என்னது சாவிய காணோமா? உடைக்கப்பட்ட பூட்டு.. ஸ்ட்ராங் ரூம் முன்னர் பஞ்சாயத்து..! நெல்லையில் பரபரப்பு
நெல்லை: நெல்லை மக்களவை தொகுதிக்குட்பட்ட அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதிக்கான வாக்கு இயந்திரங்கள் வைத்திருந்த ஸ்ட்ராங்க் ரூம் சாவி தொலைந்ததால் பூட்டு உடைக்கப்பட்ட நிலையில், இதனைக் கண்டித்து அரசியல் கட்சி வேட்பாளர்களின் முகவர்கள் முழக்கம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

ஜூன் ஒன்றாம் தேதி இறுதி கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கையானது அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் நடைபெற்று வருகிறது.
நெல்லை தொகுதியில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸ், அதிமுக வேட்பாளர் ஜான்சி ராணி, பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சத்யா ஆகியோர் களம் கண்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட ஆறு சட்டப்பேரவை தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய வாக்குப்பதிவு இயந்திரங்கள் நெல்லை அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டிருந்தது.
அங்கு 24 மணி நேரமும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில் சுழற்சி முறையில் அரசியல் கட்சிகளின் முகவர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. இதற்காக ஒரு அறையும் தபால் வாக்கு எண்ணும் பணிக்காக 6 மேசைகளும் அமைக்கப்பட்டிருந்தது.
காலை 6.30 மணியிலிருந்து தேர்தல் அதிகாரிகளும் வாக்குச்சாவடி முகவர்களும் வாக்கு எண்ணும் மையத்திற்கு வர தொடங்கினர். அவர்கள் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து வாக்கு எண்ணிக்கைக்காக ஸ்ட்ராங் ரூம் எனப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்களை வைத்திருந்த அறைக்கு முகவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். தொடர்ந்து ஐந்து சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்கு பதிவு இயந்திரங்கள் எடுக்கப்பட்டன.
இந்த நிலையில் அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்திருந்த ஸ்ட்ராங் ரூமுக்கான சாவி இல்லை அது தொலைந்து விட்டது என அதிகாரிகள் கூறினர். இதனால் வேட்பாளர்களின் முகவர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதை அடுத்து அவர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து ஸ்ட்ராங் ரூமின் சாவி இல்லாததால் பூட்டு உடைக்கப்பட்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கைக்காக எடுத்துச் செல்லப்பட்டன. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications