுமக்கள் போட்டி போட்டுக் கொண்டு வாங்கினர்.
அது போல் அங்கு கோழிகள், கருவாடு விற்பனையும் இருந்தது. எடைக்கு ஏற்ப ஆடுகளின் விலையை வியாபாரிகள் நிர்ணயம் செய்தனர். அதிகபட்சமாக ஒரு ஆடு ரூ 80 ஆயிரத்திற்கு விற்பனையானது. மதுரையை சேர்ந்த கிரி என்பவரின் ஆடுகள் ரூ 60 ஆயிரம் மற்றும் ரூ 70 ஆயிரத்திற்கு விலை போனது.
மூன்றரை அடி மட்டுமே உயரம் கொண்ட கோங்கு வகை ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன. இந்த ஆடுகள் ரூ 60 ஆயிரம் முதல் ரூ 70 ஆயிரம் வரை விற்கப்பட்டன. மேலப்பாளையத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு ரூ 3 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகின.
கடையத்தில் ரூ 1 கோடிக்கு விற்பனை நடந்தது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த கோங்கு ஆடுகள் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவை. இது தோற்றத்தில் நாட்டு ஆடுகளை விட அதிக எடை கொண்டு வளரும். ஒரு வயது கோங்கு ஆட்டின் உடல் எடை 2 வயது நாட்டு ஆட்டின் எடைக்கு சமமாக இருக்கும்.
இந்த ஆட்டின் முகம் வளைவாகவும் காதுகள் பெரியதாகவும் இருக்கும். இது தட்பவெப்பநிலையை தாங்காமல் இதன் குட்டிகள் இறக்க வாய்ப்பிருக்கிறது. இதுதான் இதில் உள்ள மைனஸ். இதை எல்லாம் தாண்டி இதை வளர்த்தோமேயானால் நல்ல லாபம் கிடைக்கும்.
ஆட்டுக் குட்டியின் விலை கர்நாடகாவில் குறைவாகத்தான் இருக்கும். ஆனால் தமிழகத்திற்கு கொண்டு செல்லும் போதுதான் போக்குவரத்து உள்ளிட்ட செலவினங்களால் அதன் விலை அதிகரிக்கப்படுகிறது. நல்ல போஷாக்கான உணவளித்தால் ஒரு ஆடு 4 ஆண்டில் 100 கிலோ கூட எடை அதிகரிக்கும்.












Click it and Unblock the Notifications